ஈகை கருணாகரன், சாந்தி கருணாகரன் இணைந்து தயாரிக்க, யுனிவர்சல் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம், திருநா. இந்த படத்தின் கதாநாயகனாக சுபாஷ் அறிமுகம் ஆகிறார். இவர், தயாரிப்பாளர் ஈகை கருணாகரனின் மகன் ஆவார். கதாநாயகியாக புதுமுகம் ஹாசினி அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் போஸ் வெங்கட், கிரேன் மனோகர், சிந்து மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்டு செய்கிறார், ரவி எம்.எஸ். இவர் டி.கே.ராஜேந்திரன், மாதேஷ், திருமுருகன் ஆகிய டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். கதை சம்பவங்கள் முழுவதும் மதுரையில் நடைபெறுவதால், அனைத்து கதாபாத்திரங்களும் மதுரை தமிழில் பேசுவதுபோல் வசனம் எழுதப்பட்டு இருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த `ஆட்டுக்கார அலமேலு' படத்தில் இடம்பெற்ற ``பருத்தி எடுக்கையிலே பல நாளா பார்த்த மச்சான்'' என்ற பாடல், இந்த படத்துக்காக, `ரீமிக்ஸ்' செய்யப்படுகிறது. இந்த பாடல் திருநா படத்தின் ஹைலைட்டாக அமையும் என்கிறார் இயக்குனர் ரவி.
- தினமலர் சினி டீம் -