தினமலர் விமர்சனம்
இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி காதாநாயகியாக நடித்திருக்கும் கலைமாமணி நடிகை ஜெயசித்ரா கதை, திரைக்கதை எழுதி இருப்பதுடன் தயாரித்து, இயக்கவும் செய்து, தன் 21 வயது மகன் அம்ரேஷ் கணேஷையேகதாநாயகராகவும், இசையமைப்பாளராகவும் அறிமுகம் செய்திருக்கும் படம் நானே என்னுள் இல்லை என்பது ஹைலைட்.
தொப்பையும் தொந்தியுமாக இருக்கும் ஹீரோ அம்ரேஷ் கணேஷ், நாசர் - சரண்யா தம்பதியின் மகன். கோபக்கார அப்பா - குணவதி அம்மா இவர்களின் செல்ல மகனான அம்ரேஷை படிக்கும் காலத்தில் காதலிக்கிறார் உடன் படிக்கும் நாயகி ஆர்யா மேனன். ஆனால் ஆர்யா மேனனின் அம்மா குயிலிக்கோ மகளை பெரிய ஸ்டார் ஆக்க வேண்டுமென்பது லட்சியம். அதன் விளைவு, இவர்களது காதலுக்கும், நட்புக்கும் குயிலியும் - அவரது மகன் சந்துருவும் நந்தியாக இருந்து அம்ரேஷை அடித்து உதைத்து அனுப்புகின்றனர். இதனால் வெறுத்துப் போய் வாழும் அம்ரேஷூக்கு எதிர்பாராமல் அடிக்கிறது லக்கி ஜாக்பாட். இவரை ஏதேச்சையாக பார்க்கும் சினிமா இயக்குனர் பி.வாசு, நீதான் என் அடுத்த படத்தின் ஹீரோ என அதிரடி ஒப்பந்தம் செய்ய அதனால் சந்தோஷத்தின் உச்சத்திற்கு போகிறார் அம்ரேஷ். ஆனால் அந்த சந்தோஷம் சில நாட்களுக்குத்தான். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அம்ரோஷூக்கும், அவரது காதலுக்கும் வில்லனாக இருக்கும் சினிமா பைனான்சியரின் மகன் ராகவ், அம்ரேஷ் ஹீரோ ஆகும் விஷயத்திலும் விஷமத்தனம் செய்கிறார். இதையெல்லாம் மீறி அம்ரேஷ் சினிமா ஹீரோவாக ஜெயித்தாரா? காதலியை கரம் பிடித்தாரா? அப்பாவுக்கு பிடித்த பிள்ளையாகவே வாழ்ந்தாரா? என்பது எதிர்பாரா திருப்பங்கள் நிறைந்த மீதிக் கதை!
நிஜத்தில் தன் செல்ல மகனை என்னவெல்லாம் ஆக்கி பார்க்க வேண்டும்மென்று நடிகை ஜெயசித்ரா விரும்புகிறாரோ, அதையெல்லாம் அவரது முதல் படத்திலேயே செய்து பார்த்து சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது காட்சிக்கு காட்சி புலப்படுகிறது. ஆனாலும் அந்த காலத்து டிராமா பாணி திரைக்கதை பலவீனம்.
புதுமுக ஷீரோ அம்ரேஷ் தன் அம்மாவின் ஆசை அறிந்து சிம்பு, பரத் உள்ளிட்ட இளம் ஹீரோக்களின் சாயலில் நடிப்பிலும், துடிப்பிலும் வெளுத்து கட்டி, ரசிகர்களுக்கும் கமர்ஷியல் விருந்து படைத்திருக்கிறார் என்றால் மிகையல்ல. ஆனாலும் அம்ரேஷின் நடிப்பை விட இசையமைப்பு பிரமாதம். அதுதான் படத்தின் பலமும் கூட.
புதுமுக நாயகி ஆர்யா மேனனில் தொடங்கி, நாசர், சரண்யா, குயிலி, சத்ய ப்ரியா, வில்லன் ராகவ், இயக்குனர் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் வரை சகலரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர்.
மொத்தத்தில் நானே என்னுள் இல்லை படத்தின் வெற்றி ரசிகர்களின் கையில் இருக்கிறது.