காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

எம் ஜி ஆர் நடித்து, வெளிவந்த அவரது 136 திரைப்படங்களில் ஒரு புராண இதிகாச கதையில் அவர் நடித்து, இறுதியில் அவரது கதாபாத்திரம் இறப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டு, அதை அவரது ரசிகர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க படமாக்கப்பட்டு, ஒரு பெரும் வெற்றியைப் பதிவு செய்த திரைக்காவியமாக வெளிவந்து, ரசிகர்களால் இன்றும் பெரிய அளவில் ரசிக்கப்பட்டு வரும் ஒரு திரைப்படம்தான் “மதுரை வீரன்”.
தமிழ் சினிமாவின் முதல் பேசும்பட நாயகி என பெயர் பெற்ற டி பி ராஜலக்ஷ்மி நடித்து, இயக்கி, 1939ல் வெளிவந்த “மதுரை வீரன்” திரைப்படத்தின் கதையை மீண்டும் “கிருஷ்ணா பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்து, 1956ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக வெளியிட்டனர். இந்த “மதுரை வீரன்” திரைப்படத்தில் மதுரை வீரனாக மக்கள் திலகம் எம் ஜி ஆரும், பொம்மியாக பி பானுமதியும், வெள்ளையம்மாவாக நடிகை பத்மினியும் நடித்திருந்தனர்.
எம் ஜி ஆரும் நடிகை பத்மினியும் இணைந்து நடித்த முதல் திரைப்படமாக வெளிவந்த இத்திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தை முதன் முதலாக வடிவமைத்துத் தந்திருந்தவர் கவிஞர் கண்ணதாசன். மேலும் எம் ஜி ஆர், நடிகை பத்மினி ஆகியோரின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல் திரைப்படமாக அமைந்த இந்த “மதுரை வீரன்” திரைப்படம், 36 திரையரங்குகளில் 100 நாள்களுக்கும் மேல் ஓடியது. மதுரை சிந்தாமணி திரையரங்கில் 200 நாள்களையும் கடந்து ஓடி வெள்ளி விழா கண்டது.
இத்திரைப்படத்தின் வெற்றி விழா மதுரையில் நடந்த போது, மதுரை முத்து இவ்விழாவில் எம் ஜி ஆருக்கு தங்கவாள் ஒன்றை பரிசளித்துப் பெருமைப்படுத்தினார். பின்னாளில் இந்திய-சீன யுத்தத்தின் போது, அந்த தங்கவாளை ஏலம் விட்டு, அதன் மூலம் பெறப்பட்ட பணத்தை, யுத்த நிவாரண நிதிக்காக எம் ஜி ஆர் வழங்கினார் என்பது குறிப்பிடத் தகுந்த ஒன்று.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான “கிருஷ்ணா பிக்சர்ஸ்” அதுவரை காணாத ஒரு பெரும் லாபத்தை இப்படத்தின் மூலம் ஈட்டியது. திரையில் மதுரை வீரனாக எம் ஜி ஆரைக் கண்ட ஏழை, எளிய மக்கள் மெய்சிலிர்த்துப் போனதோடு, படத்தின் இறுதிக் காட்சியில் மதுரை வீரன், தனது மனைவியரான பொம்மி மற்றும் வெள்ளையம்மா ஆகியோரோடு மரணித்து சொர்க்கலோகம் செல்வது போன்ற காட்சியைக் கண்டு பரவசமடைந்தனர். இப்படி வரலாற்று சிறப்பு மிக்க, எளிய மக்களின் காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வரும் “மதுரை வீராசாமி”யாக நடித்திருந்த மக்கள் திலகம் எம் ஜி ஆரின் திரை வரிசையில், இத்திரைப்படம் ஒரு போற்றுதலுக்குரிய அந்தஸ்தைப் பெற்ற காவியப் படைப்பாக இன்றும் ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நிற்கின்றது என்றால் அது மிகையன்று.




