காதலை பல பரிணாமத்தில் சொல்லும் திரைப்படங்களுக்கிடையே, இளைஞர்களுக்கு காதலை கற்றுத்தர உருவாக்கப்படும் புதிய படம்தான் 'ஆர்வம்'. மதுரையில் உள்ள ஒரு ஊரில் ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை 'மூவி ட்ரீம்ஸ்' சார்பில் அனில்.டி தயாரிக்கிறார். தயாரிப்பாளர் அனிலுக்கு இந்தப் படம் இரண்டாவது படம், இதற்கு முன் இவர் தயாரித்தப் படம் 'பாடகசாலை'. இந்த படத்தில் நடித்த சத்யா, சஞ்சய் ஆகியோர்கள்தான் 'ஆர்வம்' படத்தின் நாயகர்கள். கதாநாயகியாக மீனு கார்த்திகா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ரோணி ராஃபேல் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார்.
உண்மையான காதல் எது? பொய்யான காதல் எது? என்பதை விளக்கும் வகையில் உருவாகியிருக்கும் 'ஆர்வம்' படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ஆதியன், தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். படத்தை பற்றி கூறும் ஆதித்யன் "காதலை மையமாக கொண்ட கதையாக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களை கவரும் வகையில் திடீர் திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் இப்படத்தின் திரைக்கதையை எழுதி இருக்கிறேன். படத்தின் தலைப்பிற்கேற்ப ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகிற வகையில் சஸ்பென்ஸ் திரைப்படமாகவும் 'ஆர்வம்' படத்தை உருவாக்கியிருக்கிறேன்" என்றார்.