நடிப்பு - விதார்த், அசோக், நந்தன், அஜ்மல், காயத்ரி, ராதிகா ஆப்தே மற்றும் பலர்
தயாரிப்பு - டிரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ராஜன் மாதவ்
இசை - சாஜன் மாதவ்
வெளியான தேதி - பிப்ரவரி 15, 2019
நேரம் - 2 மணி நேரம் 17 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
மிஷ்கின் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளிந்த 'சித்திரம் பேசுதடி' படத்திற்கும் இந்தப் இரண்டாம் பாகத்திற்கும் ஒரே ஒரு தொடர்புதான் இருக்கிறது. முதல் பாகத்தைத் தயாரித்த நிறுவனம்தான் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்திருக்கிறது.
'உலா' என்ற பெயரில் உருவான படம் முடிந்து சில வருடங்களாக வெளிவர முடியாத காரணத்தால் படத்தின் பெயரை 'சித்திரம் பேசுதடி 2' என மாற்றி வெளியிட்டுள்ளார்கள்.
இயக்குனர் ராஜன் மாதவ் படத்தின் ஆரம்பத்திலிருந்து கிளைமாக்ஸ் வரை கதையை சொல்லிக் கொண்டே போகிறார். படத்தில் எண்ணற்ற நடிகர்கள், முக்கிய கதாபாத்திரங்கள். ஒருவரை மையப்படுத்தி நகராமல், திரைக்கதை எப்படியெல்லாம் நகர்கிறதோ அங்கெல்லாம் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களது பிரச்சினைகளை, பின்னணியை பேசி முடிப்பதற்குள் ஒரு சோர்வு வந்துவிடுகிறது.
அடியாளாக இருக்கும் விதார்த், அசோக் இருவரும் ஷம்மி திலகனை கத்தியால் வெட்டி கொல்ல முயற்சிக்கிறார்கள். வெட்டுக்காயம் பட்ட அவரை நந்தன் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றுகிறார். நந்தன், காதலி காயத்ரியுடன் ஊரை விட்டு ஓடும் சமயத்தில்தான் அந்தக் கொலையைப் பார்த்து அவரைக் காப்பாற்றுகிறார்.
காயத்ரியின் அப்பா அவருக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் நிச்சயித்து திருமணத்திற்காக பணம் தேவைப்படுவதால், இன்ஸ்பெக்டர் ஆடுகளம் நரேன் உடன் சேர்ந்து சுப்பு பஞ்சு வீட்டில் கொள்ளை அடிக்க கூட்டு சேர்கிறார். ஆடுகளம் நரேன், அதற்காக ஒரு திருட்டு காரை ஏற்பாடு செய்கிறார். அதற்காக லோக்கர் திருடர்கள் நிவாஸ் ஆதித்தன், பிளேடு சங்கர், சொத்துக்களை இழந்து தவிக்கும் அஜ்மல் காரைத் திருடி எடுத்து வருகிறார்கள். தன் சொத்துக்களை மீட்க அஜ்மல், மோகன் ராம் ஆலோசனைப்படி அரசியல்வாதியான அழகம் பெருமாள் சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்றை வைத்து அவரை பிளாக்மெயில் செய்கிறார்.
விதார்த், அசோக்கால் கொல்ல முயற்சிக்கப்பட்ட ஷம்மி திலகனிடம் தான் அஜ்மல் தன் சொத்துக்களை இழந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஷம்மி திலகனை அவருடைய மனைவி ராதிகா ஆப்தே பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்கிறார். தன்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்ட ஷம்மியை மருத்துவமனையில் கொல்லவும் முயற்சிக்கிறார் ராதிகா.
ஷம்மியைக் கொலை செய்ய விதார்த், அசோக்கை அனுப்பியதே அவருடைய நெருங்கிய நண்பரான சுப்பு பஞ்சு. உயிர் பிழைத்த ஷம்மியால் சிக்கல் வரக் கூடாதென, விதார்த்தை அவருடைய கூட்டாளி அசோக்கை வைத்தே கொலை செய்யச் சொல்கிறார் சுப்பு பஞ்சு. அதோடு, ஷம்மியைக் காப்பாற்றிய நந்தனையும் கொல்லச் சொல்லி அசோக்கிடம் சொல்கிறார்.
ஆரம்பத்தில் காதலன் நந்தன் வராததால் காத்திருக்கும் காயத்ரி, அவருடைய துணிமணி பேக்கை, லோக்கல் திருடர்களான நிவாஸ், பிளேடு சங்கரிடம் திருட்டு கொடுக்கிறார். நந்தன் சொன்ன நேரத்தில் வராததால், காதலே வேண்டாம் என முடிவெடுக்கும் காயத்ரி, பேக்கில் குடும்ப நெக்லஸ் இருப்பதால் திருடர்களைக் கண்டுபிடிக்க நந்தனுடன் சேர்ந்து செல்கிறார். இடையில், திருடன் நிவாஸ், விலைமாதான நிவேதிதாவைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்.
நிவேதிதாவிற்கோ விதார்த்தைத் திருமணம் செய்து கொள்ள ஆசை. இப்படி சுற்றி சுற்றி வரும் கதையில், அசோக் கொலை முயற்சியைப் பார்த்த சாட்சியான நந்தனைக் கொன்றாரா, நண்பன் விதார்த்தையும் கொல்கிறாரா, காயத்ரிக்கு அவருடைய குடும்ப நெக்லஸ் கிடைத்தத்தா, அஜ்மல் பிளாக்மெயில் மூலம் பணம் வாங்கினாரா, ஆடுகளம் நரேன் அன்ட் கோ திட்டமிட்டபடி கொள்ளையடித்ததா, சுப்பு பஞ்சு அவருடைய நண்பன் ஷம்மியை மீண்டும் கொல்கிறாரா?, விலைமாதான நிவேதிதா யாரைத் திருமணம் செய்து கொள்கிறார்?, லோக்கல் திருடர்கள் நிவாஸ், பிளேடு சங்கர் சிக்கினார்களா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். கூடவே, இன்னும் சில காதல், கடத்தல் கிளைக் கதைகளும் இருக்கிறது.
இதைவிட சுருக்கமாக இந்தப் படத்தின் கதையை எழுத முடியுமா என்பது சந்தேகம்தான். படம் பார்க்கப் போகிறவர்கள் இதைப் படித்து விட்டுப் போகலாம். படம் பார்த்துவிட்டு கதை புரியவில்லை என்று சொல்பவர்கள் இதைப் படித்தால் புரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில்தான் இவ்வளவு நீள கதைச் சுருக்கம்.
தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் இப்படி ஒரு திடுக் திருப்பம், காட்சிக்குக் காட்சி டிவிஸ்ட் என எந்த சினிமாவையும் பார்த்திருக்க முடியாது. எத்தனை கதாபாத்திரங்கள், அதில் பொருத்தமான நடிகர்கள் என குழப்பமில்லாமல் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ராஜன் மாதவ். ஆனால், ஒரே படத்தில் இவ்வளவு விஷயங்களைச் சொல்வது கொஞ்சம் ஓவர்தான்.
இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், படத் தொகுப்பு அனைத்துமே படத்திற்கு பக்கபலம். மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பிராவோ ஒரு பாடலுக்கு ஓரிரு நிமிடம் நடனமாடுகிறார்.
படத்தில் நடித்துள்ள அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். அசோக் மட்டும்தான் வழக்கம் போல ஓவர் ஆக்டிங். சில வருடங்களுக்கு முன்பே வரவேண்டிய நேரத்தில் இந்தப் படம் சரியாக வந்திருந்தால் குறிப்பிடத்தக்க படமாக இருந்திருக்கலாம். இப்படி ஒரு படம் வருகிறது என்பது இப்போது பலருக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
ஒரு படத்தை எடுத்து முடிப்பது மட்டும் சிறப்பல்ல, அதைச் சரியான சமயத்தில் வெளியிடுவதும்தான் சிறப்பு என்பதற்கு இந்தப் படம் இன்றைய உதாரணம்.
சித்திரம் பேசுதடி 2 - பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டும்