
வெற்றிக்காக ஓடிக்கொண்டிருக்கிறேன்: அக்சிதா அசோக் அசத்தல்
செப் 29, 2024
Advertisement
வாய்ப்புகள் சிலருக்கு தானாக அமையும். சிலர் கஷ்டப்பட்டு முயற்சி செய்து வாய்ப்பு பெறுவர். அப்படி கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பலர் அவரவர் துறைகளில் முன்னேறி உயரத்திற்கு வருகின்றனர். அப்படி வெற்றி பெற்றவர் சென்னையை சேர்ந்த தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் அக்சிதா அசோக். இவர் மனம் திறந்ததாவது....
சொந்த ஊர் கேரளா. என் சிறுவயதிலேயே குடும்பத்தினர் சென்னைக்கு வந்து விட்டனர். அப்பா வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். பள்ளியில் படிக்கும் போது ஐ.பி.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பேன். விளையாட்டிலும் படுசுட்டி நான். ஓட்டம், கோ-கோவில் பரிசு வாங்கியிருக்கிறேன்.
என் அண்ணன் அவினாஷ், சீரியல்களில் நடித்து வருகிறார். நான் 9ம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் சென்னையில் அண்ணன் நடிப்பதை பார்க்க ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றேன். வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். அந்த சீரியல் இயக்குநர் என்னை பார்த்து ஹீரோயின் தங்கை கதாபாத்திரத்திற்கு ஆள் தேவைப்படுகிறது. உங்களுக்கு நடிக்க விருப்பமா எனக் கேட்டார். நானும் சம்மதித்தேன். குடும்பத்தினரிடம் அனுமதி கேட்டதற்கு உன் விருப்பம் என சொல்லி ஊக்கம் தந்தனர். அவர்கள் ஒத்துழைப்போடு நடிக்க ஆரம்பித்தேன்.
முதன்முறையாக "சாக்லேட்" சீரியலில் நடித்தேன். முதலில் நடிப்பது கஷ்டமாக இருந்தது. சரியாக நடிக்கவில்லை என்று இயக்குநர் ஒருவர் என்னை சத்தமாக கண்டித்தார். உடனே அங்கிருந்து கோபத்தில் வெளியேறிவிட்டேன். அங்கிருந்த மூத்த நடிகைகள் என்னை அழைத்து "கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள். இதுபோன்ற வாய்ப்பு எளிதில் கிடைக்காது. வாய்ப்பை உதாசினப்படுத்தாமல் நல்ல படியாக நடி" என்று அறிவுரை வழங்கினர்.
நானும் யோசித்து பார்த்தேன்.
சினிமாவில் சாதித்த பலருடைய வாழ்க்கை கதையை கேட்டு வியந்தேன். முழுநேரமும் நடிப்பில் கவனம் செலுத்தினேன். "அன்பே வா","காற்றுக்கு என்ன வேலி" சீரியல்களில் வில்லியாக நடித்தேன். "முத்துலட்சுமி" சீரியலில் மருமகளாக நடித்தேன். ஹீரோயினாக நடிக்க விருப்பம் தான். ஆனால் என் வயதிற்கு இப்போது அந்த கதாபாத்திரங்கள் வேண்டாம் என எண்ணி இதுபோன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். எனக்கு கஷ்டம் ஏற்படும்போதெல்லாம், பல கஷ்டங்களையும் தாண்டி குடும்பத்தை நடத்திய என் அம்மாவை நினைத்து கொள்வேன். அம்மா தான் எனக்கு ஊக்கசக்தி.
பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகளில் நான் நிராகரிக்கப்பட்டுள்ளேன். இருந்த போதிலும் மனம் தளராமல் அதையும் தாண்டி என் வெற்றிக்காக ஓடிக்கொண்டிருக்கிறேன். பள்ளிப்பருவத்திலேயே பரதநாட்டியம் கற்றுள்ளேன். இதனால் எனக்கு நடனம் ஆடவும் எளிதாக இருக்கிறது.
திரைப்படங்களில் நடிக்க விருப்பம் உள்ளதால் ஆடிஷன்களில் பங்கேற்கிறேன். பட வாய்ப்புகளும் வருகிறது. நல்ல கதையாக தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன். நம் வாழ்வில் நமக்கு எது கிடைக்கிறதோ அதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் பற்றிக்கொண்டு மேலே வர வேண்டும் என்பதிலும் நான் தெளிவாக இருக்கிறேன். எந்த பிரச்னை ஏற்பட்டாலும் அதை நம்பிக்கையோடு எதிர்கொண்டு போராட வேண்டும் என்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!