ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அப்பாவும், தாத்தாவும், சுட்டெரிக்கும் வெயிலில் தேர்தல் களத்தில் தீவிர பிரசாரம் செய்யும் நிலையில், உதயநிதியோ, தன் அடுத்த, மனிதன் படத்தை, ரிலீஸ் செய்யும் இறுதிகட்ட வேலைகளில் பிசியாக இருக்கிறார். அவர், நமக்கு அளித்த பேட்டி:
மனிதன் படம் பற்றி சொல்லுங்களேன்...?
இந்த படத்தில், முதல் முறையாக வக்கீல் வேடத்தில் நடிக்கிறேன். ஸ்கூல் டீச்சர் வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறாங்க. ரொம்ப, பவர்புல்லான வேடத்தில் பிரகாஷ் ராஜ்
நடித்திருக்கிறார். என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அகமது தான், இந்த படத்தையும் இயக்கியுள்ளார். அனைவருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்.
மனிதன் படத்தோட ஸ்பெஷல் என்ன ?
இதுவரை 5 படத்தில் நடித்துவிட்டேன். இந்த படம் எனக்கு புதுமாதிரியாக தெரிவதுடன், என் வளர்ச்சியும் தெரிகிறது. ஒரு சராசரி மனிதனின் கதை, சமூகத்துக்காக அவன் வாழ்க்கையில் எப்படி போராடுறார், ஜெய்கிறார் என்பது தான் மனிதன் கதை. பெரிய வக்கீலுக்கு எதிராக வாதாடுகிறேன். கூடவே படத்தில் ஒரு மெசேஜ் சொல்றோம். இந்த படத்தில் பெரிய நடிகர்கள் கூட நடித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம்.
ஹன்சிகாவுடன் தொடர்ந்து நடிப்பது ஏன்?
என்னோட லக்கி ஹீரோயின் அவங்க தான். இருவரும் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இது. இந்த படத்தில், ஹன்சிகா, ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு நடிச்சிருக்காங்க. எங்கள் இருவருக்குமே, இது, ஸ்பெஷலான படமாக இருக்கும்.
ரஜினி படத்தின் தலைப்பை வைக்க காரணம் என்ன?
படம், பாதி முடிந்த நிலையில் என்ன பெயர் வைப்பது என, நிறைய யோசித்தோம். விவேக் சார் தான். இந்த கதைக்கு, மனிதன் என பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் என, யோசனை தெரிவித்தார். ரஜினி நடித்த படம் என்பதால், இந்த பெயர், ரசிகர்களிடம் எளிதாக, ரீச் ஆகும் என நினைத்து, இந்த பெயரையே தேர்வு செய்தோம்.
இப்போதெல்லாம் நீங்கள் தயாரிக்கும் படங்களில் வேறு நடிகர்கள் நடிப்பது இல்லையே ஏன்?
என் தயாரிப்பில், நான் நடிக்கும் படங்கள் வரிசையாக வெளிவர காத்திருக்கின்றன. மேலும், சரியான பட்ஜெட்டில், சரியான நடிகர்கள் கிடைத்து, நல்ல கதை அமைந்தால், தொடர்ந்து வேறு நடிகர்களை வைத்து படங்கள் தயாரிப்பேன்.
உங்களுக்கு ஆக் ஷன் ரோல் செட்டாகுமா?
எனக்கு காமெடி ரோல் தான், செட் ஆகிறது. தொடர்ந்து காமெடி படங்களில் நடித்ததால், திடீரென சலிப்பு வந்து விட்டது. அதன்பின், வெவ்வேறு கதைக்களங்களில் நடிக்கலாம் என்ற ஆசை ஏற்பட்டது. கெத்து படத்தில் ஆக் ஷன் ரோலில் நடிக்க முயற்சித்தேன். இப்போது, வக்கீலாக நடிக்கிறேன். அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப, என்னையும் மாற்றி, நல்ல படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை.
நயன்தாரா, ஹன்சிகா, ஏமி இந்த மூன்று பேரில், யாருடன் நடிப்பது எளிதாக இருக்கும்?
எனக்கு பிடித்தவர் ஹன்சிகா தான். அவங்களோடு நடிக்கும்போது தான், பெரிய,ஹிட் கிடைச்சிருக்கு. எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இல்லை என்றால், தொடர்ந்து மூன்று படங்களில் இருவராலும் சேர்ந்து நடித்திருக்க முடியாது.
வெற்றி பட இயக்குநர்களின் படங்களில் நடித்தும் சில படங்கள் சரியாக போகவில்லையே ஏன்.?
எல்லா இயக்குனர்களிடமும் கதை கேட்டு எல்லா படத்துக்கும் ஒரே மாதிரி உழைப்பை தான் கொடுக்கிறேன். ஒரு படம் ஓடாது என்று முன்னாடியே தெரிந்தால் யாரும் படம் பண்ண மாட்டாங்க. எஸ்ஆர்.பிரபாகரன் படத்தை ஓகே ஓகே படத்தோட ஒப்பிட்டாங்க. எனக்கு பிளஸ், மைனஸ் இரண்டுமே ஓகே ஓகே படம் தான்.
இப்போதெல்லாம் உங்க கோபத்தை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறதே.?
எனக்கு கோபம் வராது என்பது உண்மை. ஆனால் பணம் வாங்கி கொண்டு தவறாக வேண்டும் என்றே விமர்சனம் செய்பவர்களை கண்டால் உண்மையாகவே கோபம் வருகிறது, அதை தான் நான் வெளிபடுத்தினேன்.
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தும் நீங்க அமைதியா இருக்கீங்களே ஏன்.?
நான் என் பட வேலைகளில் பிசியாக இருக்கிறேன். இப்போதைக்கு அரசியல் இல்லை, அதை பார்க்க தாத்தா, அப்பா போன்ற பெரியவர்கள் இருக்கிறார்கள். நான் இப்போதைக்கு என் படங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.
இவ்வாறு உதயநிதி கூறினார்.