
எனக்கும் பல படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை... : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
“சமீபத்தில் மலையாளத்தில் கல்யாணி நடிப்பில் ஹிட்டான படம் லோஹா. அது வாம்பயர், அதாவது ரத்த காட்டேரிகள் பின்னணியில் உருவானது. இம்மார்டல் கதையும் அப்படிதான். யார் ரத்த காட்டேரி என்பது சஸ்பென்ஸ். இம்மார்டல் என்றால் சாகாவரம் பெற்றவர்கள் என அர்த்தம். அந்த தலைப்புக்கும், கதைக்கும் தொடர்பு இருக்கிறது. கதைப்படி 4 ஆயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு கேரக்டர் வருகிறது. அவரையும் யார் என்று சொல்லமாட்டோம். இந்திய சினிமாவிற்கு புதிதான வாம்பயர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். ஒரு ஆண்டுக்கு மேலாக உழைத்து சிஜி மற்றும் மான்ஸ்டர் காட்சிகளை உருவாக்கியுள்ளோம். இது ஒரு சர்வைவல் திரில்லராகவும் இருக்கும்.
சாம்.சி.எஸ் இசை
இயக்குனர் மாரியப்பன் சின்னா கூறிய கதை ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. இது எந்தப் படத்தின் காப்பியும் இல்லை, முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் முயற்சி. கயாடு லோஹர் இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். அவரது ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக மிகுந்த உழைப்பை வழங்கியுள்ளார். அவருடைய பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.
எனக்கும் கிடைக்கல
எங்கள் குடும்பத்துக்கு 10வது தேசிய விருது கிடைத்துள்ளது. என் தாத்தா ஆர்.கே .சேகர் இசைப் பணிகளை தொடங்கினார். அவர் இசையமைப்பாளர் ஆக இருந்தார். அவரால் பெரிதாக ஜெயிக்க முடியவில்லை. அதற்குள் கேன்சரில் காலமாகிவிட்டார். அடுத்து மாமா, நான் என பலரும் குடும்பத்தில் இசைத் துறையில் இருக்கிறோம். விரைவில் அமரன் படத்துக்காக தேசிய விருது வாங்க உள்ளேன். எனக்கு தேசிய விருது அறிவித்ததில் சர்ச்சை வரவில்லை. அதேசமயம் பல தகுதியான படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. நான் இசையமைத்த வெயில், ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், அசுரன், தெய்வத்திருமகள், மதராசபட்டினம் போன்ற படங்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த ஆண்டு சிறப்பு
இப்போது இசையமைப்பாளர், நடிப்பு, தயாரிப்பு என நேரத்தை பிரித்து கொள்கிறேன். முன்பே வேலைகளை திட்டமிடுகிறேன். போலி வாக்குறுதி கொடுப்பது இல்லை. என்னால் முடியாவிட்டால், முடியாது என சொல்லிவிடுகிறேன். அடுத்து நடிப்பில் சில படங்கள் வர உள்ளன. தமிழ் தவிர, தெலுங்கிலும் பிஸியாக இருக்கிறேன். இந்த ஆண்டு எனக்கு சிறப்பாக அமைந்துள்ளது. யூத், ஹேப்பிராஜ் தொடங்கி விஸ்வநாத் அண்ட் சன்ஸ், இருமுடி படங்கள் வெற்றி பெற்றுள்ளன. தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு பல்வேறு இடங்களில் கச்சேரிகள் நடத்த ஆசை. ஆனால் நேரம் இல்லை. அடுத்து மலேசியாவில், கனடாவில் நடத்த உள்ளேன்.
கல்யாணவிருந்து பாடல்
இம்மார்டல் படத்தில் தான் டிராகன் படத்துக்கு முன்பே கயாடு லோஹர் ஒப்பந்தம் ஆனார். அவர் கேரக்டர் பேசப்படும். இந்த படத்தின் டிரைலரில் காதல் காட்சிகளை மட்டும் காண்பித்துள்ளனர். அடுத்து ரத்தக் காட்டே ரி, இன்னும் சில விஷயங்கள் இருக்கிறது. அது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. பல்வேறு விமர்சனங்களை தாண்டி நடிப்பு, சினிமா என இரண்டிலும் ஜெயித்து இருக்கிறார் முதல்வர் விஜய். அவருக்கு வாழ்த்துகள். டோரதி படத்தில் இளையராஜாவின் கல்யாண விருந்து பாடல் கேட்டேன், எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இந்த மூன்று பேரும் எனக்கு ரோல் மாடல்கள். அவர்கள் பாடல்கள், இசையில் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவர்களை எப்போதும் போட்டியாக நினைக்க கூடாது. அவர்கள் அதற்குமேல்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!