8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

நடிகர் சிவகுமார் முதன்மைக் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்திருந்த 1970களின் ஆரம்ப காலங்களில் வெளிவந்த அவரது குறிப்பிடும்படியான திரைப்படங்களில் ஒன்றுதான் “பொண்ணுக்கு தங்க மனசு” என்ற திரைப்படம். எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், முத்துராமன் போன்ற பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு மத்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற ஒரு திரைப்படமாக இவரது “பொண்ணுக்கு தங்க மனசு” திரைப்படத்தை குறிப்பிடலாம்.
இன்னும் குறிப்பிடும்படியாக சொல்லவேண்டும் என்றால், எம் ஜி ஆரின் அற்புதமான படைப்புகளில் ஒன்றான “உலகம் சுற்றும் வாலிபன்” என்ற திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த அந்தக் காலகட்டங்களிலேயே வெளிவந்து, ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்ததோடு, சில புதுமுகங்களை கலையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தும் புதுமை படைத்திருந்தது இந்த “பொண்ணுக்கு தங்க மனசு” திரைப்படம்.
'இசைஞானி' இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமான “அன்னக்கிளி” திரைப்படத்தை இயக்கிய தேவராஜ்-மோகன் என்ற இயக்குனர்களை திரையுலகிற்கு இயக்குனர்களாக அறிமுகம் செய்து வைத்த திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் இந்த “பொண்ணுக்கு தங்க மனசு”. மேலும் நடிகர் விஜயகுமாரை இரு நாயகர்களில் ஒருவராக முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்து வைத்ததும் இத்திரைப்படமே. படத்தின் இரு நாயகியரில் ஒருவரான நடிகை விதுபாலா நாயகியாக அறிமுகமானதும் இத்திரைப்படத்தின் மூலமே. இசையமைப்பாளர் ஜி கே வெங்கடேஷின் உதவியாளராக 'இசைஞானி' இளையராஜா பணியாற்றிய திரைப்படமாகவும் அமைந்த இத்திரைப்படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
குறிப்பாக “தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே” என்ற பாடலும், “தஞ்சாவூரு சீமையிலே” என்ற பாடலும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பாடல்களாக அமைந்திருந்தன. “தஞ்சாவூரு சீமையிலே” என்ற பாடலை எழுதியதன் மூலம் முத்துலிங்கம் என்ற ஒரு முத்தான கவிஞரும் தமிழ் திரையிசைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் இத்திரைப்படத்தின் வாயிலாக. இவை தவிர, “தஞ்சாவூரு சீமையிலே” என்ற இந்த ஒரு பாடலுக்கு மட்டும் மெட்டமைத்திருந்தது 'இசைஞானி' இளையராஜா என்ற ஒரு கூடுதல் தகவலும் உண்டு.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ஆஸ்தான கதாசிரியர்களில் ஒருவரான பாலமுருகன் கதை வசனம் எழுத, சிவாஜியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான இயக்குநர் பி மாதவன் தயாரிக்க, சிவகுமார், ஜெயசித்ரா, விஜயகுமார், விதுபாலா ஆகியோர் நடித்து 1973ம் ஆண்டு ஜுன் மாதத்தில் வெளிவந்த இத்திரைப்படம் சில புதுமுக வரவுகளோடு, பல புதுமைகளைக் கொண்டு இன்றும் ரசிகர்களின் விருப்பத்திற்கினிய ஒரு திரைக்காவியமாகவும் இருக்கிறதென்றால் அது மிகையன்று.




