சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

பள்ளி பருவத்தில் இருந்து சினிமாவில் நடிக்க துவங்கியவர், 18 ஆண்டுகளாக அயராது உழைத்து தனக்கான இடத்தை பிடித்தவர், வெற்றி ஒன்றை அடைவது மட்டுமே முழு நேர பணியாக தொடர்ந்து போராடும் 'ப்ளூ ஸ்டார்' பிருத்வி பாண்டியராஜன் நம்முடன் பகிர்ந்தது.
பிருத்விராஜன் பெயர் கொண்ட சிலர் சினிமாவில் இருப்பதால் அடையாளம் தெரிந்து கொள்வதற்காக, எனது தந்தை இயக்குனர், நடிகர் பாண்டியராஜன் பெயரை இணைத்து பிருத்வி பாண்டியராஜன் என பெயரை மாற்றிக்கொண்டேன்.
வாழ்க்கையில் என்னவாக ஆகப்போகிறோம் என தெரியாத 17 வயதில் பிளஸ் 2 படிக்கும் போது சினிமாவில் நுழைந்தேன். இதனால் கல்லுாரிக்கு செல்ல முடியாமல் தொலைதுாரக்கல்வியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்து முடித்தேன். என்னுடைய 'கை வந்த கலை' முதல் திரைப்படம் தந்தை இயக்கத்தில் 2006ல் வெளியானது. இப்படத்தில் தந்தையின் சாயல் தெரிவதாக சிலர் தெரிவித்தனர், இருந்தாலும் முதல் படம் மறக்க முடியாத அனுபவம்.
பின் பதினெட்டாம்குடி, நாளைய பொழுது உன்னோடு, வாய்மை உள்பட 18 படங்களில் கதாநாயகனாகவும், முன்னணி நடிகராகவும் நடித்துள்ளேன். ஒரு கட்டத்தில் நமக்கு பொருத்தமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற பக்குவம் கிடைத்தது.
18 ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும் 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் தான் எனக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தது. இதற்கு முன்பு நடித்த படங்களை தெரிந்தவர்கள் பார்த்து விட்டு நன்றாக இருக்கிறது என பாராட்டுவார்கள். ஆனால் ஒரு படம் பார்த்து மிகவும் பிடித்து ஆத்மார்த்தமாக யாரென்று தெரியாத நபர்கள் என்னை பாராட்டுவது 'ப்ளூ ஸ்டார்' படத்தில் கிடைத்தது.
இந்த வெற்றியால் அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டியுள்ளது. நம்மை நம்பும் மக்களை ஏமாற்றக்கூடாது என்பதால் தேர்வு செய்து நடிக்கிறேன். இப்படத்தில் இருந்து, என்னால் மற்றவர்களை சிரிக்க வைக்க முடியும் என பலரும் தெரிவித்தனர். இப்படத்திற்காக ஓரிரு மாதங்களில் 81 கிலோவில் இருந்து 69ஆக உடல் எடையை குறைத்தேன்.
ஒரு சின்ன இடைவெளி ஏற்பட்டு இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி கிடைக்கும் வாய்ப்புகளில் சிறந்த ஒன்றை தேர்வு செய்வது எளிதான காரியமல்ல. சினிமாவில் கிடைக்கும் அங்கீகாரம், புகழ், மனநிறைவு வேறு தொழில்களில் கிடைக்காது என்பதால் காத்திருக்கலாம்.
தற்போது 'பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளேன். தனுஷ் உடன் இணைந்து ஒரு படம், ஒரு இன்வேஸ்டிகேஷன் த்ரில்லர் வெப்சீரிஸில் நடித்து வருகிறேன்.
ஒரு நல்ல காதல் கதையில் நடிக்க வேண்டும். தமிழ், மலையாளத்தில் சில படங்களை பார்க்கும் போது நாம் இது போன்ற படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என விரும்பியது உண்டு. இவர் நடித்தால் படம் நன்றாக இருக்கும், அதற்காக படத்தை பார்க்கலாம் என மக்கள் நினைக்கும் அளவுக்கு ஓரிடத்தை பிடிக்க வேண்டும்.