2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக படங்களின் விமர்சனங்கள் எல்லை மீறி செல்வதாக திரையுலகில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக கடந்த மாதம் வெளிவந்த 'கங்குவா' படம் தியேட்டர்களில் ரசிகர்களின் விமர்சனங்களாலும், ஊடகங்களின் விமர்சனங்களாலும் அதன் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது என்று திரையுலகில் சர்ச்சை எழுந்தது. தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தியேட்டர்களில் ரசிகர்களின் கருத்துக்களை யு டியூப் சேனல்கள் எடுப்பதைத் தடுக்க வேண்டும், விமர்சனங்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதே கருத்தை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் வலியுறுத்தியது.
இந்நிலையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திரைப்பட விமர்சனங்களை யு-டியுப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் வெளியிட மூன்று நாட்களுக்குத் தடை விதிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி சவுந்தர் முன்னிலையில் இன்று(டிச., 3) விசாரணைக்கு வந்தது. விமர்சிப்பது கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதி, திரைப்படங்கள் வெளியான, 3 நாட்களுக்குள் விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க முடியாது என கூறினார். மேலும் இதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு கூறி வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.