பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய 'இரவில் ஒரு வானவில்' என்ற நாவலின் தழுவல்தான் அகராதி படம். ஒரு நாவலின் கதையை விறுவிறுப்பான திரைக்கதையாக்கி இயக்குகிறார் நாகா வெங்கடேஷ் என்ற புதுமுக இயக்குநர். பழனியப்பா கல்லூரி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான பிரதீப் இப்படத்தில் நாயகனாக நடிக்க, மோனிகா, சவுந்தர்யா அர்ச்சனா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களில் அர்ச்சனா அகரம், வேகம் போன்ற படங்களில் நடித்தவர்.
குடும்ப பின்னணியில், உறவுகளின் சிக்கல்களையும், அதனால் ஏற்படும் விபரீதங்களையும் ஆக்ஷனோடு சொல்லும் க்ரைம் கதை என்று அகராதி படத்துக்கு முன்னுரை கொடுக்கிறார் இயக்குநர் நாகா வெங்கடேஷ். பணம் என்கிற மாயப் பிசாசினால், கலாச்சாரங்களை மீறி, சிதறிப்போன உறவுகளை சொல்லும் கதை இது. அகராதி என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. சமுதாயத்தை மதிக்காமல் தன் போக்கில் திரிபவனும் அகராதியே. வரம்பு மீறி வார்த்தைகளை பேசுபவனும் அகராதியே, யாருக்கும் கட்டுப்படாத காற்றாய் திரிபவனும் அகராதியே. எதற்கும் அஞ்சாமல் எதிர்த்து வாழ்பவனும் அகராதியே. மொழி பெயர்ப்பும் அகராதியே. விளங்காத விஷயங்களுக்கு விளக்கம் கூறுவதும் அகராதியே. மொத்ததில் தலைக்கனமும் அகராதிதான். இலக்கணமும் அகராதிதான். அப்படி ஒரு கோணத்தில் காதல், குடும்பம், ஆக்ஷன், சஸ்பென்ஸ் உடன் உருவாகும் படமாக அகராதி இருக்கும்.
படத்திற்கு சுந்தர்.சி.பாபு இசையமைக்கிறார். பாடல்கள் -வாலி, தாமரை, கவிவர்மன், அண்ணாமலை. ஒளிப்பதிவு -சிபியோன். தயாரிப்பு -வரத், சுமதி கல்யாணசுந்தரம்.