தினமலர் விமர்சனம்
அட்டகத்தி தினேஷ், கருணாகரன், பாலசரவணன், ரமேஷ் திலக், சார்லி, ஈ. ராமதாஸ், மியா ஜார்ஜ், நிவேதாபெத்து ராஜ், ரித்விகா, உள்ளிட்ட பல பழகிய முகங்களும் ஒரு சில புதுமுகங்களும் நடிக்க, கெனன்யா பிலிம்ஸ் ஜெ.செல்வகுமார் தயாரிப்பில் இது நாள் வரை ரேடியோ ஜாக்கியாக இருந்த வந்த நெல்சன் வெங்கடேசன் முதன்முதலாக எழுதி, இயக்கி வெளி வந்திருக்கும் தரமான படமே ஒரு நாள் கூத்து.
இப்படக் கதைப்படி., ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் ராஜ், ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டவர். அவரும், அதே நிறுவனத்தில் வசதியான குடும்பத்திலிருந்து வந்து வேலை பார்க்கும் காவ்யாவும் உயிருக்குயிராய் காதலிக்கின்றனர். அப்பா, அம்மா, சகோதரிகளின் திருமணம்.... என கமிட்மெண்ட்ஸ் கடமை உணர்ச்சியில் சிக்கித் தவிக்கும் ராஜுக்கும், ஸ்டேட்டஸ், பிரிஸ்டீஜ் இத்யாதி, இத்யாதிகளால் சிக்கித்தவிக்கும் காவ்யாவுக்குமிடையில் ஈ.கோ மோதல் எழுகிறது. அதுவே அவர்களது காதலுக்கு வில்லனாகிறது. அந்த வில்லத்தனத்தை வென்று இருவரும் கரம் கோர்த்தனரா? திருமண பந்தத்தில் இணைந்தனரா ? இல்லையா..? எனும் அழகிய காதல் கதையுடன் விதிவசத்தால் திருமணம் தள்ளிப்போகும், வெவ்வேறு குடும்பம் மற்றும் பகுதியைச் சார்ந்த லஷ்மி மற்றும் சுசீலாவின் திருமண ஆசைகள்.. எவ்வாறு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சாத்தியமாகிறது? அவர்களது வாழ்க்கைக்கும் ராஜ் மற்றும் காவ்யாவின் வாழ்க்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அவ்வாறு இருக்கிறதென்றல் அது என்ன..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்குவித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது ‛ஒரு நாள் கூத்து' படத்தின் மீதிக் கதை!
வசதியில்லாத குடும்பத்தில் பிறந்து எப்படியோ, பெரிய படிப்பு படித்து முடித்து சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்து அதை பார்த்தபடி, உடன் வேலை செய்யும் வசதியாகி குடும்பத்து காவ்யாவை காதலிக்கும் கதாநாயகர் ராஜ்ஜாக அட்டக் கத்தி தினேஷ் அமர்க்களம். அதிலும், காதலியிடம், ‛லவ்விங் வேற லிவ்விங் வேற...' செட்டில் ஆகணும் எனப் பேசி புரிய வைக்க முயன்று தோற்றுப் போகும் இடத்திலும், ‛உங்கப்பா நாயி கல்லுன்னு நல்லா உதாரணம் சொன்னார் பாரு....' என்று புலம்பும் இடங்களிலும் பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். அதே மாதிரி எனக்கு அப்பாவா, எங்க அம்மாவ பிடிக்காது.... ஆனா அவங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு.. என்ன பண்ண..? என காதலியிடம் தன் கையாலாகாத இடம் சொல்லி புலம்பும் இடம்... வாவ்... ஹேட்ஸ் ஆப் கீப் இட் அப் தினேஷ்!
இவ்வளவு அழகான, அமைதியான பெண்ணுக்கு மாப்பிள்ளை அமையலை... அய்யோ பாவம் திருமணம் தள்ளி தள்ளி போகிறதே... என ரசிகனை பதற விடும் லஷ்மி பாத்திரத்தில் மியா ஜார்ஜ், வாவ் என்ன ஒரு நடிப்பைய்யா... என வாய் பிளக்க விட்டிருக்கிறர். திருமணம் எப்படியாவது நடந்தேறினால் சரி என, வரன் பார்க்க வந்தவன், ஓடிப் போகலாம்... என வரச் சொன்னான் என்பதற்காக சென்னை வந்து வீண் பழிக்கு ஆளாகி திரும்பிபோகும் லஷ்மியாக மியா ஜார்ஜ் தன் நடிப்பில் மிரட்டல்ய்யா... என ரசிகனை முணுமுணுக்க வைப்பது படத்திற்கு பெரும் பலம்.
காதலனின் கமிட்மெண்ட்ஸ்க்காக காத்திருக்கவும் முடியாமல், தன் குடும்ப ஸ்டேட்டஸ்ஸையும் விட்டுத் தர முடியாமல் மாற்றானுக்கு கழுத்து நீட்ட சம்மதித்துவிட்டு காதலனுடன், அவன் அறையில் முத்தக்காட்சியில் புகுந்து விளையாடும் ஐ.டி. இளைஞி காவ்யாவாக அறிமுகம் நிவேதா பெத்து ராஜ்ஜூம் மியா மாதிரியே செம கலக்கலய்யா.... என சொல்ல வைக்கிறார்!
கல்யாணத்திற்கு காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போய், ஆபிஸ் ஆண் நண்பனுடன் பெங்களூர் டிரிப்பில் திருமணத்திற்கு பிந்தைய உறவில் ஈடுபட்டு முடிந்ததும், இதற்கு தான் இத்தனை காத்திருப்பா..? என்று அலட்சியமாக சிரித்தபடி, நிச்சயத்த பின் திருமணத்திற்கு மறுக்கும் மாப்பிள்ளைக்கு நோ சொல்லும் இடத்தில் செமயாய் மிரட்டி இருக்கிறார் ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளினி சுசீலாவாக வரும்மெட்ராஸ் ரித்விகா .
சுசிலா - ரித்விகாவின் ஆண் நண்பனாக ஆபிஸ் நண்பனாக வந்து க்ளைமாக்ஸில் காவ்யா - நிவேதா பெத்து ராஜின் கணவனாகும் ரமேஷ் திலக், சோல்டர் மோகனாக, நாயகர் ராஜ்ஜின் நண்பனாக வந்து சங்கோஜ கூச்சம் சாப்பாட்டுக்கு தரித்திரியம்.. " அப்படின்னு எங்கப்பா சொல்வாரு என்றபடி, காமெடிக்கு காமெடி, சென்டிமென்ட்டுக்கு சென்டிமென்ட்.....என செமயாய் ஜமாய்த் திருக்கும் பால சரவணன்...
சுசிலா - ரித்விகாவின் சோக சகோதர்ராக வேந்திராவாக வரும் கருணாகரன், அவரின் திருமணத்திற்கு ஏங்கும் கட்டை பிரம்மச்சாரி நண்பராக சார்லி உள்ளிட்ட எல்வோரும் இப்படத்தின் யதார்த்த கதைக்கு ஏற்ற மாதிரி மிகவும் யதார்த்தமாக நடித்து, எல்லா தரப்பு ரசிகர்களையும் கவருகின்றனர் என்றால் மிகையல்ல. அதிலும், கல்யாணம் ஆகாத விரக்தி யில் சார்லி, 100 ரூபாய்க்கு ஒரு நாப்கின் விக்கிற நாட்டுல 10000 ரூபாய் சம்பளம் இல்லன்னா தாய்லாந்தா போக முடியும் டாய்லெட் தான்..... என்று தத்துவம் பேசியபடி தினம் ஒரு ஓய்ப்புடன் கனவில் வாழும் சார்லி, சாபஷ்லி! என அடிக்கடி சொல்ல வைக்கிறார்.
கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் ஒவியப் பதிவாக, காவியப் பதிவாக கண்ணை பறிக்கிறது. சாபு ஜோசப்.வி.ஜெ.வின் படத்தொகுப்பும் படுத்தாத பலே தொகுப்பு!
மாங்கல்யமே...., அடியே அழகே ... அழகே அடியே... ", எப்போ வருவாரோ ..." பாட்ட போடுங்க ஜீ..." , உள்ளிட்ட பாடல்களும் , பின்னணி இசையும் ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் சுபராகம் .
"பொய் சொல்லணும்னு யாரும் இங்க சொல்லறது இல்ல... உண்மை சொல்லிக்கிற மாதிரி இல்லன்னா .. பொய்ய சொல்றது தப்பில்லை ... அப்பப்ப பொய் சொல்லிப் பாரு ....லைப் சுமூத்தா போகும்...
"நான் பார்த்த தான இன்னொருத்தி பார்க் கப்போறா... போவட்டும் விடு .... ", " பத்து இலையில இருக்கிற பதார்த்த பார்க்கிறவன் , தான் இலையில இருக்கிறத பார்க்க மாட்டான் ...நீ ஒரு பையன காட்டின நான் ஒரு மாப்பிள்ளையை காட்டினேன் .... ,
நான்லாம் சாமிக்கு ஒரு ஆளா நீ பார்த்துட்டு வா .. உனக்கு தான் கல்யாணம் ஆகணும்... , "உனக்கு, புடிச்சதை செய் நீ செத்ததுக்கப்புறம் யாரும் உனக்கு சிலை வைக்கப் போறதில்ல ... எனும் வசனங்கள் வாயிலாகவும், அவற்றை பேசும் ஏகப்பட்ட யதார்த்த பாத்திரங்கள் மூலம் ரசிகனை சீட்டோடு கட்டிப்போடும் காட்சிகள் வாயிலாகவும் ஒரு நாள் கூத்து திரைப்படத்தை ஒய்யார கூத்தாக்கியிருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.
"தவறு செய்வதும், அதை சரியாய் செய்வதும் மாந்தர்களின் இயல்பு, அதை சந்தர்ப்பம் வாய்த்தால் திருத்திக் கொண்டு கிடைத்த வாழ்க்கையை திருப்தியாக வாழ்வதும் மானிடத்தின் மாண்பே...! என சொல்லாமல் சொல்லியிருக்கும் ஒரு நாள் கூத்து மாதிரியான படத்திற்கே இறைவி மாதிரியான பெருமையான டைட்டில்கள் நிஜமாய் பொருந்தும்! என்பது நம் கருத்து. (இந்தப் படத்திலும் கூடத்தான் இன்றைய காலகட்டத்து திருமணத்திற்கு முந்தைய, பிந்தைய செக்ஸ் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது..... அதற்காக குறையாகவா, இப்படத்தை குறைவாகவா? விமர்சிக்கிறோம்! கவனிக்கவும் வாசகர்களே.....)
எது எப்படியோ ஒரு நாள் கூத்து - சமூக கேலி கூத்துகளை ஒய்யாரமாய் ஓங்கி குத்தி கிழித்திருக்கிறது! வாழ்த்துக்கள்!"