
ஐஸ்வர்யா ராய் மகள் தொடர்ந்த வழக்கு : கூகுள் நிறுவனத்திற்கு டில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு
பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதிக்கு, 11 வயதில் ஆராத்யா பச்சன் என்ற மகள் இருக்கிறார். இவரது உடல்நிலை குறித்து, யு டியூப் சமூக வலைதளத்தில் சிலர் வீடியோக்களை பதிவேற்றம் செய்தனர். அதில், ஆராத்யா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வருவதாக தெரிவித்து இருந்தனர்.
இதை எதிர்த்து, ஆராத்யா, அவரது தந்தை அபிஷேக் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஹரி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி உத்தரவிட்டதாவது: ஒவ்வொரு குழந்தையும் மாண்புடனும், மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். ஒரு குழந்தையின் உடல் நலம், மன நலம் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவது, சட்டப்படி ஏற்க முடியாதது. ஆராத்யா உடல்நிலை குறித்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவேற்றம் செய்த யு டியூபர்கள் குறித்து, கூகுள் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட வீடியோக்களை யு டியூப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இந்த சமூக வலைதளத்தில் ஆட்சேபனைக்குரிய விவகாரத்தை கையாள்வதில் உள்ள கொள்கை குறித்து, கூகுள் விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!