தென்னிந்தியத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காதல் ஜோடிகளாக இருந்து, கல்யாணம் செய்து கொண்டு, அடுத்த சில வருடங்களிலேயே விவாகரத்து செய்தவர்கள் நாகசைதன்யா, சமந்தா.
இவர்களது பிரிவு பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்க, ஒரு சமயத்தில் இருவருமே ஒரே நேரத்தில் தங்களது பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன்பிறகு இருவரும் தங்களது பிரிவைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டதில்லை.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சமந்தா பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார் நாகசைதன்யா. திரையில் அவருக்குப் பொருத்தமான ஜோடி யார் என்று கேட்டதற்கு, “சமந்தா” என்று பதிலளித்துள்ளார். நாகசைதன்யா, சமந்தா இருவரும் இணைந்து 'ஏ மாய சேசவே, மனம், மஜ்லி' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
பிரிவுக்குப் பிறகு சமந்தா, 'புஷ்பா' படத்தில் ஒரு கிளாமர் பாடலுக்கு நடனமாடி வரவேற்பைப் பெற்றார். நாகசைதன்யா அவரது அப்பா நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்த 'பங்கார்ராஜு' தெலுங்குப் படம் பொங்கலுக்கு வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது.