ராக்கெட்ரி - நம்பி விளைவு,Rocketry The Nambi Effect

ராக்கெட்ரி - நம்பி விளைவு - பட காட்சிகள் ↓

Advertisement
4

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - டிரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - மாதவன்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - மாதவன், சிம்ரன்
வெளியான தேதி - 1 ஜுலை 2022
நேரம் - 2 மணி நேரம் 38 நிமிடம்
ரேட்டிங் - 4/5

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இன்று விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. அந்த சாதனைகளுக்கு விண்வெளி விஞ்ஞானியான நம்பி நாராயணன் உழைப்பும் ஒரு காரணம்.

விண்வெளித் துறையின் எதிர்காலம் திரவ எரிபொருள் தொழில்நுட்பத்தை நோக்கித்தான் போகும் என்பதை 1970களில் உணர்ந்து அதற்கான முயற்சியில் இறங்கி திரவ எரிபொருள் விண்வெளி எஞ்சினைக் கண்டுபிடித்தவர் நம்பி நாராயணன். இன்றைய ராக்கெட் தொழில்நுட்பத்தில் அதிகமாகப் பயன்படும் கிரையோஜெனிக் இஞ்சின் துறையின் பொறுப்பாளராகவும் இருந்தவர்.

1994ம் ஆண்டு அண்டை நாட்டுக்கு நமது ராக்கெட் ரகசியங்களை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கேரள காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 50 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியில் வந்தாலும் நான்கு வருட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 1998ம் ஆண்டுதான் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இப்படி பல சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்த நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தான் இந்த 'ராக்கெட்ரி - நம்பி விளைவு'.

நடிகர் மாதவன் முதல் முறையாக இயக்குனராகப் பொறுப்பேற்று ஒரு சிறந்த படத்தைக் கொடுத்திருக்கிறார். முதல் படத்திலேயே ஒரு சவாலான கதையை எடுத்துக் கொண்டு படமாக்குவது சாதாரண விஷயமல்ல. இந்தியாவில் ஆரம்பமாகும் கதை பின்னர் அமெரிக்கா பயணித்து, மீண்டும் இந்தியா திரும்பி, பின்னர் ரஷியா சென்று, திரும்பவும் இந்தியா திரும்புகிறது. 1970கள், 1990கள் என அந்தக் காலத்து வெளிநாடுகளையும் திரையில் கொண்டு வந்து காட்டி கடுமையாக உழைத்திருக்கிறார் இயக்குனர் மாதவன். தமிழ் வசனங்களையும் அவரே எழுதியுள்ளார். பல வசனங்கள் தியேட்டர்களில் கைத்தட்டல் பெறும் அளவிற்கு உள்ளன. நடிகராக பலரின் மனம் கவர்ந்த மாதவன், இயக்குனராகவும் மனம் கவர்ந்துவிட்டார்.

இயக்கத்தில் உள்ள பொறுப்புடன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தையும் ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார் மாதவன். அதிலும் வயதான தோற்றத்தில் பார்க்கும் போது இருவருக்கும் வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அப்படியே மாறியிருக்கிறார் மாதவன். தேசத்திற்காக ஈடுபாட்டுடன் உழைக்கும் ஒரு விஞ்ஞானி. அமெரிக்காவின் நாசா விண்வெளித் துறை அவரது திறமையைப் பார்த்து வேலைக்கு அமைத்தும், அதை உதறிவிட்டு நாட்டுக்காக உழைக்க வேண்டும் என இந்தியாவுக்குத் திரும்பியவர். திரவ எரிபொருள் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து எஞ்சின் உருவாக்கியவர். இப்படி பல புதிய சாதனைகளைப் படைத்தவரை திடீரென கேரள காவல் துறை நாட்டுக்கு துரோகம் செய்ததாகக் கூறி கைது செய்கிறது. அதன்பின் அவரும், அவரது குடும்பத்தினர் அனுபவிக்கும் துயரங்களும் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. இந்த ஆண்டின் தேசிய விருதுகளில் பல விருதுகளை இந்தப் படம் அள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மாதவனின் மனைவியாக சில காட்சிகளில் சிம்ரன். இவர்கள் இருவர் மட்டுமே நமக்கு அதிகம் தெரிந்த முகங்கள். மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களில் ராகவேந்தர், ஜெகன், மிஷா மட்டுமே நமக்குத் தெரிந்தவர். மற்றவர்கள் புதுமுகங்களாக இருக்கிறார்கள். இருப்பினும் ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

நம்பி நாராயணன் கதாபாத்திரத்தை பேட்டி எடுப்பவராக சூர்யா நடிகராகவே நடித்திருக்கிறார். அந்தப் பேட்டியிலிருந்துதான் காட்சிகள் பிளாஷ்பேக்காக நகர்கின்றன.

சாம் சிஎஸ் பின்னணி இசை படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது. உணர்வு பூர்வமான பல காட்சிகளுக்கு உயிரோட்டமான இசையைத் தந்திருக்கிறார். சிரிஷா ராய் ஒளிப்பதிவு அந்தக் காலகட்டங்களை இயல்பு மாறாமல் பதிவு செய்திருக்கிறது.

ராக்கெட் தொழில் நுட்பம் சார்ந்த பல டெக்னிக்கல் விஷயங்ள் படத்தில் இடம் பெற்றுள்ளது. அவை பலருக்கும் புரியாத ஒன்று. படம் முழுவதும் மாதவனைச் சுற்றி மட்டுமே நகர்கிறது. படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரம் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஒரு அமெரிக்கர் பின் தொடர்கிறார். அவர்தான் ஏதோ செய்து நம்பியை கைது செய்யவும் காரணமாக இருப்பாரோ என நம்மை யூகிக்க வைக்கிறார்கள்.

நம்பி நாராயணன் எதற்காக, யாரால், எந்தப் பின்னணியில் கைது செய்யப்பட்டார் என்பதை படத்தில் சொல்லவில்லை. அதை படத்தின் இரண்டாம் பாகமாக ஒரு முழுநீள கமர்ஷியல் படமாகவும் எடுக்கலாம்.

இந்திய விண்வெளித் துறை விஞ்ஞானிகள் தங்களது ஆரம்ப காலப் போராட்டங்களை எப்படி சாதனைகளாக மாற்றினார்கள் என்பதை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.

ராக்கெட்ரி, நம்பி விளைவு - உச்சம்

 

பட குழுவினர்

ராக்கெட்ரி - நம்பி விளைவு

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மாதவன்

தமிழ் சினிமாவின் பல இளம்பெண்களின் தூக்கத்தை கெடுத்தவர் நடிகர் மாதவன். மேடி என்ற அடைமொழியோடு தமிழ், இந்தி, அங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துவிட்டார். 1970ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி, ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர் தமிழர் மாதவன். ஆரம்பத்தில் டெலிவிஷன் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்த மாதவன், மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார். தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், இந்தி தவிர்த்து கன்னடம் மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்திருக்கிறார்.

மேலும் விமர்சனம் ↓