தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

கோவை நீலிக் கோணம் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் எழுத்தாளர் சந்திரகுமார். இவர் எழுதிய 'லாக்கப்' என்ற நாவலை, இயக்குனர் வெற்றிமாறன் 'விசாரணை' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்.
இந்த படம், சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச விருதை பெற்றது. தொடர்ந்து கதைகள் எழுதி வரும் இவர், இப்போது சினிமாவில் நடித்து வருகிறார். 'யாத்திசை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
இப்போது விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில், முக்கிய பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். எழுத்தாளர் சந்திரகுமாருடன் பேசிய போது, தனது நடிப்பு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
எத்தனை படங்களில் நடித்து இருக்கிறீர்கள்?
இதுவரை எட்டுப்படங்களில் நடித்து இருக்கிறேன். ஆறு படங்கள் வெளி வந்துள்ளன. யாத்திசை படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தேன். இப்போது 'தங்கலான்' படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறேன்.
தங்கலான் படத்தில் நடித்ததை பற்றி சொல்லுங்களேன்?
தங்கலான் படத்தில் நடித்தது, என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு அனுபவமாகும். இன்றைக்கு தமிழ் சினிமாவின், மிக முக்கியமான இயக்குனர் பா.ரஞ்சித். அவரது படங்களில் தங்கலான் முக்கியமான படம். அதில் விக்ரம், பசுபதி போன்ற நடிகர்களுடன் சேர்ந்து, முனியன் என்ற கேரக்டரில் நானும் நடித்து இருக்கிறேன். இதை எனக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக நினைக்கிறேன்.
தங்கலான் கதைக்களம் என்ன?
அந்த கதையை இப்போது சொல்ல முடியாது. பெரும்பாலான படிப்பிடிப்பு கோலார் தங்க வயல் பகுதியில் தான் நடந்தது. வரலாற்றை ஒட்டிய புனைவுதான் இந்த கதை. 1870 ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில், வேப்பேரி என்ற கிராமத்தில் கிடைத்த ஒரு கல்வெட்டை அடிப்படையாக வைத்து, தங்கலான் என்பவர் தன் குழுவுடன் கோலார் தங்கவயலை நோக்கி பயணம் செய்கிறார். அவரின் பயண அனுபவம்தான் இந்த படம்.
ஒரு எழுத்தாளரான நீங்கள், நடிகரான அனுபவம் பற்றி?
எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் கதைகளுக்காக,பல கதாபாத்திரங்களை உருவாக்கி அந்த பாத்திரங்களாக மாறி, மனதுக்குள் நடிப்பார்கள். நானும் அப்படித்தான். என் கதைகளின் பாத்திரங்களாக மனதுக்குள் நடித்துக் கொண்டு இருந்தேன். இப்போது, சினிமாவில் இயக்குனர்கள் கொடுக்கும் கதா பாத்திரங்களை ஏற்று, வெளியில் நடிக்கிறேன். இந்த இரண்டு அனுபவங்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
இப்போது என்ன எழுதி கொண்டு இருக்கிறீர்கள்?
கொரோனா காலம் பற்றிய, ஒரு நாவலை எழுதி முடித்து விட்டேன். 'முது மக்கள் தாழி' என்ற நாவல் முடியும் நிலையில் உள்ளது. விரைவில் வெளியிட இருக்கிறேன்.