கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

எம் ஜி ஆரை வைத்து பல படங்களை இயக்கி, அவற்றில் பெரும்பாலானவற்றை வெற்றித் திரைப்படங்களாகவே தந்து, எம் ஜி ஆரின் இயக்குனர்கள் என சொல்லும் அளவிற்கு தமிழ் திரையுலகில் தங்களுக்கென ஒரு தனிப் பெரும் பாதை அமைத்து, பல தரமான திரைப்படங்களைத் தந்த இயக்குனர்களான எம் ஏ திருமுகம், ப நீலகண்டன், கே சங்கர் ஆகியோரின் வரிசையில், தவிர்க்க முடியாத ஒரு இயக்குநராக பார்க்கப்படுபவர்தான் இயக்குநர் டி ஆர் ராமண்ணா.
“கூண்டுக்கிளி”, “புதுமைப் பித்தன்”, “பாசம்”, “பெரிய இடத்துப் பெண்”, “பணக்காரக் குடும்பம்”, “பணம் படைத்தவன்”, “பறக்கும் பாவை” என எம் ஜி ஆரை வைத்து இவர் தயாரித்து, இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் காலம் கடந்தும் பேசப்பட்டு வரும் கலை நயமிக்க கருத்தோவியங்களாக இன்றும் தமிழ் திரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் வந்த ஒரு அற்புதக் காவியப் படைப்புதான் “குலேபகாவலி”.
1955ம் ஆண்டு எம் ஜி ஆர் நடித்து, டி ஆர் ராமண்ணா தனது “ஆர் ஆர் பிக்சர்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ் தயாரித்து, இயக்கியிருந்த இத்திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றித் திரைப்படம். '1001 இரவுகள்' என்ற அரேபியக் கதையினைத் தழுவி எடுக்கப்பட்ட இக்கதையில், தந்தையால் வஞ்சிக்கப்பட்ட மகனாக, பல சிரமங்களையும், போட்டிகளையும் கடந்து, பகாவலி நாட்டிலுள்ள குலேப் என்ற மலரைக் கொண்டு வந்து, பார்வை பறிபோன தனது தந்தையின் கண்களை ஒளி வீசச் செய்து, சிறையில் அடைபட்டிருக்கும் தனது தாயையும் மீட்டெடுக்கும் மகனாக தாசன் என்ற கதாபாத்திரத்தில் எம் ஜி ஆர் நடித்திருந்த இத்திரைப்படத்தின் கதையையே, வேறு நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து, மீண்டும் 18 ஆண்டுகளுக்குப் பின் கதையிலும், கதாபாத்திரங்களிலும் ஒருசில மாற்றங்கள் செய்து, வண்ணத் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட திரைப்படம்தான் “பாக்தாத் பேரழகி”.
நடிகர் ரவிச்சந்திரன், ஜெயலலிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இத்திரைப்படத்தில், மேஜர் சுந்தர்ராஜன், சாவித்திரி, அசோகன், ஆர் எஸ் மனோகர், வி கே ராமசாமி, நாகேஷ், சச்சு, ஜெயசுதா, சுபா, சி ஐ டி சகுந்தலா என பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்ததும் இயக்குநர் டி ஆர் ராமண்ணாவே.
தனது மகனின் பெயரில் “கணேஷ் பிக்சர்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ் தயாரித்து இயக்கியிருந்தார். 1973ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் கதை, காட்சி அமைப்பு என ஒவ்வொன்றும் பழைய “குலேபகாவலி” திரைப்படத்தை அப்படியே மீண்டும் வண்ணத் திரைப்படமாக எடுத்து, பார்வையாளர்களின் கண்களுக்கு காட்சி விருந்து தந்தது போல் எடுக்கப்பட்டிருந்ததோடு, ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பையும், வசூல் ரீதியான வெற்றியையும் பெற்றிருந்தது.




