
பிளாஷ்பேக்: “பொண்ணு ஊருக்கு புதுசு” தந்த புதிய திரை வரவுகள்
தமிழ் திரையிசையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்து, திரையிசை ரசிகர்களின் ரசனை மேம்படும் அளவிற்கு, தமிழ் திரையிசையை ஒரு புதிய பரிணாம வளர்ச்சிக்கு அழைத்துச் சென்ற "இசைஞானி" இளையராஜா அறிமுகமான 1970களின் பிற்பகுதியில் அவரது இசையில் வெளிவந்த பல வெற்றித் திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த “பொண்ணு ஊருக்கு புதுசு” என்ற திரைப்படம். இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகி, மூன்றே ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏறத்தாழ 70 திரைப்படங்கள் வரை இசையமைத்திருந்த நிலையில், அவரது இசையில் மீண்டும் ஒரு கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆர் செல்வராஜ்.
“அன்னக்கிளி”, “கவிக்குயில்”, “கிழக்கே போகும் ரயில்”, “புதிய வார்ப்புகள்” போன்ற வெற்றித் திரைப்படங்களின் கதாசிரியரான ஆர் செல்வராஜ் இயக்குநராக அவதாரம் எடுத்த முதல் திரைப்படமாக வெளிவந்ததுதான் இந்த “பொண்ணு ஊருக்கு புதுசு”. இவரது கதையில் உருவான “கிழக்கே போகும் ரயில்” திரைப்படத்தின் மூலம் நாயகனாக தமிழுக்கு அறிமுகமான நடிகர் சுதாகரின் நடிப்பால் அப்போதே ஈர்க்கப்பட்டிருந்த ஆர் செல்வராஜ், தான் இயக்க இருக்கும் இந்த “பொண்ணு ஊருக்கு புதுசு” திரைப்படத்திலும் அவரையே நாயகனாக நடிக்க வைக்க விரும்பி, நடிகர் சுதாகரையே படத்தின் நாயகனாக்கினார்.
இந்தக் காலகட்டங்களில் மிகவும் பிஸியாக இருந்து வந்த நடிகர் சுதாகர், இத்திரைப்படத்திற்காக அவரால் குறைந்த நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுக்க முடிந்திருந்தது. எனவே படத்தின் அறிமுக இயக்குநரான ஆர் செல்வராஜ், நடிகர் சுதாகர் மற்றும் படத்தின் நாயகியான நடிகை சரிதா சம்மந்தப்பட்ட காட்சிகளை முன்னரே எடுக்கத் திட்டமிட்டு, அதன்படி அவ்விருவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் ஏழே நாட்களில் எடுத்து முடித்திருந்தார்.
இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களின் எண்ணிக்கை ஆறு. கவிஞர் வாலி, முத்துலிங்கம், கங்கை அமரன் ஆகியோர் பாடலாசிரியர்களாக பணிபுரிந்திருந்த இத்திரைப்படம்தான் எம் ஜி வல்லபன் என்ற ஒரு புதிய பாடலாசிரியரை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது. இவர் எழுதியிருந்த “சோலைக் குயிலே காலைக் கதிரே” என்ற இத்திரைப்படத்தின் பாடல்தான் பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் சகோதரியும், பின்னணிப் பாடகியுமான எஸ் பி ஷைலஜாவையும் ஒரு திரையிசைப் பாடகியாக அடையாளம் காட்ட காரணமாய் அமைந்திருந்தது.
“ஓரம் போ ஓரம் போ ருக்குமணி வண்டி வருது”, “சாமக்கோழி ஏய் கூவுதம்மா”, “உனக்கெனத்தானே இந்நேரமா நானும் காத்திருந்தேன்”, “ஒரு மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவி”, “சோலைக் குயிலே காலைக் கதிரே” என படத்தின் அத்தனைப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, படத்தின் வெற்றியையும் உறுதி செய்து, வல்லமை மிக்க திரைக்கலைஞர்கள் சிலரையும், வளமான தமிழ் திரையுலகிற்கு வந்தனம் செய்து வரவேற்றிருந்த ஒரு வலிமையான கலைப்படைப்பாக வெளிவந்து, வெற்றி வாகை சூடிய திரைப்படம்தான் இந்த “பொண்ணு ஊருக்கு புதுசு”.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!