வடக்கஞ்சேரி டவுனில் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்ப்பவர் குஞ்சாக்கோ போபன். இவர் சிறுவனாக இருக்கும்போதே, ஒருமுறை ஆற்றில் கவிழ்ந்த பேருந்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்றும்போது அதில் அவரது தந்தை இறந்து விடுகிறார். அதனால் ஊர்க்காரர்களின் மரியாதைக்குரிய செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார். ஒருநாள் குஞ்சாக்கோவின் ஆட்டோவில் பயணிக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த காயத்ரி சுரேஷ் நட்பாகி, மறுநாள் அவரை தனது வீட்டிற்கு அழைக்கிறார்.
அங்கே செல்லும் குஞ்சாக்கோவிடம், தனது வீடு ஜப்தியாக இருப்பதாக கூறுகிறார். காரணம் தான் படித்துவிட்டு ஒரு பார்ம் ஹவுஸ் ஆரம்பித்துள்ளதாகவும், அதில் 100 ஜமுனாபியாரி என்கிற இனத்தை சேர்ந்த ஆடுகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் முதல் ஆர்டர் கிடைத்ததாகவும், ஆனால் வீட்டை பணயம் வைத்து பணம் கட்டி ஆர்டரை பெற்றவுடன், தனக்கு ஆடுகள் தந்து உதவுவதாக சொன்னவர்கள் அனைவரும் இப்போது விலகிவிட்டதாகவும் கூறுகிறார். மேலும் இன்னும் சில நாட்களுக்குள் 100 ஜமுனாபியாரி ஆடுகளை தனக்கு வாங்கி கொடுத்து, தனது வீடு ஜப்தியாகாமல் தடுக்க உதவுமாறு தனது தாய், தந்தையுடன் சேர்ந்து கண்ணீர் மல்க வேண்டுகோள் வைக்கிறார்.
முதலில் வேண்டாமென தயங்கினாலும் காயத்ரி மீது ஏற்படும் ஈர்ப்பால் இதற்கு ஒப்புக்கொள்கிறார் குஞ்சாக்கோ. காயத்ரிக்கு ஆடுகள் கிடைக்கவிடாமல் செய்து அவரது பார்ம் ஹவுஸையும் அபகரிக்க முயல்வது பக்கத்து வீட்டில் இருக்கும் ரஞ்சி பணிக்கரும் அவரது மகனும் தான் என்பதை அறிகிறார். தனது நண்பர்களான சுராஜ் வெஞ்சாரமூடு, ஜாய் தாமஸ், அஜு வர்கீஸ் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோரை கூட்டு சேர்த்துக்கொண்டு, தமிழ்நாடு, கோவா ஆகிய பகுதிகளுக்கு ஜமுனாபியாரி ஆடுகளை தேடி அலைகிறார். ஒவ்வொரு இடத்திலும் பல சிக்கல்களை கடந்து, அவருக்கு ஓரளவு ஆடுகள் கிடைக்கின்றன. இறுதிநாளில் இந்த ஆடுகளை ஒப்படைக்கும்போது எதிர்பாராத சோதனை வருகிறது. அதை குஞ்சாக்கோ சமாளித்தாரா, தான் காதலித்த காயத்ரி சுரேஷை கரம்பிடித்தரா..? என்பது க்ளைமாக்ஸ்.
ஊருக்கு உதவும் உத்தமன் கேரக்டரில் குஞ்சாக்கோ அப்படியே 'நச்' என செட்டாகிறார். 100 ஆடுகளை சேர்க்க அவர் ரிஸ்க் எடுக்க, ஒரு கட்டத்தில் காயத்ரியின் பெற்றோர் ரஞ்சி பணிக்கரின் மகனுக்கு தனது மகளை கட்டிக்கொடுக்க போவதாக சொல்லி அவரை உதாசீனப்படுத்தும் இடத்தில் நம்மை பரிதாபப்பட வைத்துவிடுகிறார் மனிதர். சோப்பு தயாரிக்கும் தொழிலில் சோப்பு இல்லாத காலி பெட்டிகளை பிரிப்பதற்கு அவர் கொடுக்கும் ஐடியா பலே ரகம்..
கீர்த்தி சுரேஷ் போல இன்னொரு காயத்ரி சுரேஷ் கேரளாவுக்கு கிடைத்துள்ள புது வரவு.. முன்னாள் மிஸ் கேரளாவான காயத்ரி, யதார்த்தமான நடிப்பிலும் ஜெயிக்கிறார் .. குறிப்பாக குஞ்சாக்கோவை திகைக்க வைத்து, தனது காதலை சொல்லும் இடத்தில் கைதட்டல் பெறுகிறார்.
சுராஜ் வெஞ்சாரமூடு அவரது மனைவியிடம் புது கார் வாங்கி கொடுத்து மாட்டிக்கொண்டு முழிப்பது, ஆடு பிடிக்க கிளம்பும் பயணத்தை ஷார்ட் பிலிம் எடுக்கிறேன் பேர்வழி என வழி நெடுக நீரஜ் மாதவ் அலப்பறை பண்ணுவது என நண்பர்கள் டீமில் இடம்பெறும் ஒவ்வொருவரும் கலகலப்பூட்ட தவறவில்லை. தமிழ்நாட்டு கிராமத்தை சேர்ந்த பண்ணையாரம்மாவாக திடீரென சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை ரோஜா. காமெடி நடிகர் அஜு வர்கீசையும், இன்னொரு நாயகி அனுமோலையும் இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம்.
படம் முழுவதும் கலகலப்பு ஒன்றையே குறிக்கோளாக வைத்து, அதேசமயம் படத்தின் விறுவிறுப்பும் குறையாமல் கொண்டு செல்லும் இயக்குனர் தாமஸ் செபாஸ்டின், ஆடுகளை வைத்து இவ்வளவு சுவாரஸ்யமாக ஒரு படத்தை கொடுக்க முடியுமா என நம்மை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.