மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
கேரளாவில் உருவாக்கப்பட்ட ஜிமிக்கிக்கம்மல் பாடல், தமிழகத்தில் தனுஷ் - சாய்பல்லவி நடித்த மாரி 2 திரைப்பட ரவுடிபேபி பாடல் ரசிகர்களின் மனதில் நங்கூரமிட்டதுடன் இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்த பாடல் வரிசையில் தற்போது இணைய வெளி தமிழ் ரசிகர்களை தாண்டி, தெலுங்கு, மலையாளம், கன்னட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து யூடியூப் சேனலில் கலக்குகிறது ஒரு பாடல்.
சோனி மியூசிக் தயாரிப்பில் சந்தோஷ் தயாநிதி இசையில், இதழியலாளர், பாடலாசிரியர் என பல தளங்களில் இயங்கிவரும் இளம் தலைமுறை கவிஞர் அ.ப.ராசாவின் வரிகளில் உருவான அந்த குட்டிப் பட்டாசு பாடலை 10 கோடி பார்வையாளர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். இந்த பாடலை இளசுகள் டான்ஸ் ஆடி வீடியோ எடுத்து, இணையத்தில் அப்-டேட் செய்கின்றனர். சீன நகைச்சுவை தொடரான சிஞ்சான் தொடரை இந்த பாடலை வைத்து, காட்சிப்படுத்தி குழந்தைகளும் கொண்டாடித் தீர்க்கின்றனர். பலரின் அலைபேசி ரிங் டோன்னாகவே ரீங்காரமிடுகிறது குட்டிப் பட்டாசு பாடல்.
தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக பாடலாசிரியர் அ.ப.ராசாவின் பேட்டி...
உங்களை குறித்து...
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை எனது சொந்த ஊர். தந்தை பரமசிவம் கட்டட ஒப்பந்ததாரர், தாய் செல்வராணி. சென்னை பல்கலையில் எம்.ஏ., இதழியல் படித்தேன். படிக்கும் போது விஜயசுதாவுடன் காதல் ஏற்பட்டு, மண வாழ்க்கையில் இணைந்தோம். மகன் மகரந்தன், மகள் மகிழினி நறுமுகையுடன் சென்னை திருமுல்லைவாயிலில் வசிக்கிறோம்.
பாடலாசிரியரான வாய்ப்புக்கள் குறித்து
பள்ளி, கல்லுாரி காலங்களில் கவிதை, பாடல்கள் மீது பிரியம் உண்டு. 2007ல் சென்னை பல்கலையில் முதுகலை, முடித்ததும் தினமலர் நாளிதழ் நிருபராக சென்னை, டில்லியில் பணியாற்றினேன். 2012ல் திருமணத்திற்கு பின் ரேடியோ மிர்சி சேனலுக்கு புரமோஷன் பாடல் எழுதிக் கொடுத்தேன். பின் 30க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு எழுதியுள்ளேன். முதல் முறையாக பற்ற வைத்த நெருப்பு என்ற திரைப்படத்திற்கு பாடல் எழுதினேன். தொடர்ந்து 5 திரைப்படங்களுக்கு எழுதியுள்ளேன். அந்தந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள்.
குட்டிப் பட்டாசு பாடல் வாய்ப்பு...
யூ-டியூப் சேனல் ஒன்றில் தலைமை நிகழ்ச்சி தயாரிப்பாளராக உள்ளேன். தேர்தல் நேரத்தில் சோனி யூ-டியூப் சேனல் நிர்வாகத்தில் இருந்து குட்டிப் பட்டாசு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் வார்த்தைகளை, உவமைகளை கையாண்டு அசத்தியுள்ளீர்களே
மரபு இலக்கணத்தில் நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா என்ற விதிகள்தான் எனக்கு உவமைகளை கையாள கைகொடுக்கின்றன. எழுத்தாளர் கல்யாண்ஜி கவிதை படைப்புக்களை வாசித்ததும் கைகொடுத்தன. உடுமலை நாராயணகவி முதல் தற்போதைய விவேக் பாடல்கள் வரை பரிச்சயம் உண்டு. குட்டிப் பட்டாசு பாடலில் பல்லவி 9வது வரியில் மணக்கும் அஞ்சடி பர்பியூம் என்ற ஆங்கில வார்த்தை மட்டுமே கையாளப்பட்டுள்ளது. மற்ற அனைத்து வரிகளும் தமிழ் வார்த்தைகள். சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை நான் தீவிர வாசகன். இதனால் எந்த மாதிரியான காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களின் இணைப்பிற்கும் என்னால் துாய தமிழில் சந்தங்களாக, உவமைகளாக எழுத முடியும்.
குட்டிப் பட்டாசுக்கு பின் வாய்ப்புக்கள்...
நிறைய வந்துள்ளன. சினிமா பாடல்களும், தனி ஆல்பங்களும் அதில் அடங்கும். வரும் நாட்களில் வெளிவரும். எனது மண்ணின் மைந்தர் இளையராஜா இசையில் பாடல் எழுத வேண்டும். தேன் கலந்த தீஞ்சுவை குரல்களுக்கு சொந்தக்காரர்களான பாடகர்கள் பிரதீப், ஸ்ரேயா கோஷல் குரல்களில் என் பாடல்கள் ஒலிக்க வேண்டும் என்பது ஆசை.