நட்பு என்பது கற்பை விட மேலானது என்ற கருவை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் புதிய படம் "கோட்டை". கதைப்படி நடிகர் பிரபுவும், நடிகர் சம்பத்தும் நெருங்கிய நண்பர்கள். ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தது போல், சம்பத்தின் மனதில் பொறாமை என்ற விஷம் ஏற ஆரம்பிக்கிறது. அதனால் பிரபுவை கொன்றுவிட்டு, அவருடைய சொத்துக்களை அபகரிக்கிறார், சம்பத். சொத்துக்களை இழந்த சித்தாரா தனது மகனை வளர்த்து ஆளாக்கி, சம்பத்தை எப்படி பழிவாங்குகிறார்? என்பதே கதை.
பிரபு-சித்தாராவின் மகனாக ஆர்த்திக் என்ற புதுமுகம் அறிமுகம் ஆகிறார். இவருக்கு ஜோடியாக சுசித்ரா உன்னி நடிக்கிறார். இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரன், விஜய் கிருஷ்ணராஜ், முத்துக்காளை, சிவநாராயணமூர்த்தி, நெல்லை சிவா, மற்றும் பலரும் நடிக்கிறார்கள். நா.முத்துக்குமார், சினேகன், கவின்பா ஆகியோர் பாடல்களை எழுத, ஜே.விஜய் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு, சுந்தர்ராஜ். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன், ஜெயசக்தி பிக்சர்ஸ் சார்பில் ஜெய அமுதா மோகன் தயாரிக்கிறார். படம், சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வேகமாக வளர்ந்து வருகிறது.