Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஜேம்ஸ் அண்ட் ஆலிஸ் (மலையாளம்)

ஜேம்ஸ் அண்ட் ஆலிஸ் (மலையாளம்),James and Alice
  • ஜேம்ஸ் அண்ட் ஆலிஸ் (மலையாளம்)
  • பிருத்விராஜ்
  • வேதிகா
  • இயக்குனர்: சுஜித் வாசுதேவ்
07 மே, 2016 - 17:51 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஜேம்ஸ் அண்ட் ஆலிஸ் (மலையாளம்)

காதலித்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் தங்கள் திருமண வாழ்க்கையில் செய்ய தவறுவது என்ன, அதனால் அவர்கள் இழப்பது என்ன என்பது தான் படத்தின் மையக்கரு.


திறமையான ஓவியக்கலைஞரான பிருத்விராஜுக்கு விளம்பரப்பட இயக்குனராக வேண்டும் என்பது லட்சியம். தனக்கென யாரும் இல்லாத பிருத்விராஜ், செல்வந்தர் வீட்டு பெண்ணான வேதிகாவை காதலிக்க, வேதிகாவின் தந்தை சாய்குமாரோ பிருத்விராஜுக்கு நிலையான வேலை இல்லாததால் பெண் தர மறுக்கிறார். இதனால் வீட்டைவிட்டு வெளியேறி பிருத்விராஜை திருமணம் செய்கிறார் வேதிகா.


அதன்பின் வரும் எட்டு வருடங்களில் இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்து பள்ளி செல்ல ஆரம்பிக்கிறது. பிருத்விராஜ் சின்னச்சின்னதாக விளம்பர படங்களை இயக்குகிறார். வேதிகாவுக்கு வங்கியில் வேலை கிடைக்கிறது.. ஆனால் இருவரின் வேலைப்பளு காரணமாக அடிக்கடி சின்னச்சின்ன சண்டைகள் தலை தூக்குகின்றன.


ஒருவருக்கொருவர் தங்களுக்குள் உள்ள ஈகோவை விட்டுவிட்டு சின்னதாக ஒரு ஸாரி சொல்லியிருந்தால் அப்போதே முடிந்திருக்க வேண்டிய விஷயங்கள் பூதாகரமாக மாறுகின்றன. ஒரு கட்டத்தில் இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பிருத்விராஜை விவாகரத்து செய்வதற்காக கோர்ட் படியேறுகிறார் வேதிகா.


இந்நிலையில் தனது குழந்தையின் பிறந்தநாளை ஆவலுடன் கொண்டாட பரிசுப்பொருட்களுடன் காரில் வரும் பிருத்விராஜ் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு போகிறார். மருத்துவர்கள் இனி பலனில்லை என கைவிரிக்கின்றனர். இதேசமயத்தில் பிருத்விராஜ் விபத்தில் சிக்கிய அன்று தேவலோகத்தில் இருந்து வரும் தேவதூதன், பிருத்விராஜின் ஆன்மாவை அழைத்துக்கொண்டு அவரது வாழ்க்கையில் அவரால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்களையும், அது ஏற்படாமலேயே சமாளித்திருக்க கூடிய காரணிகளையும் விளக்குகிறார். இறுதியில் பிருத்விராஜின் ஆன்மா அவரது உடலில் சேர்ந்து, அவர் உயிர் பிழைத்தாரா..? இல்லை வேதிகாவை தவிக்கவிட்டு சென்றாரா என்பது க்ளைமாக்ஸ்.


அன்பும் காதலும் கொண்ட, அதேசமயம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு முயலாமல் ஈகோவால் தங்கள் வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்ளும் கணவன் மனைவி கதாபாத்திரத்தில் பிருத்விராஜும் வேதிகாவும் அழகாக பொருந்தியிருக்கின்றனர். குறிப்பாக கணவனின் விட்டேத்தியான குணத்தை வெறுக்கும் வேதிகா யதாரத்தமான காதல் மனைவியை பிரதிபலிக்கிறார். பிருத்விராஜை பரி சொல்லவும் வேண்டுமோ..?


குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வர தாமதமாகும் காட்சியிலும் தனது மாமானார் மீதுள்ள எட்டு வருட கோபத்தை பிருத்விராஜ் காட்டும் காட்சியிலும் அவர் வேறு மாதிரி அதை கையாண்டிருக்கலாமே என தேவதூதன் விளக்குவதும் அதை காட்சியாக்குவதும், எல்லா பிரச்சனைகளுக்குமே தீர்வு நமிடம் தான் இருக்கிறது என்பதை பொட்டில் அடித்த மாதிரி சொல்கின்றன.


படத்தின் இயக்குனரான சுஜித் வாசுதேவ் தான் படத்தின் ஒளிப்பதிவையும் கவனித்துள்ளார். காட்சிகள் அனைத்தும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் விதமாக அவ்வளவு நேர்த்தி. அதிலும் அந்த ஆக்சிடென்ட் காட்சி மிரட்டல் ரகம். கோபிசுந்தரின் பின்னணி இசை சந்தோஷத்தையும் மென்சோகத்தையும் நமக்கு கடத்துகிறது. படம் கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் மணி நேரம் என்பது தான் மைனஸ் பாயின்ட்.. எடிட்டிங்கில் இன்னும் 20 நிமிட காட்சிகளை கத்திரி போட்டிருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்..


காதல் கணவன்-மனைவியர் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.. இல்லையில்லை பாடம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in