
வெற்றியின் வாசலை தேடும் விருதுநகர் அருள்ஜோதி
ஆக 18, 2024
Advertisement
"அடி வெள்ளாவி வெச்சிதான் வெளுத்தாங்களா... உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா..." என கொண்டாடி பாடும் அளவிற்கு ரசிகர்களை கிறங்கடிக்க வைக்கிறார் இளம் நடிகை அருள்ஜோதி. தொலைக்காட்சி தொடரில் அறிமுகமாகி வெப்சீரிசில் நடித்து தற்போது இன்ஸ்டாகிராமில் தன் இயல்பான பேச்சு, உடை பாவனைகளால் இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார் அற்புத அழகின் சொந்தக்காரர் அருள்ஜோதி.
விருதுநகர் மாவட்டம் மெட்டுக்குண்டை சேர்ந்த இவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக மனம் திறந்ததாவது:
நான் கிராமப்புறத்தை சேர்ந்தவள். அப்பா, அம்மா, தங்கை தான் என் உலகம் என வாழ்ந்து கொண்டிருந்தேன். கல்லுாரி படிப்பை முடித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன். சினிமா, மாடலிங் மீது ஆர்வம் வர 2019ல் போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினேன். சில தினங்களில் சீரியல் இயக்குநர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு "நினைத்தாலே இனிக்கும்" சீரியலில் ஹீரோயின் தங்கையாக நடிக்க அழைப்பு விடுத்தார். ரம்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்தேன். பின் "பாரதி கண்ணம்மா" சீரியலில் ஹீரோயின் சகோதரியாக நடித்தேன்.
பெற்றோருக்கு நான் நடிப்பது பிடிக்கவில்லை. இருந்தாலும் நான் எல்லா விஷயத்திலும் சரியாக இருப்பேன் என்ற நம்பிக்கையை பெற்றோருக்கு கொடுத்ததன் மூலம் என்னை ஆதரித்தார்கள். நான் "டிவி"யில் வருவதை கண்டதும் அவர்களும் மகிழ்ச்சியடைய ஆரம்பித்தனர். அதன்பின் பல சீரியல்களில் நடிக்க முயற்சி செய்தேன். வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நமக்கான இடம் இது இல்லை என தெரிந்து கொண்டு சினிமாவில் வாய்ப்பு தேடி ஆடிஷன்களில் பங்கேற்றேன். அங்கேயும் "எல்லாம் ஓகே நீங்கள் நடிக்க தயாராக இருங்கள்" எனக்கூறி விட்டு என்னை நடிக்க சொன்ன கதாபாத்திரத்தில் வேறு ஓருவரை நடிக்க வைப்பார்கள்.
இதுபோன்ற பல புறக்கணிப்புகளை பெரிதாக எடுத்து கொள்ளாமல் அதை விட பெரிய வாய்ப்பு நமக்காக காத்திருக்கிறது என மனம் தளராமல் எனக்கான தேடலை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பேன். அப்போது தான் "ஹாட் பீட்" எனும் வெப்சீரிசில் நடிக்க அழைப்பு வந்தது. தற்போது அதில் நடித்து வருகிறேன்.
சினிமாவில் நடிக்க முயற்சித்து கொண்டிருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பேன். மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் வில்லியாக நடிக்கவும் ஆசை. கிராமத்து பொண்ணு என்பதால் முதலில் எல்லாம் புதிதாக இருந்தது. தற்போது ஒவ்வொன்றாக கற்றுகொள்கிறேன்.
சினிமா பயணத்தில் தற்போது தான் ஒவ்வொரு படியாக மேலே ஏறிக்கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் எல்லா நடிகைகளும் படும் கஷ்டத்தை நானும் பட்டுள்ளேன். திறமையை வெளிக்காட்டினால் வாய்ப்புகள் தேடி வரும். ஒரு முயற்சியில் இறங்கிவிட்டு பாதியில் விட்டு செல்லாமல் கடைசி வரை போராட வேண்டும். மன தைரியமும், உண்மையும் இருந்தால் கட்டாயம் ஒருநாள் வாழ்வில் உயரத்திற்கு செல்லலாம் என்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!