Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பொன்னியின் செல்வன் - பான்-இந்தியா படமல்ல, பான்-உலகப் படம்

11 ஜூலை, 2022 - 13:24 IST
எழுத்தின் அளவு:
Pan-world-film-Ponniyin-Selvan

லைக்கா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க, மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், கிஷோர், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக உருவாக்கி முதல் பாகத்தை செப்டம்பர் 30ம் தேதி தியேட்டர்களில் ஐந்து மொழிகளில் வெளியிட உள்ளார்கள். இப்படத்தின் டீசர் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

நீண்டகாலமாகி போன சரித்திர படம்

தமிழில் சினிமா உருவான நூறாண்டுகளுக்கு முன்பே சரித்திரக் கதைகள் மட்டுமே ஆரம்பத்தில் தயாராகி வந்தன. அதற்குப் பிறகுதான் சமூகக் கதைகளையும் எடுக்க ஆரம்பித்தார்கள். இருந்தாலும் அவ்வப்போது சரித்திரக் கதைகள் பலவும் வெளிவந்து வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால், தமிழில் முழுமையான ஒரு சரித்திரப் படம் வந்து பல வருடங்களாகிவிட்டது. 2006ம் ஆண்டில் வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' நகைச்சுவை சரித்திரப் படமாக அமைந்து வெற்றியும் பெற்றது. 2011ல் வெளிவந்த சூர்யா நடித்த 'ஏழாம் அறிவு' படத்தில் 'போதி தர்மர்' சம்பந்தப்பட்ட காட்சிகள் சரித்திர காலத்து நிகழ்வாக படமாக்கப்பட்டிருந்தன. பத்து வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பதாக இருந்த 'ராணா' சரித்திரப் படம் பூஜை போடப்பட்டு ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கைவிடப்பட்டது. அடுத்து விக்ரம் நடிக்க 'கரிகாலன்' என்ற சரித்திரப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்று பின்னர் படம் கைவிடப்பட்டது.



பாகுபலி தந்த மாற்றம்
மேலே, குறிப்பிட்ட இந்த இரண்டு படங்களும் உருவாகி வெளியாகி இருந்தால் 'பாகுபலி' படத்திற்கு முன்பே தென்னிந்தியாவில் தமிழில் தரமான சரித்திரப் படங்கள் வெளியாகி இருக்கும். இந்தப் படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, கைவிடப்பட்ட செய்தி அறிந்த பின் ராஜமவுலி யோசித்து 'பாகுபலி' படத்தை உருவாக்க முனைந்திருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது. 'பாகுபலி' படத்தைப் பார்த்த பிறகுதான் 'பொன்னியின் செல்வன்' படம் உருவாக்கும் எண்ணம் வந்திருக்கும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. 'பாகுபலி' படத்திற்கு முன்பு தெலுங்கில் உருவான பல சரித்திரப் படங்கள் சென்னையில், தமிழ்க் கலைஞர்களின் ஒத்துழைப்பில் தயாரான படங்கள்தான். இன்னும் ஏன், 'பாகுபலி' படத்தின் பல காட்சிகள் முன்பு வெளிவந்த தமிழ் சரித்திரப் படங்களின் கதை, காட்சியமைப்புகள் ஆகியவற்றுடன் ஒத்திருக்கும். கல்கி, சாண்டில்யன் எழுதிய சரித்திர நாவல்களின் சில பல அத்தியாயங்களைத் தழுவியதாகவும் இருக்கும்.

சவால்கள் நிறைந்த பொன்னியின் செல்வன்
ஆனால், 'பொன்னியின் செல்வன்' படம் எந்த முந்தைய திரைப்படங்களையும், நாவல்களையும் காப்பியடித்து உருவாக்காமல் முழுவதுமாக கல்கி எழுதிய நாவலை மட்டுமே அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. பல லட்சம் பேர் படித்த ஒரு நாவலை திரைப்படமாக உருவாக்குவதில் மிகப் பெரும் சவால் உண்டு. பொதுவாக ஒரு நாவலைப் படிக்கும் போது நாவலில் இடம் பெறும் வர்ணனைகள், கதாபாத்திரங்கள், இடங்கள் ஆகியவற்றைப் பற்றி படிப்பவர்களின் மனதில் ஒரு கற்பனை உருவம் உருவாகும். அதற்குத் தகுந்தபடி திரைப்படங்களில் அவர்களைத் திருப்திப்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. எழுத்தில் படித்த ஒவ்வொன்றும் அப்படியே திரையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.



உலகளவில் எதிர்பார்ப்பு
'பொன்னியின் செல்வன்' இயக்குனர் மணிரத்னம் கல்லூரியில் படித்த காலத்தில் நாவலைப் படித்து அதன் தீவிர ரசிகரானவர். தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவில் 90களில் பல திருப்புமுனைகளை, சில பல புதிய தொழில்நுட்பங்களை, காட்சியமைப்புகளை ஏற்படுத்தித் தந்தவர் மணிரத்னம். அவரது தாக்கம் இல்லாமல் இன்றைய இளம் இயக்குனர்கள் படம் எடுக்க வாய்ப்பில்லை. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரசிகர்களின் மனதை வென்றவர். இதற்கு முன்பே சில மல்டி ஸ்டார் படங்களைக் கொடுத்து பாராட்டுக்களைப் பெற்றவர். அவரது எண்ணத்தில், கற்பனையில் திரைப்படமாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' நிச்சயம் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதுமே வரவேற்பைப் பெறும் என அவரது தீவிர ரசிகரகள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

2 கோடி பார்வை
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் டீசர் வெளியாகி மூன்று நாட்களாகவிட்டது. இந்த சில நாட்களிலேயே யூ டியூபில் மட்டும் தமிழில் 90 லட்சம் பார்வைகள், தெலுங்கில் 52 லட்சம், ஹிந்தியில் 41 லட்சம், மலையாளத்தில் 14 லட்சம், கன்னடத்தில் 4 லட்சம் பார்வைகள் என மொத்தமாக 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இரண்டு நாட்களில் இரண்டு கோடி பார்வைகள் யு டியூபில் மட்டுமே. மற்ற சமூக வலைத்தளங்களின் பார்வைகளையும் சேர்த்தால் இன்னும் அதிகமாக இருக்கும்.



தெலுங்கிலும் வரவேற்பு, எதிர்பார்ப்புசில தெலுங்கு ரசிகர்கள் 'பாகுபலி' படத்தையும், 'பொன்னியின் செல்வன்' படத்தையும் ஒப்பீடு செய்து வருகிறார்கள். அது வழக்கமாக அனைத்துப் படங்களுக்கும் வரும் ஒரு விமர்சனம்தான். தெலுங்கு ரசிகர்களுக்கு இந்த டீசர் பிடித்திருக்கிறது என்பதற்கு சாட்சி அதற்குக் கிடைத்த 52 லட்சம் பார்வைகள். தமிழை அடுத்து தெலுங்கில்தான் அதிகப் பார்வைகள் கிடைத்துள்ளது. தமிழில் மட்டும்தான் டீசர் அறிமுக விழா நடத்தினார்கள். தெலுங்கிற்குச் சென்று அங்கு ஒரு விழா நடத்தும் போது அதற்கான தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும். அது மற்ற மொழிகளுக்கும் பொருந்தும்.

'பாகுபலி, பொன்னியின் செல்வன் ஒப்பீடு' பற்றி ஒன்று மட்டுமே சொல்ல வேண்டும். 'பாகுபலி' சினிமாவுக்காக எழுதப்பட்ட ஒரு கதை. 'பொன்னியின் செல்வன்' சினிமாவுக்காக எழுதப்பட்ட கதை அல்ல, அது ஒரு நாவல். பல லட்சம் பேரால் படிக்கப்பட்டு மனதில் ஆழப் பதிந்த ஒரு நாவல். அதை சினிமா மொழியில் மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஒப்பீடு செய்பவர்கள் இதைப் பற்றி யோசித்தால் அந்த ஒப்பீட்டையே நிறுத்திக் கொள்வார்கள். ராஜமவுலி வந்து இயக்கினாலும் விமர்சனங்களுக்கு தப்பமாட்டார்.



பான்-இந்தியா படம் மட்டுமல்ல, பான் உலகப் படம்
'பொன்னியின் செல்வன்' டீசருக்குக் கிடைத்த வரவேற்பை படக்குழுவினர் எப்படி தக்க வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் அடுத்து எழும் கேள்வி. பல திறமை வாய்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பார்த்துப் பார்த்து தேர்வு செய்து உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிரபலமானவர்கள்தான். டீசர் வெளியீடு நடந்து முடிந்துவிட்டது. அடுத்து டிரைலர் வெளியீடு, இசை வெளியீடு ஆகியவை இருக்கிறது. டீசர் வெளியீட்டில் சில நட்சத்திரங்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். ஆனால், அடுத்து நடக்கப் போகும் விழாக்களில் முடிந்த வரையில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அனைவருமே கலந்து கொள்ள வேண்டும். தமிழில் மட்டும் விழாக்களை நடத்தாமல் மற்ற மாநிலங்களிலும், ஏன் உலக அளவிலும் சென்று சேர வெளிநாடுகளிலும் விழாக்களை நடத்த வேண்டும்.

'பொன்னியின் செல்வன்' ஒரு பான்-இந்தியா படம் மட்டுமல்ல, உலக அளவிலான படமும் கூட என்பதை மணிரத்னம் நன்றாகவே உணர்ந்திருப்பார். அவரது முந்தைய படங்கள் உலக அளவில் சில பல பட விழாக்களில் கலந்து கொண்டுள்ளன. ஆஸ்கர் விருது வென்ற ஏஆர் ரகுமான் இசை, உலக அளவில் பிரபலமான முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பது இந்தப் படத்தை உலக அளவில் எளிதில் சென்று சேர்க்கும். அதற்கான முன்னெடுப்புகளை படக்குழு மிகச்சரியாகச் செய்ய வேண்டும்.



சீனாவிலும் வெளியாகுமா
ஹாலிவுட் பட ரசிகர்கள் சரித்திரப் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள். உலக அளவில் அமெரிக்கா, சீனா ஆகியவை சினிமா வியாபாரத்தில் அதிக வசூலைக் கொடுக்கக் கூடிய நாடுகள். சீனாவில் எப்போதும் சரித்திரப் படங்களுக்கென்று ஒரு தனி வரவேற்பு உண்டு. இந்தியா, சீனா இடையே பல நூற்றாண்டுகளாகவே சரித்திரத் தொடர்பு உண்டு. இன்னும் சொல்லப் போனால் 'பொன்னியின் செல்வன்' படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து இங்கு வெளியாகும் தினத்தில் அங்கு வெளியிட்டால் கூட நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இந்துப் பேரரசு சோழப் பேரரசின் தாக்கம், தென் கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், புரூனை, கிழக்கு திமோர் உள்ளிட்ட நாடுகளிலும் உள்ளது. அங்கு பல நாடுகளிலும் சோழர்கள் கட்டிய இந்து கோவில்கள் உண்டு. பண்டைய நாட்களில் அந்த நாடுகளில் இந்துப் பேரரசு கொடி கட்டிப்பறந்த காலம் உண்டு. அவர்களுக்கும் தங்களை முன்னர் ஆண்ட அந்த இந்துப் பேரரசர்கள் பற்றிய வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். அதற்கு 'பொன்னியின் செல்வன்' படத்தை சீன மொழி மட்டுமல்லாது தென்கிழக்கு ஆசிய மொழிகளிலும் டப்பிங் செய்தால் நல்லது.
ஹாலிவுட் தரம்
'பொன்னியின் செல்வன்' டீசர் யூ டியூபில் மட்டும் ஐந்து மொழிகளில் இரண்டு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது என மேலே சொல்லியிருந்தோம். டீசர் பற்றி விமர்சனம், டீசர் பற்றி ரியாக்ஷன் என டீசர் வெளியான பின் பல வீடியோக்கள்ள வந்துவிட்டன. அவற்றின் பார்வைகள் டீசருக்குக் கிடைத்த பார்வைகளை விட அதிகமிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவற்றில் பல டீசர்களில் சொல்லப்பட்ட கருத்துக்களில் பொதுவாக இருப்பது, இந்த 'பொன்னியின் செல்வன்' தமிழ்த் திரைப்படம் ஹாலிவுட் படம் பார்க்கும் ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.



ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாகத் தயாராகி மிரட்டிய 'லார்ட் ஆப் த ரிங்ஸ், கேம் ஆப் தோர்ன்ஸ்' உள்ளிட்ட படங்களைப் பார்ப்பது போல டீசர் இருக்கிறது என்று விமர்சித்திருக்கிறார்கள். ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு ''Who done it ?” என்ற ஒரே ஒரு கேள்வி போதும். அதைச் சார்ந்த கதை, திரைக்கதை உள்ள படங்களை அவர்கள் வெகுவாக ரசிப்பார்கள். அப்படி ஒரு ''Who done it ?” இந்த 'பொன்னியின் செல்வன்' நாவலிலும் உண்டு. அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்ற ஒரு த்ரில்லிங் அனுபவம் நாவலில் உண்டு.

'ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?' என்பதுதான் 'பொன்னியின் செல்வன்' நாவலின் கிளைமாக்ஸ். அந்த கிளைமாக்சை நோக்கி ஆரம்பத்தில் இருந்து நகரும் கதைப் பயணம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு கிளைமாக்சைப் போல இருக்கும். இரண்டாம் பாகத்தில் இப்படம் முடிந்தாலும் மூன்றாம் பாகம் உருவாக்கும் அளவிற்கு சோழப் பேரரசன் 'பொன்னியின் செல்வன்,' என்கிற 'அருள்மொழி வர்மன்' என்கிற 'ராஜராஜசோழன்' வரலாற்றையும் படைக்கும் ஆர்வத்தைத் தூண்டும்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
2022 - கடந்த 6 மாதத்தில் தமிழ் சினிமா : சாதித்தவை எவை, சறுக்கியவை எவை2022 - கடந்த 6 மாதத்தில் தமிழ் சினிமா : ... என்ன இப்படி ஆரம்பிச்சுட்டாங்க... : நிர்வாண மோகத்தில் நடிகர், நடிகைகள் என்ன இப்படி ஆரம்பிச்சுட்டாங்க... : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
09 ஆக, 2022 - 07:20 Report Abuse
rajan_subramanian manian இதை ஒரு படமாக எடுக்க முடியாது. ராமாயணம், மஹாபாரதம் மாதிரி ஒரு சீரியல் ஆக எடுத்தால் மக்கள் ஒரு வருடம் தொடர்ந்து பார்ப்பார்கள். தெரிந்த சினிமா நடிகர்கள் தேவையில்லை. எத்தனையோ புது முகங்களை போட்டு அவர்களை அந்த கதா பாத்திரமாகவே வாழவைக்கலாம். இப்போதும் சீதா கிருஷ்ணர், திரௌபதி ஆகியோர் நம் நினைவில் உள்ளார்கள். நடிகர்களுக்கு ஒரு ஸ்டைல் மற்றும் இமேஜ் உள்ளது. அதை மாற்ற முடியாது. கதைப்படி நந்தினி ஒரு பேரழகி. எல்லோரும் அவள் அழகில் விழுந்து விடுவார்கள். அவள் வயது இருபது, இருபத்தி ஐந்து வரை இருக்கும். ஐஸ்வர்யா ராய் என்னதான் மேக்கப் போட்டாலும் வயதை குறைக்க முடியாது. சுத்தமான ராங் தேர்வு, முப்பது வருஷத்துக்கு முன்னால் நடித்திருக்க வேண்டியது, அதே போல் திரிஷாவும். நடிகர்கள் ஹேர்ஸ்டைல் மற்றும் டயலாக் டெலிவெரியை பார்க்க வேண்டும். மணிரத்னம் டயலாக் எல்லோருக்கும் தெரியும். ரஹ்மான் பாடிய தமிழ் பாட்டு ஒரு எழவும் புரியவில்லை. அதே டப்பாங்குத்து. இதில் மலையாளம் மற்றும் கன்னடத்தில் பாடியது மொழி புரியா விட்டாலும் கேட்கும் படியாக இருந்தது, சோழர்கள் செய்தது சைவ ஆலயங்கள் திருப்பணிகள். இந்த கிரிப்டோ தமிழ் சினிமா உலகம் அதை காட்டவே மாட்டார்கள். சுத்தமாக நம்பிக்கை இல்லை. இதையும் மீறி வெற்றி பெற்றால் நல்லதுதான்.
Rate this:
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
04 ஆக, 2022 - 20:13 Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் “பொன்னியில் செல்வன்” சரித்திர நவீனத்தை... 1980களில் இருந்து... சுமார் 40 முறைக்கு மேல் படித்திருப்பேன். அதிலும், குறிப்பாக... கடந்த 2020 கொரோனா காலத்தில்... என் வீட்டு பரணையில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு... மலிவு விலை பதிக்கத்தில் வாங்கி வைத்த பொன்னியின் செல்வனை... காலை, மாலை, இரவு என நான்கு நாட்களுக்குள் ஐந்து பாகத்தையும் படித்து முடித்து... அதன் பிறகு, பார்த்திபன் கனவையும், சிவகாமி சபதத்தையும் படித்துவிட்டு... ஒரு வாரத்திற்குள் “பொன்னியின் செல்வனை” மீண்டும் படித்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... கல்கியின் இந்த சரித்திர நவீனத்தை படிப்போர்... தத்தமது கற்பனையில், உருவகப்படுத்தியுள்ள பாத்திரங்களைத்தான் மணிரத்தினம் தன் படத்தில் காட்ட வேண்டும் என்பது தவறானதாகும். நானே அதை எதிர்பார்க்க மாட்டேன். காரணம், 1980களில், பொன்னியின் செல்வனை படித்துவிட்டு... அந்நவீனத்தின் கதாநாயகன் வந்தியதேவன் நான் பிறந்த ஊரான காஞ்சிபுரத்திலிருந்து துவங்குவான். அதைப்போலவே, என்னை அண்ணன் திருமணத்திற்கு தஞ்சை சென்றபோது, செங்கோட்டை பாசஞ்சரில், ரயில் பயணத்தில், சற்றேரக்குறைய வந்தியதேவன் சென்றதாக கூறப்பட்ட பாதையில்தான் பயணித்தேன். 1980ல் அன்றைய காஞ்சிபுரம் - தஞ்சை பாதை மாறாமலேயே இருந்தது. வந்தியதேவன் கண்ட ஆடிப் பெருக்கு கொள்ளிடம், காவிரி, வீரநாராயண ஏரி, பழையாறை (இன்றைய பட்டீஸ்வரம்), கும்பகோணம் காவிரி ஆகிய இடங்களை சற்றேரக்குறைய மாற்றம் இல்லாமல் கண்டேன் 40 ஆணடுகளுக்கு முன்பு (1980ல்). எனது கற்பனையில் கண்ட வந்தியதேவனையும், ஆதித்யனையும், அருண்மொழிவர்மனையும், குந்தவையையும், ஆழ்வார்க்கடியானையும், பழுவேட்டரையரையும், இயக்குநர் மணிரத்தினம் காட்ட வேண்டும் என்று இங்கே நிறைய அதிமேதாவிகளும், அறிவாளிகளும் சொல்வது கிறுக்குத்தனம். ஒரு மாபெரும் சரித்திர நவீனத்தை, தமிழ்நாட்டின் வரலாற்று பொக்கிஷத்தை திரைப்படமாக எடுப்பது என்பதே நமக்கு பெருமை. அதையும் குறை சொல்வது குரங்குத்தனம்.
Rate this:
Parthasarathy - Plainsboro,யூ.எஸ்.ஏ
12 ஜூலை, 2022 - 22:14 Report Abuse
Parthasarathy தமிழ் நாவலிலேயே எனக்கு மட்டும் அல்ல பொதுவான எல்லோருக்கும் பிடித்தது பொன்னியின் செல்வன் தான். அனால் சினிமா என்று வரும்பொழுது நாவலின் கிளைமாக்ஸ் யோசித்து பார்க்க வேண்டிய ஒன்று. அதே கிளைமாக்ஸ் வைத்தால் மக்கள் ஏற்று கொள்வார்களா என்பது மிக சந்தேகம். இந்த ஆர்டிகிள் சொன்னது போல பொன்னியின் செல்வன் சினிமாவிற்காக எழுதப்பட்டது அல்ல படிப்பதற்காக மட்டுமே எழுதப்பட்டது நிறைய உண்மையுடனும் சில கற்பனையுடனும். ஆதித்ய கரிகாலனை கொன்றது யார் என்பது வரலாற்று மர்மம் இன்று வரை. இதை எல்லாம் அப்படியே வைத்தால் பத்திரிகைகள் கிழித்துவிடும் விமர்சனங்களால். என்னை பொறுத்தவரை நாவலை ஒப்பிடாமல் பார்த்தல் சுமாரான படமாக வரும். ஒப்பிட்டால் சுத்தமாக படம் காலி. மேலும் பாகுபலி, ஆர் ஆர் ஆர் மற்றும் கே ஜி எப் போன்றவற்றை எல்லாம் காலி செய்யும் என்று உதார் விடாமல் இருந்தாலே போதுமானது. அடக்கம் அமரருள் வைக்கும் என்று தமிழ் மக்களுக்கு என்று தான் புரிய போகிறதோ. நாம் நம்மை பற்றி விடுமானால் (பெருமையாக) பேசி கொள்ளலாம். ஏன் மற்ற படங்களை பற்றி பேச வேண்டும். அவர்கள் பேசினார்களா? இல்லையே. செயலில் காண்பித்தார்கள். நாம் பேசி பேசியே நம்மை குறைத்துக்கொள்வோமோ?
Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
12 ஜூலை, 2022 - 15:47 Report Abuse
அம்பி ஐயர் சிறப்பான ஒரு வரலாற்று கற்பனைக் கதையினை மகா கேவலமாக எடுத்திருக்கிறார்கள்..... டீசரே அவ்வளாவு கேவலமாக இருக்கிறது..... மணிரத்னம் இந்தக் கதையை முழுமையாகப் படித்தாரா என்பது கேள்வி....
Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
12 ஜூலை, 2022 - 15:45 Report Abuse
அம்பி ஐயர் பான் இந்தியா படமா அல்லது பான் உலகப் படமா என்பது முக்கியமல்ல..... அது பார்ன் மூவிஸாக இல்லாமலிருந்தால் சரித்தான்....
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in