ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

இந்திய சினிமா உருவாகி நூறாண்டுகளைக் கடந்துவிட்டது. தென்மாநில மொழிகளிலும் நூறாண்டுகளுக்கும் மேலாக பல சாதனைத் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தக் காலப் படங்கள் பலவற்றின் 'படச்சுருள்' பாதுகாக்கப்படாமல் அழிந்து போய்விட்டன. பல படங்கள் பற்றிய தரவுகள் மட்டுமே உண்டு. சில படங்களை அந்தந்தத் தயாரிப்பாளர்கள் பாதுகாத்து வைத்துள்ளனர்.
இருப்பினும் அரசு சார்பில் இந்தியத் திரைப்படங்களைப் பாதுகாத்து வருங்காலத்து ரசிகர்களும் பார்க்கும் அளவிற்கு செய்வதற்காக இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் 1964ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் அது இயங்கி வருகிறது. அங்கு திரைப்படச் சுருள்கள், திரைப்படம் சம்பந்தமான நூல்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட சினிமா சார்ந்த பல அரிய பொக்கிஷங்கள் பாதுகாத்து வைக்கப்படுகிறது.
தேசிய திரைப்பட பாரம்பரிய பணியின் அடிப்படையில் புனேவில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் ஆகியவை இணைந்து 1951ம் ஆண்டு வெளிவந்த 'பாதாள பைரவி' படத்தை டிஜிட்டல் முறையில் மீட்டு எடுத்துள்ளது. அது பற்றிய செய்திப் படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
கே.வி. ரெட்டி இயக்கத்தில் என்டி ராமராவ், எஸ்வி ரங்காராவ், மாலதி மற்றும் பலர் நடித்த இந்தப் படம் 1951ல் தமிழ், மற்றும் தெலுங்கில் வெளியானது. தெலுங்கில் மார்ச் 15, 1951ம் ஆண்டும், தமிழில் மே 17, 1951ம் ஆண்டும் வெளியாகி உள்ளது. இரண்டு மொழிகளிலும் பெரிய வெற்றியைப் பெற்ற படம். தெலுங்கு சினிமாவில் முதன் முதலில் 200 நாட்கள் ஓடிய படம். ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது. 1952ல் மும்பையில் நடைபெற்ற முதலாவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்தியப் படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.
ஆவணக் காப்பகம் வெளியிட்ட செய்தி வீடியோவில் 'பாதாள பைரவி' படத்தின் தெலுங்குப் பதிப்பு மட்டுமே உள்ளது. தமிழ்ப் பதிப்பையும் சேர்த்து டிஜிட்டல் செய்து, அதை மக்களிடமும் கொண்டு வந்து திரையிட்டால் அந்தக் காலத்தில் 'மேஜிக்' செய்த ஒரு படத்தின் சாதனையைப் பார்த்து ரசிக்க முடியும்.