தமிழ் ரீமேக் ஆன சிங்கம் சில வருடங்களுக்கு முன் பாலிவுட்டில் அஜய் தேவகன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து அங்கே சிங்கம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்குனர் ரோஹித் ஷெட்டி தானாகவே உருவாக்கி இயக்கி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியான நிலையில் தற்போது சிங்கம் அகைன் என்கிற பெயரில் இதன் மூன்றாவது பாகத்தை இயக்கி வருகிறார் ரோஹித் ஷெட்டி. இந்த படத்திலும் அஜய் தேவ்கனே கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே ரவுடிகளுடன் அஜய் தேவ்கன் மோதும் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் எதிர்பாராத சமயத்தில் கொஞ்சம் டைமிங் மிஸ் ஆனதால் பைட்டர் ஒருவர் விட்ட குத்து அஜய் தேவ்கனின் கண்களை பதம் பார்த்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவர் உடனடியாக வரவழைக்கப்பட்டு அஜய் தேவ்கனின் கண்களை பரிசோதித்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கும்படி வலியுறுத்தினார்.
ஆனால் இன்னொரு பக்கம் ரோஹித் ஷெட்டி மற்ற ரவுடிகளையும் பைட்டர்களையும் வைத்து படமாக்க வேண்டிய மீதி காட்சிகளை இடைவெளி விடாமல் படமாக்கிக் கொண்டே இருந்தார். சில மணி நேரம் கழித்து அஜய் தேவ்கனுக்கு கண்களின் பாதிப்பு சரியானதும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்க துவங்கினார். வழக்கமாக இதுபோன்ற தருணங்களில் படப்பிடிப்பை சில நாட்களாவது நிறுத்திவிட்டு பின்னர் தொடர்வது தான் வழக்கம். ஆனால் இந்த படத்தை சூட்டோடு சூடாக முடிக்க வேண்டும் என்பதால் இயக்குனரும், ஹீரோவும் எந்தவித இடைவெளியும் விடாமல் ஒத்துழைப்பு கொடுத்து இந்த படத்திற்காக இயங்கி வருகின்றனர்.