விமர்சனம்
அடுத்ததாக ஒரேமாதிரி கதை சொல்லும் தமிழ் சினிமாக்களில் இருந்து ஒரேயடியாக விலகி, இப்படியும் படமெடுக்கலாம் என தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிதாக ஒரு ரூட்டை போட்டுக் கொடுத்து அதற்கு பிள்ளையார்சுழி போட்டிருப்பதற்காக இயக்குநரை மீண்டும், மீண்டும் பாராட்டியே ஆக வேண்டும்!
கதைப்படி வழுக்கை வசப்பட்டும், வாழ்க்கை வசப்படாத துணை-இணை சினிமா இயக்குநர் கணேஷிற்கு ஒரு படக்கம்பெனியில் படம் இயக்க வாய்ப்பு கிடைக்கிறது. தன் அறை கம் துறை நண்பர்களை தன்னுடன் இணைத்து பணிபுரிய அழைக்கிறார். அவர்கள் கணேஷை கேலி செய்வதோடு உன்னால் எல்லாம் படம் இயக்க முடியுமா?! என கேள்வியும் கேட்டு சவுடால் சவாலும் விடுகின்றனர்!
இதில் பீல் ஆகும் கணேஷ், புல்மப்பில் நியூசென்ஸில் போலீஸில் சிக்குகிறார். அங்கு தன்னை மாதிரியே நான்சென்ஸ் புட்டி, குட்டி, பெட்டி கேஸ்களில் சிக்கி பேஜாராகி வீற்றிருக்கும் 4 இளைஞர்களை சந்திக்கும் கணேஷ், அந்தநால்வரையுமே தன் உதவியாளர்கள் ஆக்கி உருப்படியான சீன்களை பிடித்து ஒருமாதிரி ஜோரானதொரு கதையை உருவாக்கி தயாரிப்பாளர் பக்குலனிடம் சொல்லி படமெடுக்க கிளம்புகிறார். அவரை அவரது அறை-துறை, அரை-குறை நண்பர்கள் தங்களது சாவலில் ஜெயிப்பதற்காக ஆள்பலம் காட்டி படமெடுக்க விடாமல் தடுக்க பார்க்க, அவர்களை தனது அறிவுபலத்தால் கணேஷ் ஜெயிப்பதும், படமெடுத்து ரிலீஸ் செய்வதும்தான் உ படத்தின் கதை! உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக உயரும் கணேஷின் இந்த வெற்றிக்கதையுடன் அவர் இயக்கும் படக்கதையையும் கலந்துகட்டி கலர்புல்லாக கதை சொல்லியிருப்பதற்காக இயக்குநர் ஆஷிக்கை இன்னும் ஒருமுறை பாராட்டலாம்!
தம்பி ராமைய்யா, வருண், மதன்கோபால், ஸ்மைல் செல்வா, சத்யசாய், ராஜ்கமல், சவுந்திராஜா, காளி, ராஜசிவா, டீப்ஸ், ஆஜித், மதுமிதா, பயில்வான் ரங்கநாதன், யோகி தேவராஜ் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் கணேஷ் - தம்பி ராமைய்யா, புரடியூசர் பக்குலன் - பயில்வான் பற்றி சிலநேரங்களில் வாயால பேசுறார், சில நேரங்கள்ல பேசுறார்... என அவரது வாயுத்தொல்லை பற்றிபேசும்போது தியேட்டர் அதிர்கிறது. எல்லோரையும் கலாய்க்கும் தம்பி ராமைய்யாவையே கலாய்க்கும் கவுண்டர் பிராக்டீஸ், புரடியூசர் பக்குலன் - பயில்வான் ரங்கநாதன், மணி சார் ஓ.கே. சொன்னாதான் ஓ.கே. என கதைகேட்பாளர் மணி - யோகி தேவ்ராஜ்க்கு தரப்படும் பில்-டப் எல்லாமே படத்திற்கு பலவந்தமாக, அதேநேரம் படுபாந்தமாகவும் பலம் சேர்க்கும் பாத்திரங்கள் என்பது சூப்பர்ப்! ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது நம்முன் நிற்கும் ஒரே கேள்வி.?!
அபிஜித் ராமசாமியின் இசை, முருகன் மந்திரத்தின் பாடல்வரிகள், ஜெயபிரகாஷின் ஒளிப்பதிவு உள்ளிட்ட பலங்களுடன் எம்.ஆர்.ராதாவை இம்மிட்டேட் செய்து வில்லனும் அவரது கையாட்களும் பேசி போரடிக்கும் காட்சிகள் ஏற்படுத்தும் சலிப்பு உள்ளிட்ட பலவீனங்களும் இருந்தாலும், ஆஷிக்கின் எழுத்து-இயக்கத்தில் உ - ஓஹோ!






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!