தினமலர் விமர்சனம்
''உயிர்'', ''மிருகம்'', ''சிந்து சமவெளி'' ஆகிய படங்களை இயக்கிய சாமி, அடுத்ததாக இயக்கி, வெளிவந்திருக்கும் ஆபாசமில்லாத 'யு' சர்டிபிகேட் படம் தான் ''கங்காரு''.
டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தும் முரட்டு அநாதை நாயகர் கங்காரு - அர்ஜூனா, அவரது உயிர் சகோதரி பிரியங்கா. பழனியிலிருந்து சிறுவயதிலேயே அநாதைகளாக கொடைக்கானலுக்கு வரும் இவர்களுக்கு, அப்பகுதியில் அடைக்கலம் கொடுத்து காத்து வருபவர் மளிகை கடைக்காரர் - தம்பி ராமைய்யா. தம்பி ராமைய்யாவிடம் எடுபிடி வேலைக்கு இருப்பவர் கஞ்சா கருப்பு. அந்த ஏரியாவின் விபச்சார அழகி சரசு. சரசுவின் புரோக்கராகவும், ஜீப் வைத்து ஜீவனம் நடத்துபவராகவும் வில்லத்தனம் செய்து வருகிறார் கலாபவன் மணி! சரசுவின் தங்கை வர்ஷா அஸ்வதி மற்றொரு நாயகி. இவருக்கு நாயகர் அர்ஜூனா மீது ஒருதலைக்காதல். ஆனால் தங்கை பாசத்திலேயே மூழ்கி கிடக்கும் ஹீரோவுக்கு, ஹீரோயின் மீது காதல் வர மறுக்கிறது.
இந்நிலையில் நாயகரின் தங்கையை காதலிப்பவர், கல்யாணம் கட்டிக் கொள்ள முன் வருபவர் என இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்து போக நாயகரையும், நாயகரின் தங்கையையும் தனது ஊருக்கு அழைத்து போகிறார்கள் டீ எஸ்டேட் முதலாளி ஆர்.சுந்தர்ராஜன்.
அங்கு ஆர்.சுந்தர்ராஜனின் மனைவியை இழந்த மைத்துனர் சுரேஷ் காமாட்சிக்கும், நாயகரின் தங்கைக்கும் பெரியவர்கள் பேசி, ஒருவழியாக திருமணம் முடிக்கின்றனர். சுரேஷ் காமாட்சியையும் தீர்த்துகட்ட கலாபவன் மணியும், அவரது சகாவும் களம் இறங்குகின்றனர். அவர்களை முந்திக்கொண்டு ஒருத்தன், சுரேஷ் காமாட்சியை கொடூரமாக தாக்குகிறான். அவர் யார்.? சுரேஷ் காமாட்சி உயிர் பிழைத்தாரா.? முந்தைய கொலைகளை செய்தது கலாபவன் மணிதானா.? தன் முரட்டு தங்கை பாசத்தில் நாயகர் சந்திக்கும் முடிவு என்ன.? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் திக், திக், திக்... விடை சொல்கிறது கங்காரு படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!
நாயகர் அர்ஜூனா, தன் தங்கை மீது கண்மண் தெரியாத அளவுக்கு பாசத்தை பொழியும் முரட்டு சுபாவம் இளைஞராக பொருந்தி நடித்திருக்கிறார்.
நாயகியர்களில், சகோதரியாக வரும் ஸ்ரீப்ரியங்கா, ஒருதலை காதலியாக வரும் வர்ஷா அஸ்வதி இருவரும் போட்டிக் கொண்டு நடிப்பிலும், குடும்ப பாங்கான கவர்ச்சியிலும் கொளுத்தி இருக்கின்றனர். இவர்களை காட்டிலும் சரசாக வரும் விபச்சார அழகி கேரக்டர், இளம் ரசிகர்களின் நெஞ்சங்களை மேலும் கொளுத்தியிருக்கிறார்!
ஆர்.சுந்தர்ராஜன், தம்பி ராமைய்யா, கலாபவன்மணி, கஞ்சா கருப்பு, போலீஸ் ஆபிசராக வரும் இயக்குநர் சாமி, மாப்பிள்ளையாக வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஜெகன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
இப்படத்தில் இசையமைப்பாளர் அவதாரமெடுத்திருக்கும் பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸின் இசையில், வைரமுத்துவின் ''ஒழக்கு நிலவே...'' உள்ளிட்ட பாடல்கள் ஒவ்வொன்றும் பாச தாலாட்டு.
ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவு - மிளிரும் ரத்தினம்!
சாமியின் இயக்கத்தில், கங்காரு என்றாலே ஹீரோ கோபமாவது ஏன்.?, ப்ளாஸ்பேக்கில் ஹீரோ அர்ஜூனாவின் தங்கையாக வரும் பாத்திரம்(இப்படத்தின் உயிர் நாடி கேரக்டர்...) அவரது உடன் பிறந்த சகோதரியல்ல என காட்சி வைத்திருப்பது... உள்ளிட்ட ஒருசில குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் ''கங்காரு - பங்காரு (சுத்த தங்கம்)!!''