Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

இன்று நேற்று நாளை

இன்று நேற்று நாளை,Indru Netru Naalai
13 ஜூலை, 2015 - 15:08 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » இன்று நேற்று நாளை

தினமலர் விமர்சனம்


ஆங்கில படங்களிலேயே இதுநாள் வரை நம் ரசிகர்கள் கண்டு வந்த டைம் மிஷன் எனப்படும் நாம் விரும்பும் காலத்திற்கு நம்மை அழைத்து செல்லும் ஒரு கருவியை மைய கருவாக கொண்டு, தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத அறிவியல் பூர்வமான கதையை உள்ளிடக்கிய கதையும், திரைக்கதையும் தான் இன்று நேற்று நாளை படத்தின் மொத்த கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்!


கதைப்படி, படத்தின் ஓபனிங் சீனிலேயே கெஸ்ட் ரோலில் வரும் நடிகர் ஆர்யா ஒரு டைம் மிஷனை கண்டுபிடித்து, அதை நவீன யுகத்தில் செயலுக்கு கொண்டு வர ஸ்கைப் சாட்டிங் மூலம் அறிவியல் துறையை சேர்ந்த பேராசிரியரிடம் பர்மிஷன் கேட்கிறார். அந்த பேராசிரியரும், சரியாக இருக்கும் என்றால் உன் இஷ்டம் போல் செய்... என்று அனுமதி வழங்குகிறார். அந்த டைம் மிஷின், அங்கு தொட்டு இங்கு தொட்டு நண்பர்களான, டூபாக்கூர் ஜோசியர் புலிவெட்டி ஆறுமுகம் எனும் கருணாகரனின் கைகளிலும், வேலை வெட்டிக்கு போகாமல் சொந்த தொழில் செய்வதே லட்சியம் என்று இருக்கும் இளங்கோ எனும் விஷ்ணுவின் கைகளிலும் சிக்குகிறது. அதை வைத்து கொண்டு ஹீரோ விஷ்ணு விஷாலும், காமெடியன் கருணாகரனும் பல வருடங்களுக்கு முன்னும், பின்னும் போய் காட்டும் கண்கட்டி வித்தை தான் இன்று நேற்று நாளை படத்தின் மொத்த கதையும்!


அதை ஹீரோ விஷ்ணு, தன் கைநழுவிப்போக இருக்கும் காதல், அவ்வாறு போகாமல் இருப்பதற்காகவும், காமெடியன் கருணாகரன் தனக்கு தெரியாத ஜோதிடத்தை தெரிந்த மாதிரி மக்களை நம்ப வைத்து பிழைப்பு நடத்தவும்... பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் ஏற்படும் சந்தோஷத்தையும், வில்லங்கத்தையும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், காட்சிக்கு காட்சி காமெடியாகவும், கலர்புல்லாகவும் காட்டி ரசிகர்களை சீட்டோடு கட்டி போடுகின்றார் இயக்குநர் ஆர்.ரவிக்குமார்!


விஷ்ணு, தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து ஒவ்வொரு படத்தின் கதையையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து ஜெயித்து கொண்டு வருகிறார். அறிவியல் சம்பந்தப்பட்ட கதை என்றாலும் ஒவ்வொரு சீனிலும் ஹீரோ விஷ்ணு விஷால் நடிப்பில் தனி முத்திரை பதித்து ரசிகர்களை தன் வயப்படுத்துகிறார்.


விஷ்ணு மாதிரியே காமெடியன் கருணாகரன், அனுவாக வரும் கதாநாயகி மியா ஜார்ஜ், வில்லன் குழந்தை வேலு - ரவிசங்கர், விஞ்ஞானி பார்த்தசாரதி - டிஎம் கார்த்திக், கதாநாயகி அனுவின் அப்பாவும், பெரும் தொழிலதிபர் ராஜரத்தினமுமான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


மேற்படி நட்சத்திரங்கள் மாதிரியே, படத்தின் இசையமைப்பாளர் ஹிப்-ஹாப் தமிழா ஆதி, ஔிப்பதிவாளர் ஏ.வசந்த், படத்தொகுப்பாளர் லியோ ஜான்பவுல் மற்றும் கலை இயக்குநர் விஜய் ஆதிநாதன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் தங்கள் பணியை சரியாக செய்து இயக்குநர் ஆர்.ரவிக்குமாரின் இயக்கத்தில், தமிழ் சினிமா இதுவரை கண்டிராத தரமான அறிவியல் படத்தை கலக்கல் காமெடியுடனும், கண்ணை கட்டும் கலர்புல்லுடனும், கலை நயம் சொட்டும் காதல் காட்சிகளுடனும் தர முற்பட்டிருக்கின்றனர்.


ஆக மொத்தத்தில், இன்று நேற்று நாளை - இன்று மட்டுமல்ல, நேற்றும் வராத, நாளையும் பேசப்படும் நல்ல நவீன படமாகும்!






கல்கி திரை விமர்சனம்




இன்று நேற்று நாளை!


அறிவியல் கதைகள் தமிழ்த் திரைப்படங்களாக வருவது அபூர்வம். அதிலும் டைம் மெஷின் மாதிரியான நுட்பமான சமாச்சாரங்கள் ஒதுக்கப்பட்டே வந்திருக்கின்றன. தப்பித் தவறி வெளியாகியிருக்கும் ஒன்றிரண்டு படங்களும், சரியான முறையில் கையாளப்பட்டிருக்கவில்லை. ஆனால் 'இன்று நேற்று நாளை' படம் நேர்த்தியான முறையில், துணிச்சலுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த காலத்தைக் காண்பிக்கிறேன் பேர்வழி என்று ராஜா ராணிக் காலத்துக்கோ அல்லது எதிர்காலத்தைக் காண்பிப்பதற்காக வேற்றுக் கிரகத்துக்கோ அழைத்துச் சென்று ஜல்லியடிக்காமல் 50 வருட காலகட்டத்திலேயே கதை முன்னும் பின்னும் தொய்வில்லாமல் நகர்கிறது. அதிலும் வெறும் 20 நிமிடக் கால வித்தியாசத்தால் ஏற்படும் விளைவுகள் நன்கு சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் அசந்தாலும் கதை நம்மை விட்டு விட்டு அதன் போக்கில் ஜெட் வேகத்தில் போயே போய்விடும். நிறையப் பாடல்களைப் போட்டுக் காதை ரணமாக்காமல் இருப்பதும் பாராட்டத்தக்கதுதான்!

ஆர்ப்பாட்டமான அரங்க நிர்மாணங்களையும், அபத்தமான நகைச்சுவையையும், வௌ்ளையுடை தேவதைசூழ் நடனங்களையும் புறந்தள்ளிவிட்டு, பலமான திரைக்கதை ஒன்றை மட்டுமே நம்பிப் படம் எழுதியிருக்கிறார்கள்.

டைம் மெஷின் கிடைத்தால் வாழ்க்கை எப்படி அமையும், கிடைக்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதுதான் கதையின் ஒற்றை வரி!

கதாநாயகனாக வரும் விஷ்ணுவிஷால் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். கடவுளின் தேசத்து இறக்குமதியான மியா ஜார்ஜ், கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறார். நடிப்பிலும் குறை வைக்கவில்லை.

(போலி) ஜோசியராக நடித்திருக்கும் கருணா தமிழ் சினிமாக் காமெடியன்களுக்கே உண்டான மிகை நக்கல், கோணங்கிச் சேஷ்டைகள், ஆபாச வசனங்கள் போன்றன இல்லாமல் நமது பக்கத்து வீட்டுப் பையன் போல இயல்பாக நடித்திருக்கிறார்.

ஒன்பது கூட்டம் கிரிதர் பார்த்தசாரதியாக வரும் டி.எம். கார்த்திக் அசட்டு ஜீனியஸ் பாத்திரத்தை அனாயாசமாகச் செய்திருக்கிறார்.

குறைகண்டுபிடித்தே ஆக வேண்டும் என்றால்... மதுவருந்தும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாமே என்று சொல்லத் தோன்றுகிறது.

கடந்த காலத்துக்குள் நுழையும் கதாநாயகி, குழந்தையாக இருக்கும் தன்னையே ஆச்சரியத்துடன் பார்த்து அரவணைக்கும் காட்சி போல பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறார் இயக்குநர் ரவிக்குமார்.


மொத்தத்தில்... அறிவியல் திரைப்படங்களுக்கான நல்ல ஆரம்பம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

இன்று நேற்று நாளை தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in