தமிழ் சினிமாவில் இதுவரை அவ்வளவாக வெளிவராத டெலிபதி எனும் ஒருவித நுண்ணுணர்வு பற்றிய கதைக்களத்துடன் ஆஸ்திரேலியா வாழ் தமிழர் மதிவாணன் சக்திவேல், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி கதாநாயகராக நடித்து, இயக்கி, தயாரித்தும் இருக்கும் திரைப்படம் தான் "நுண்ணுணர்வு".
கதைப்படி, பல் மருத்துவர் பயிற்சிக்காக இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா - சிட்னி போகிறார் சந்துரு எனும் நாயகர் மதிவாணன் சக்திவேல். அங்கு பல் மருத்துவ பயிற்சியில் இருக்கும் போது அவருக்குள் அவ்வப்போது ஒருமாதிரி இனம் புரியாத மாற்றங்கள் ஏற்படுகிறது. காரணம், அதே ஆஸி.,யில் டெலிபதி பற்றி மேல் படிப்பு படிக்கும் இந்திய வம்சாவளியைச் சார்ந்த சாரு எனும் நாயகி இந்திராதான். டெலிபதி நுண்ணுணர்வுகளால் ஒரு கட்டத்தில், இவர்கள் இருவரிடையே தொலைத்தொடர்பு சாதனங்கள் ஏதும் இல்லாமலேயே பேச முடிகிறது, பார்க்க முடிகிறது, பழக முடிகிறது. அதனால் நல்நட்பு கொள்ளும் இருவரும், அதன்பின், எப்படி காதலராகின்றனர்..? என்பதை வித்தியாசமும், விறுவிறுப்புமாக சொல்லும் படம் தான் "நுண்ணுணர்வு" மொத்தப் படமும்!
சந்துரு எனும் புதுமுக நாயகர் மதிவாணன் சக்திவேல், கதைக்கேற்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார்.
டெலிபதி பற்றி மேல் படிப்பு படிக்கும் இந்திய வம்சாவளியைச் சார்ந்த சாருவாக அறிமுகநாயகி இந்திரா, அமைதியான முகசாயலுடன் அழகழகான அங்க அவையங்களுடன் அம்சமாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். சபாஷ்!
"2 ஸ்ட்ராங் மைன்ட் தூரமா இருந்தாலும் கானெகட் பண்ணலாம் சாரு" என, டெலிபதி பற்றி தெரிந்து கொண்டு டென்டலிஸ்ட் ஹீரோ சந்துரு பேசுவதும்.. கண்ணாடி முன் இரண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் அறிமுகம் செய்து கொள்ளும் காட்சிகளிலும், டெலிபதியால் ஒருவருக்கு தலையில் அடிபட்டால், அவருக்கு வலிப்பதும், ஒருவருக்கு கையில் கீறல் விழுந்தால் மற்றொருவர் கையை பிடித்துக் கொண்டு வலியால் துடிப்பதும், சுவாரஸ்யமாக பதிவு செய்யப்பட்டுள்ள ஹாஸ்யங்கள்!
வில்லன் வினேஷ் - ஆக ஜெய் தினேஷ், பிரிதொரு வில்லன் பிரசாத் - ஆக திரி மற்றும், பார்வி - ஸ்ரீ பக், அனிதா - கீதா வாணன்... உள்ளிட்ட பிறரும் பாத்திரமறிந்து பக்காவாக பளிச்சிட்டுள்ளனர். குண்டு அனிதா மட்டும் சற்றே ஓவர் டோஸ். ஆமாம், இந்த காலத்திலும் குண்டாக இருப்பவர்கள்... ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்களா.? என்ன.? இயக்குனருக்கே வெளிச்சம்.
சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பில் குறையேதுமில்லை. தினேஷ் பிரசாத்தின் ஒளிப்பதிவு, ஆஸ்திரேலிய அழகை அசால்டாக அள்ளி வந்திருக்கிறது. வாவ்!
மயூ.கணேசனின் இசையில் "பேசிக்கலாம் மெல்ல... மெல்ல... யோசிக்கலாம் நெஞ்சுக்குள்ளே...", "எனக்குள்ள உள்ள நிஜமே எங்கிருந்தோ....", "வீக் எண்ட்ல சீயரப்பண்ணி...", "மஞ்சள் மாலை நேரத்திலே..." உள்ளிட்ட பாடல்களில் ஒன்றிரண்டு ஒட்டவில்லை என்றாலும் இரண்டு மெலோடியில் முழுசாய் தேறுவது ஆறுதல்!
முழுக்க, முழுக்க இப்படம் ஆஸ்திரேலியாவில் படமாகியிருப்பதும், பெரும்பாலான லொகேஷன்கள் புதுவித அழகில் ஜொலிப்பதும் படத்திற்கு பெரிய பலம். ஆனால், நாயகனும், நாயகியும் ஆரம்ப காட்சிகளில் தொலைத் தொடர்பு சாதனங்கள் இல்லாமல் பேசிக் கொள்வதும் பார்த்துக் கொள்வதும்.. என்ன தான் டெலிபதி என்றாலும் சற்றே ரசிகனின் பொறுமையை கொல்வது பலவீனம்.
சைக்காலஜி படித்த கதாநாயகி அம்மணி, அப்பாவிடம் சொல்லிவிட்டுத் தானே, மேல்படிப்புக்காக டெலிபதி - நுண்ணுணர்வு நுட்பத்தில் சந்துருவுடன் நட்பு வளர்க்கிறார்? அப்புறம் எதற்கு..? அந்த அப்பா மகளை சந்தேகப்பட்டு அப்படி குதிக்கிறார்...? என்பதற்கும், ஒரு பெண் மீது குடும்ப நண்பன் ஒருத்தன் ஆசைப்பட்டு வசதியான சந்தர்ப்பத்தில் அவளது அப்பாவையும் தாக்கி அவளுக்கும் மயக்க ஊசி போட்டு அடைய முயற்சிக்கிறான். அப்பாவும், மகளும் மயங்கி கிடக்க அந்த முற்சியை ஆள் அரவம் இல்லா அந்த வீட்டிலேயே செயல்முறை, நடைமுறைப்படுத்த முயற்சிக்காது ஊருக்கு ஒதுக்குப் புறமாக தூக்கி வந்து படுக்கப் போட்டு, மயக்கம் தெளியட்டும்.... என நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பது.... உள்ளிட்ட லாஜிக் மிஸ்டேக்குகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் புதியவர் மதிவாணன் சக்திவேலின் எழுத்து, இயக்கத்தில் டெலிபதி பற்றி விலாவாரியாக காட்சிப்படுத்தியிருக்கும் "நுண்ணுணர்வு - ஒரு விதத்தில், தமிழ் சினிமாவிற்கு புத்துணர்வு!"