விருதகிரி, ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா, சம்பத் ராம், மனதை திருடி விட்டாய் நாராயணமூர்த்தி ஆர்.என்.ஆர்.மனோகர், நெல்லை சிவா... என ரசிகர்கள் அறிந்த, அறியாத நன்கு தெரிந்த, தெரியாத நடிகர்கள் பலரும் நடிக்க, "லட்சுமி அம்மாள் பிலிம்ஸ்" பி.செந்தில் முருகன் தயாரிப்பில், சிவநேசன், உமாசங்கர் இருவரது ஒளிப்பதிவில், கண்களுக்கினிய காட்சிகள் ஒளிர., ஸ்ரீராமின் கிராமிய இசையில், காதிற்கினிய கானங்கள் ஒலிக்க, ரத்தன் கணபதியின் எழுத்து, இயக்கத்தில், வெளி வந்திருக்கும் படமே "விருத்தாசலம்."
"சிறு வயதில் இருந்தே முறை மாமன் மீது உயிரை வைத்திருக்கும் கிராமத்து முறைப்பெண், சிறு வயதிலேயே அவளுக்காக சிறை சென்று பெரியவனானதும் திரும்பும் அந்தமாமானுக்கு கிடைத்தாரா? இல்லையா..? எனும் கருவை கொண்டு படமாகியிருக்கிறது இப்படம்.
கதைப்படி .,சிறுவன் விருதகிரியின் முறைப்பெண் பாப்பா எனும் ஸ்வேதா, மாமா, மாமா... என விருதகிரி மீது உயிரையே வைத்திருக்கிறார் பாப்பா. விருதகிரியும் பாப்பாவுக்கு ஒன்றென்றால் பாய்ந்து வருகிறார். அப்படி ஒரு முறை பாய்ந்த போது ஊர் தலைவரின் தம்பி சிறுவன் வேலுவின் கை பறிபோகிறது. பதிலுக்கு பாயும் வேலுவால் பாப்பாவின் சகோதர சிறுவனின் உயிர் போகிறது. அதனால், அன்று முதல் ஒத்தகை வேலுவான சம்பத் ராமும், விருதகிரியும்., சிறுவர் சீர்திருந்த பள்ளி சிறை செல்கின்றனர். அங்கு தண்டனை காலம் முடிந்தும், தன் ஒரு கை போக காரணமான விருதகிரியை தீர்த்து கட்டும் விரோதம் வேலுவை விட்டு போகவில்லை. அதன் விளைவாக விருதகிரி அடுத்தடுத்து சந்தித்த அடுக்கடுக்கான சோதனைகள் என்னென்ன..? அதை எல்லாம் தாண்டி வளர்ந்து ஆளான தன் முறைப்பெண் பாப்பா - ஸ்வேதாவை விருதகிரி மீண்டும் சந்தித்தாரா? காதலை புதுப்பித்தாரா, மணம் முடித்தாரா.? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு மண் மணம் கமழ விடை சொல்ல முயன்றிருக்கிறது "விருத்தாசலம் "படத்தின் மீதிக் கதை!
கதையின் நாயகராக விருதகிரியாக, புதுமுகம் விருதகிரி, ராஜ்கிரண் பாணியில் நன்றாக நடிக்க முயன்று ஸ்கூட்டியை தலைக்கு மேல்தூக்கி நடக்கிறார், ஹீரோயினை அலேக்காக தூக்கிக் கொண்டு ஓடுகிறார், பத்து பதினைந்து ஆட்களை ஒற்றை ஆளாய் பந்தாடுகிறார், இன்னும், ஏதேதோ சாகசங்கள் செய்கிறார். ஆயிரம் செய்தும் நடிப்பு சுமாராகக் கூட வராமல் தோற்று, ரசிகனை தூங்க வைத்து விடுகிறார் பாவம். மற்றபடி, அவர் நடிப்பு பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மனிதர் நிஜத்தில், விருத்தாசலம் பகுதியில் பெரும் அரசியல் புள்ளியாம். ஒழுங்கா அத கவனிங்க பாஸ்!
கதையின் கிராமத்து நாயகியாக அறிமுக நாயகி ஸ்வேதாவின் நடிப்பு ஒ.கே.
ஒத்தைக் கை வேலுவாக வில்லன் நடிகர் சம்பத் ராமின்நடிப்பு ஒவர் மிரட்டல்.
சமீரா, ஷெரீன் தாஹா, குடிகாரராக வரும் மனதை திருடி விட்டாய் நாராயண மூர்த்தி, நெல்லை சிவா, ஆர்.என்.ஆர்.மனோகர்... பாவா லட்சுமணன், காதல் சரவணன், வெண்ணிலா கபடிக் குழு ஜானகி, மதுபானக் கடை ரவி, நெல்லை சிவா, சுதா, இளங்கோ, அபிஷேக், நிருபமா.... ஆகிய பிற நடிகர்கள் அனைவரும், தங்களது பாத்திரத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர் என்பது ஆறுதல்.
பயர் கார்த்திக்கின் சண்டை காட்சி படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
வி.டி.விஜயன் - சுனில் இருவரது படத்தொகுப்பும் இது பத்து ஆண்டுகளுக்கு முந்தைய படமென்றால் குறையாக தெரிந்திருக்காது.
ஓளிப்பதிவாளர் சிவனேசன் உமாசங்கர் ஆகிய இரு ஒளிப்பதிவாளர்களின் ஒளிப்பதிவில் கிராமிய மணம் கமழும் காட்சிகள் மண்வாசனையோடு படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது பாராட்டுக்கள்.
ஸ்ரீராம் இசையில், "வெட்டருவாமீசைக்காரன்", "தூண்டி முள்ளுமீசையில..." , "காட்டுத் தீ போல.. ", "என்னெ சித்தெறும்பு...", "தெக்குத்திச் சீமையில ..." ஆகிய பாடலாசிரியர் இளைய கம்பனின் பாடல்கள் காதுக்கு ரம்மியமாக, ரசிக்கும்படி இருக்கிறது.. பாடல்கள் இசை மாதிரியே ஸ்ரீராமின் பின்னணி இசையும் படத்திற்கு வலு கூட்ட முயற்சித்திருக்கிறது.
ரத்தன் கணபதியின் எழுத்து, இயக்கத்தில் கதையை சிறப்பாக யோசித்த இப்படக்குழுவினர், திரைக்கதையிலும் கூட தேறியிருக்கிறார்கள். ஆனால், காட்சியமைப்பிலும், இயக்கத்திலும் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் சினிமா பாணியை பின்பற்றி சற்றே கோட்டை விட்டிருக்கின்றனர்.
மேலும் கரடு முரடாக தெரியும் நாயகருக்கு வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. ஆனால், ஒன்றுக்கு இரண்டு நாயகியரும், இன்னும் சில நடிகையரும் விழுந்து விழுந்து அவரை, காதலிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டு, இருப்பது படம் பார்க்க வந்தவர்களை பெரிதாக படுத்துகிறது. இது மாதிரி படம் முழுக்க குறைகள்! ஆனாலும் கேப்டன் விஜயகாந்த் நின்று ஜெயித்த தொகுதியான., "விருத்தாச்சலம் " எனும் டைட்டிலும், கேப்டன் நடித்து வெளிவந்த பட டைட்டிலான "விருதகிரி" எனும் பெயரே இப்பட ஹீரோவின் பெயரும் என்பதும் படத்திற்கு பலம் என்றால், நடிப்பு வராத ஹீரோவும் , லேட்டஸ்ட் டிரண்டுக்கு மாறாத டைரக்டரும் இப்படத்தின் பெரும் பலவீனம் எனலாம்.
ஆக மொத்தத்தில்., 'விருத்தாச்சலம் - ரசிகனை வறுத்தெடுக்கும்".