1.5

விமர்சனம்

Advertisement

ஆருத்ரா - விமர்சனம்

தயாரிப்பு - வில் மேக்கர்ஸ்

இயக்கம் - பா. விஜய்

இசை - வித்யாசாகர்

நடிப்பு - பா. விஜய், பாக்யராஜ், யுவா, மேகாலி மற்றும் பலர்.


தமிழ் சினிமாவில் இவர்கள்தான் நடிக்க வேண்டும் என்று எந்த ஒரு வரையறையும் இல்லாமல் திறமையுள்ளவர்களோ, இல்லாதவர்களோ நடிக்கலாம் என்று வந்துவிட்ட காலம் இது. இருந்தாலும் தங்களுக்கு எது பொருத்தமாக இருக்குமோ அதற்கேற்ற கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடிப்பதுதான் அவர்களுக்கும் நல்லது.


பாடலாசிரியராகவும் இருக்கும் பா. விஜய் தொடர்ந்து நடிகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கடும் முயற்சிகளை விடாமல் செய்து வருகிறார். அந்தத் தொடர்ச்சியின் மற்றுமொரு படம்தான் ஆருத்ரா. அவரே இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கிறார்.


முகத்தைக் காட்டாத ஒருவர் அந்நியன் பட ஸ்டைலில் ஒவ்வொரு கொலைக்கும் ஒரு பெயரை வைத்து சில கொலைகளை விதவிதமாகச் செய்கிறார். அந்தக் கொலைகளை யார் செய்வது என கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறை திணறுகிறது. அதே சமயம் பிரபல நகைக்கடை முதலாளி ஒருவர் காணாமல் போகிறார். அதைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பை காவல் துறை கமிஷனரே, தனியார் துப்பறியும் நிபுணரான பாக்யராஜிடம் ஒப்படைக்கிறார். அது பற்றி விசாரிக்க ஆரம்பிக்கும் பாக்யராஜ், அந்த நகைக்கடை முதலாளியைக் கடத்தியிருப்பது பா.விஜய்தான் என்பதைக் கண்டுபிடிக்கிறார். அந்த முதலாளியின் நண்பர்கள் சிலரை விஜய் ஏற்கெனவே கொலை செய்ததும் தெரிய வருகிறது. அவர்தான் முதலில் நடந்த கொலைகளைச் செய்த அந்த முகம் காட்டாத உருவம். பா. விஜய் ஏன் அவற்றைச் செய்தார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


ஆக்ஷன் ஹீரோ கதாபாத்திரம் விஜய்க்குப் பொருத்தமில்லாமல் இருக்கிறது. ஆனால், பிளாஷ் பேக்கில் சிற்பக் கலைஞர் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார். அந்தக் கதையையே இன்னும் கூடுதல் காட்சிகளுடன் கொடுத்து, கொலை செய்யும் காட்சிகளை குறைத்திருந்தால் படம் ஒரு அருமையான சென்டிமென்ட் படமாக அமைந்திருக்கும். ஆக்ஷன் ஹீரோ ஆசை யாரை விட்டது ?.


படத்தில் நாயகிகள் என்று யாரையும் சொல்ல முடியாது அளவிற்கு அவர்கள் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் போல வந்து போகிறார்கள். அவர்களுக்கு ஒரு பத்து வரி வசனம் இருந்தாலே அதிகம்.


படத்தின் நாயகி என்று சொல்ல வேண்டும் என்றால் பா. விஜய்யின் தங்கையாக நடித்த யுவா-வைத்தான் சொல்ல வேண்டும். இவர்தான் இந்தக் கதையின் மையம். இவரைச் சுற்றித்தான் படத்தின் பிளாஷ் பேக்கும் அமைக்கப்பட்டிருக்கிறது. இவர் மட்டுமல்லாது விஜய், யுவாவின் அப்பாவாக நடித்திருக்கும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், அண்ணனைப் போல இருக்கும் விக்னேஷ் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.


பாக்யராஜ் தனியார் துப்பறியும் நிபுணர். அவருக்கும் வயதாகிவிட்டது என்பது குளோசப்பில் நன்றாகத் தெரிகிறது. பாக்யராஜ் மனைவி சஞ்சனா சிங் ஆபாச உடையில் வலம் வருகிறார். பாக்யராஜ் உதவியாளர் மெட்டை ராஜேந்திரன் நகைச்சுவை என்ற பெயரில் சோதிக்கிறார்.



சிற்பக் கலைஞர்கள் குடும்பமாக இருக்கும் இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள், சிற்பங்களை உருவாக்குவது என அவையனைத்தையும் இயக்குனர் பா.விஜய் டீடெயிலாக காட்டியிருக்கிறார். மற்ற காட்சிகளில் ஒரு அவசரம் தெரிகிறது.



வித்யாசகர் இசையில் செல்லம்மா செல்லம்... பாடல் கேட்க வைக்கிறது. படத்தில் இடம் பெற்றுள்ள பல காட்சிகள் கிராபிக்சில் அமைக்கப்பட்டுள்ளது. விஜய் பைக்கில் செல்வதைக் கூட அப்படித்தான் படமாக்கியிருக்கிறார்கள்.



சிறுமியர்களின் பாதுகாப்பு பற்றிய படம் என்ற கருத்து மட்டுமே படத்தில் பாராட்டும் விதமாக இருக்கிறது. அவர்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்ல முயற்சிக்காமல் அவர்கள் வாழ்க்கை எப்படி சில கயவர்களால் சிதைக்கப்படுகிறது என்பதை சராசரிப் படமாகக் கொடுத்ததில் ரசிக்க முடியவில்லை.


ஆருத்ரா - ஆசை..ஆசை..

 

ஆருத்ரா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஆருத்ரா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

பா.விஜய்

1996ம் ஆண்டு ஞானப்பழம் படத்தில் மணிமாட குயிலே என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பா.விஜய். பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நடிகர் என்ற பல பரிமாணங்களைக் கொண்ட பா.விஜய், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். 2003ம் ஆண்டு ஆட்டோகிராப் படத்திற்காக இவர் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் இவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. திரடா திரடி மற்றும் தலைநகரம் ஆகிய படங்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதி உள்ளார். 2009ம் ஆண்டு வெளியான ஞாபகங்கள் படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகினார். தொடர்ந்து 2011 ம் ஆண்டு இளைஞன், 2014ல் தகடு தகடு ஆகிய படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார்.

மேலும் விமர்சனம் ↓