தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

புறக்கணிப்புகளை கண்டு அச்சப்பட்டு பின்வாங்கும் பலரில் சிலர் மட்டும் அதை வரவேற்று அதிலிருந்து வாழ்வின் அடுத்த உயரங்களுக்கு செல்ல பாடம் கற்று பலருக்கும் முன் உதாரணமாக திகழ்கின்றனர். அப்படிப்பட்டவர் எம்.பி.ஏ.,படித்த இளம் நடிகை சென்னையை சேர்ந்த சவுந்தர்யா நஞ்சுந்தன்.
இவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக மனம் திறந்ததாவது...
சிறுவயதிலிருந்தே கனத்த குரல். பள்ளியில் படிக்கும் போதிருந்தே என் குரலை பலரும் கேலி செய்வர். இதனால் பல இடங்களில் மவுனமாகவே இருப்பேன். இதனால் தாழ்வு மனப்பான்மை எனக்குள் இருந்தது.
எதிர்காலத்தில் நல்ல நடிகையாக வேண்டும் என ஆசை பள்ளிப்பருவத்திலேயே இருந்தது. கூடவே என் கனத்த குரல் குறித்த அச்சமும் அவ்வப்போது தலை துாக்கியது. பள்ளிகளில் நடன போட்டிகளில் பங்கேற்க ஆசையாக இருக்கும். ஆனால் நடனம் ஆட தெரியாது. ஆடினால் அதையும் வைத்து கிண்டல் செய்வார்கள். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆசையாக செல்வேன். ஆனால் என் குரலால் புறக்கணிக்கப்படுவேன். பள்ளிப்பருவத்தை முடித்து கல்லுாரி சென்றேன். அங்கேயும் அதே நிலைதான் தொடர்ந்தது. 2016ல் பேஷன் டிசைனிங் படிப்பில் கவனம் செலுத்தினேன். அங்கிருந்து சில நண்பர்கள் மூலம் ராம்ப் வாக், மாடலிங் செய்ய ஆரம்பித்தேன்.
சினிமாவில் கால் பதிக்க வேண்டும் என்ற சிறு வயது ஆசையை நிறைவேற்ற நினைத்து, பல சினிமா ஆடிஷன்களில் பங்கேற்க செல்வேன். அங்கேயும் புறக்கணிப்பு தான் மிஞ்சியது. என்றாலும் நான் மனம் தளரவில்லை. புறக்கணிப்புகளை புறந்தள்ளி, அதை தன்னம்பிக்கை மந்திரமாக மாற்றி மனம் தளராமல் தொடர்ந்து வாய்ப்புக்காக காத்திருந்தேன். அந்த நேரத்தில் மாடலிங் துறையில் நுழைந்தேன். என்னை நிரூபிக்க சந்தர்ப்பங்கள் கிடைத்தன. விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதிலிருந்து வருமானம் வரத்தொடங்கியது.
குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு காத்திருந்தேன். 'மேரேஜ் கான்ட்ராக்ட்' எனும் குறும்படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்தினேன். அது எனக்கு வரவேற்பை பெற்று தந்தது. என்னை புறக்கணித்தவர்களே எனக்கு வாய்ப்பு தரும் சூழ்நிலையும் உருவானது. தொடர்ந்து 'வேற மாறி ஆபிஸ்' எனும் வெப்சீரிசில் நடித்தேன். தற்போது 2வது பாகம் தயாராகிறது. அதிலும் நடிக்க இருக்கிறேன்.
டிவி சீரியல், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. நல்ல கதையை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். மக்கள் மனதில் நல்ல கதாபாத்திரமாக இடம் பிடிக்க ஆசை. பலரும் திறமையை மதிக்காமல் வெளித்தோற்றத்தை வைத்து எடை போடுகிறார்கள்; அது தவறு. நம்மிடம் இருக்கும் குறையை வெற்றியாக எப்படி மாற்ற வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.