தினமலர் விமர்சனம் » போட்டா போட்டி
தினமலர் விமர்சனம்
கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், தமிழ் சினிமாவில் நாயகர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் "போட்டா போட்டி!"
ஒரே பெண்ணுக்கு முறைமாமன்கள் இருவர் போட்டி போட, அவர்கள் தலைமையில் கிரிக்கெட் போட்டி நடத்தி அதில் எந்த அணி ஜெயிக்கிறதோ, அந்த அணி தலைவருக்கு பெண்ணை கட்டி வைப்பது என முடிவு செய்கிறது ஊர் பஞ்சாயத்து. அதன்படி கிரிக்கெட் பயிற்சிக்கு தேடும் இரு குரூப்பிடமும், சிக்கி சின்னா பின்னமாகும் கேரக்டர் சடகோபன் ரமேஷூக்கு... இதனோடு, அந்த கிராமத்தான்கள் இருவரும் கட்டிக் கொள்ள துடிக்கும் அவர்களது முறைப்பெண், சடகோபன் ரமேஷை காதலிக்க, ரமேஷின் கடைக்கண் பார்வையும் அவர் மீது விழுகிறது. அப்புறம்...? அப்புறமென்ன நாயகி, நாயகர் ரமேஷூக்கா...? அல்லது அந்த முரட்டு கிராமத்தான்களுக்கா...? என்பது க்ளைமாக்ஸ்! கூடவே கிரிக்கெட் போட்டியில் வென்றது ரமேஷ் பயற்சி அளித்த அணியா...?, போலி பயிற்சியாளர் மயில்சாமி பாவ்லா செய்த அணியா...? என்பதை வித்தியாசமும், விறுவிறுப்புமாக, காமெடியும் கலகலப்புமாக சொல்லி கலக்கி இருக்கிறார் இயக்குநர் யுவராஜ்!
கிரிக்கெட் பிளேயர் சடகோபன் ரமேஷாகவே பாத்திரம் ஏற்றிருப்பதால் பளிச்சிட்டிருக்கிறார் ரமேஷ். முரட்டு காமெடி கிராமத்தான் கொடைவாணனாக ஆர்.சிவம் என்பவரும், அவரது அஸிஸ்டண்ட் அவதாரமாக கணேஷூம் கலக்கி இருக்கின்றனர். முரட்டு கொலைவாணனாக உமர், சரியான வில்லனாக விஸ்வரூபமெடுத்திருக்கிறார். போலி பயிற்சியாளர் மயில்சாமி தன் பாணியில் கலகலப்பு காமெடி பந்தி வைத்து படத்தை பலமாக்குகிறார்.
அருள்தேவ் இசை, கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு உள்ளிட்ட யதார்த்தம் பலவற்றுடன், யுவராஜின் எழுத்து இயக்கத்தில், "போட்டா போட்டி", "பட்டிதொட்டி" எங்கும் பட்டையை கிளப்புவது நிச்சயம்!
----------------------------------------------
குமுதம் விமர்சனம்
உப்பார்பட்டி கிராமம். அங்கே கொடை வாணன், கொலை வாணன் என இரண்டு மைனர்கள். இவர்கள் இருவருக்குமே மாமன் மகளை கல்யாணம் செய்துகொள்ள ஆசை. யாருக்குப் பெண் கொடுப்பது? என்ற பஞ்சாயத்துத் தீர்ப்பில் "கிரிக்கெட் விளையாட்டில் ஜெயிப்பவர்களுக்கு பெண் கொடுப்பது என முடிவாகிறது. கிரிக்கெட் அணிக்கு எத்தனை பேர் இருப்பார்கள் என்று கூட தெரியாத இவர்களில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதே கதை.
பெரிதாக நடிக்கவோ, சண்டை போடவோ, டூயட் ஆடவோ வாய்ப்பு இல்லை என்றாலும், இரண்டாம் பாதியில் கிராமத்து மனிதர்களோடு சடகோபன் ரமேஷ் இணைந்து செய்யும் காமெடி கலவரங்கள் நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன. மயில்சாமி செய்யும் காமெடி உச்சக்கட்டம்.
வித்தியாசமாக கதை சொல்கிறேன் என ரசிகர்களைப் படுத்தி எடுக்காமல் கிராமம், கிரிக்கெட் போட்டி என்ற எளிமையான விஷயத்தை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் யார் ஜெயிக்கப் போகிறார்கள், ஹீரோயின் ஹரிணி யாருடன் ஜோடி சேர்கிறார் என சஸ்பென்ஸ் கொடுத்திருப்பது நம்மை ரசிக்க வைக்கிறது.
போட்டா போட்டி - வெற்றிக் கூட்டணி.
குமுதம் ரேட்டிங் - ஓகே
---------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்ஒரு ஊர்ல கொடைவாணன்; கொலைவாணன்னு ரெண்டு பேர் இருக்காங்க. ஊர்ல எந்த நல்லது நடந்தாலும், அதுக்குப் பொறுப்பு இவங்க கிடையாது; அந்த அளவுக்கு ரொம்ப நல்லவங்க! இந்த ரெண்டு பேருக்கும் நடுவுல, கிரிக்கெட்டும், காதலும் புகுந்து சிரிப்பா சிரிக்குது. அந்தச் சிரிப்புதான் போட்டாபோட்டி.
ப்ளஸ்:* லைட்டான சிரிப்பு கதைக்கு வெயிட்டான சடகோபன் ரமேஷ் கிரிக்கெட்டராக நடித்திருப்பது.
* கிரிக்கெட்டுக்குள் ரமேஷ் அடிக்கும் காமெடி பவுண்டரி!
* கொடைவாணன் சிவத்தின் அங்க சேஷ்டைகளும்; அட்ரா சக்கை அந்தர் பல்டியும்!
* காஷ்மீர் ஆப்பிளாக அத்தனை ஃப்ரெஷ் ஹீரோயின் ஹரிணி.
* கிராமத்துப் பெண் போல தோற்றமில்லை என்றாலும், அழகால் சமாளிக்கும் ஹரிணி, அழகு ஹைக்கூ!
* சச்சினிடம் மயில்சாமி ஃபோனில் பேசும் அஜால்குஜால் இந்தி டயலாக்.
* ஃபுட்பால் மேட்சை டி.வி.யில் போட்டு, கிரிக்கெட் ஆடக் கற்றுத் தருகையில் "பந்து என்ன பெரிசா இருக்கு என்று அடிக்கும் கிராமத்து லூட்டி.
* சீரியஸான கிரிக்கெட்டை சிரிசிரிகெட்டாகத் தந்த இயக்குனர் யுவராஜ்.
மைனஸ்:* ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும் திரைக்கதை!
* மருந்துக்குக்கூட லாஜிக் தன் மேஜிக்கை காட்டவில்லை!
* அருள்தேவின் இசையில் அருள் வரவில்லை.
* ஒளிப்பதிவும் தன் பங்குக்கு ஒட்டவில்லை.
போட்டாபோட்டி - காமெடி பவுண்டரி!