எஸ்பிபி போல் மூச்சுவிடாமல் பாடி அசத்திய மஹதி! | தொடர்ந்து நாயகிகளுக்கு ‛ரம்யா' பெயர்: ஆதிக் ரவிச்சந்திரனின் ‛சென்டிமென்ட்' | “தம்பி கலக்கிட்டான்” - ‛மிஸ்டர் எக்ஸ்' கவுதம் கார்த்திக்கு ஆர்யா பாராட்டு | மெகா பட்ஜெட்டால் கிடப்பில் போடப்பட்ட பயோபிக் படம் | டோலிவுட் நடிகர்களிடம் சரண்டர் ஆன நடிகை | சினிமாவிலும் சிறகடிக்க ஆசை: மனம் திறக்கும் கோமதி பிரியா | ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்படும் ராஷி கண்ணா | 9 வயதிலேயே பேட் டச்! நேஹா கவுடா சந்தித்த கொடூரம் | ஜி.வி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்துக்கு நான் காரணமா? மனம் திறந்த திவ்யபாரதி | அடுத்தடுத்து இரண்டு சீரியல்களில் கமிட்டான ஷோபனா |
நடிக்க திறமை இருந்தால் போதும் நிறம் முக்கியமில்லை என்பதை நிருபித்து காட்டி தமிழ் திரையுலகில் வளர்ந்து வருபவர் நடிகை இஸ்மத்பானு. இவர் நம்முடன் பகிர்ந்தது...
பிறந்தது புதுச்சேரியில் உள்ள சித்தாமூர் கிராமம். வளர்ந்தது, பள்ளி, கல்லுாரி படிப்பு எல்லாமே சென்னை. பி.ஏ., இதழியல் பயின்றேன். அப்போதே தனியார் தொலைக்காட்சியில் மண்பேசும் சரித்திரம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அங்கு நிருபராக பணியாற்றினேன்.
நல்ல வசதியாக வாழ்ந்து ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் இழந்தது எங்கள் குடும்பம். மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து துவக்க வேண்டிய நிலை எங்களுக்கு. இதனால் வீட்டை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ஏற்பட்டதால் வருமானத்தை பெருக்க ஏதாவது ஒன்று செய்ய வேண்டிய நிலை உண்டானது.
அந்த நேரத்தில் சினிமா ஷூட்டிங் பணிக்கு சென்றால் தினமும் வருமானம் கிடைக்கும் என தெரிந்த நண்பர் சொன்னார். சினிமாவில் சிறிய வாய்ப்பு கிடைத்தது. நாட்கள் செல்ல செல்ல சினிமாவின் மீது காதல் ஏற்பட்டது. ஒரு சில காட்சிகளில் நடித்தாலும் என்னை நானே திரையில் பார்த்ததால் ஆர்வம் அதிகரித்தது.
ஆரம்பத்தில் நடிக்கும் போது, கேமரா எப்போதும் நம்மை கவனிக்காது. இந்த கேமரா எப்போதாவது நம்மை திரும்பி பார்க்காதா என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. இப்படி வாய்ப்புக்காக ஏறி இறங்கிய நிறுவனங்களே 500க்கும் மேல் இருக்கும். இடையிடையே கொஞ்சம் எழுதவும் செய்தேன்.
மகாமுனி, சிவப்பு மஞ்சள் பச்சை, ஏ-ஒன் ஆகிய படங்களில் சிறு கதாபத்திரங்களில் நடித்துள்ளேன். ஒரு நாள் திடீரென இயக்குனர் வெற்றிமாறன் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். அதை நம்ப முடியாமல் யாரோ அலைபேசியில் விளையாடுகின்றனர் என நினைத்தேன்.
அப்படி கிடைத்தது தான் அசுரன் திரைப்படம். இந்த ஒரு படம் என் வாழ்க்கையை திருப்பி போட்டது. இதற்கு பின் நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக முடக்கம் ஏற்பட்டதால் வாய்ப்புகள் குறைந்து மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டிய நிலை உண்டானது.
ஆனால் நம்பிக்கையை விடாமல் மனதை தயார்படுத்தி கொண்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் பணம் மீதான நாட்டம் குறைந்து நல்ல கதாபாத்திரம் மீதான நாட்டம் அதிகரித்தது. இந்த ஆசையால் மட்டுமே தற்போது தொடர்ந்து வளர்ந்து வருகிறேன்.
வாழ்க்கையில் எனக்கு மிகவும் பாதுகாப்பான வேலையாக இருக்கிறது சினிமா. அதிகாலை 2:00 மணிக்கு படப்பிடிப்பு நடந்தாலும் அச்ச உணர்வு ஏற்படுவதில்லை.
கடந்தாண்டு டிசம்பரில் லேபிள் என்ற வெப்சீரிஸ், ரகுதாத்தா, வெப்பம் குளிர் மழை ஆகிய படங்கள் வெளியானது. மதுரையில் ஷூட்டிங் நடக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறேன்.
நிருபராக இருந்த போது எல்லா கஷ்டமான சூழ்நிலையிலும் பணியாற்றிய அனுபவம், கேமரா முன் நிற்கும் போது ஏற்படும் பதற்றம், வசனங்கள் உச்சரிப்பு குறை, குரல் தயக்கம் ஆகியவற்றை தெளிவாக எதிர்கொண்டு சாதிக்க உதவியது.
ஒரு கதாபாத்திரத்தில் மனம் ஒத்து நடிக்க முடிந்தால் போதும் அதில் நடிக்கும் அனைவருமே கதாநாயகன், கதாநாயகியாக ஆகிவிடுவர்.
சினிமாவில் முன்பு சிவப்பு நிற கதாநாயகிகள் வேண்டும் என பலரும் விருப்பப்பட்டது உண்டு. ஆனால் தற்போது இயக்குனர்கள் மத்தியில் இந்த மனநிலை இல்லை. இதற்கு முக்கிய காரணம் படத்தில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நபராக இருக்க வேண்டும் என்ற மக்கள் விருப்பம். யதார்த்தமான படங்களின் வருகையால் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. இதனால் கறுப்பாக இருப்பவர்களை விரும்பி நடிக்க அழைக்கின்றனர்.
25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். தோல்விகளில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். நினைத்தது அனைத்தும் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது. அதனால் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்ற தொடர்ந்து போராடி வருகிறேன்.
ஒரு கதாபாத்திரத்தில் மனம் ஒத்து நடிக்க முடிந்தால் போதும் அதில் நடிக்கும் அனைவருமே கதாநாயகன், கதாநாயகியாக ஆகிவிடுவர்.