ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் கமலின் வாரிசான இவர், 2009ம் ஆண்டு லக் என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். முதல் படத்திலேயே பிகினி உடையணிந்து கவர்ச்சி புயலாக பாலிவுட்டை கலக்கிய ஸ்ருதி, தொடர்ந்து தெலுங்கு பட உலகையும் கலக்கினார். தமிழில் ஏழாம் அறிவு, 3 ஆகிய படங்களில் நடத்துள்ளார். விஷாலுடன் இவர் நடித்துள்ள பூஜை படம் தீபாளிக்கு ரிலீசாகி உள்ளது. தினமலர் இணையதளத்திற்கு ஸ்ருதிஹாசன் அளித்த தீபாவளி சிறப்பு பேட்டி :
* பூஜை படத்தில் தேர்ந்தெடுத்து நடிக்க காரணம் என்ன.?
ஹரி சார் படம் என்றாலே எல்லாமே இருக்கும். குடும்ப டிராமா, சென்டிமெண்ட், ஆக்ஷ்ன், காதல் என பூஜை படத்தில் எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கார். ஹரிசாரின் மற்ற படங்களை ஒப்பிட்டு பார்த்தீங்கனா, இந்தப்படத்தில், காதல் காட்சிகள் கொஞ்சம் புதிதாக இருக்கும். படத்தில் எனக்கு திவ்யா என்ற கேரக்டர், ரொம்ப தைரியமான பொண்ணு , மாடர்னா யோசிக்க கூடியவள், இப்படத்தில் எல்லாமே இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
* உங்க இசை ஆல்பம் வேலைகள் எல்லாம் எப்படி போகுது.?
உண்மையை சொல்லப் போனால், இந்த வருஷம் 7 படங்கள் பண்ணியிருக்கேன். தமிழ், தெலுங்கு, இந்தி என்று 3 மொழிகளில் பிஸியாக இருக்கேன். இசைக்கென பயிற்சி எடுக்கவோ, அதற்கான நேரம் ஒதுக்கவோ முடியல, அதனால் இப்போது என் கவனம் சினிமாவில் நடிப்பில் மட்டும் தான் இருக்கு.
* தமிழில் ரொம்ப செலக்ட் பண்ணி தான் படம் நடிக்கிறீங்க போல.?
நீங்கள் சொல்றீங்க தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்று, இந்தியில சொல்றாங்க, எங்கள மறந்துட்டீங்க என்று, தெலுங்கில் மட்டும் தான் சந்தோஷமா இருந்தாங்க, இப்ப அவங்களும் தமிழ், இந்தி படங்கள் பண்றீங்க, தெலுங்கு படம் பண்ண மாட்றீங்க என்று சொல்றாங்க. இப்ப நான் எங்க போறது என்றே தெரியவில்லை.
* சரி எந்த மாதிரி படங்களில் தான் நடிக்க விரும்புறீங்க.?
எனக்கு கமர்ஷியல் தான் என்று சொல்லமாட்டேன். நான் 7-ம் அறிவு படத்தில் நடித்தபோது சுபாஸ்ரீனிவாசன் கேரக்டர் பிடித்தது. அதேமாதிரி 3 படத்தில் என் ரோல் என்னுடைய பேவரைட், அதன்பிறகு இப்போது நான் நடித்துள்ள பூஜை படத்தின் ரோல் பிடித்துள்ளது. குடும்ப உறவை சொல்கிற படம், வேறு ஒரு ஆடியன்ஸ் பக்கம் போறேன். இந்த மாதிரி கதைகளில், கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்.
* ஆண் ஆதிக்கம் நிறைந்த இந்த துறையில் உங்கள் கருத்துக்கள், பேச்சுக்கள் எடுபடுகிறதா.?
ஆண் ஆதிக்கம் நிறைந்த இண்டஸ்ட்ரி மட்டுமல்ல, ஆண் ஆதிக்கம் நிறைந்த நாடு இந்தியா. எந்த வீட்டில், எங்கு தங்கினாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறேன். பள்ளி பெண்களில் இருந்து டீச்சர்ஸ், ஊர் விட்டு ஊர் வந்து வேலை பார்க்கும் பெண்கள், இப்படி பல வகைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, நான் ஒரு நடிகையாக இல்லாமல் ஒரு பெண் பிரதிநிதியாக பேசுகிறேன். அதனால் என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறேன். பெண்களுக்கு முடிந்த உதவிகளையும், விழிப்புணர்வுகளையும் கண்டிப்பாக செய்வேன். மும்பையில் இந்த பிரச்னையை நான் சந்தித்த போது, அதைப்பற்றி பேசினேன், மீடியாவுக்கு சொன்னேன், அந்த விஷயம் வெளியில வந்தது. அடுத்து நான் ஒரு பாதுகாப்பான இடத்துக்கு போகலாம், ஆனால் மக்களின் மனநிலை சரியில்லைன்னா எதுவும் செய்ய முடியாது.
* மணிரத்தினம் படத்தில் நடிக்காதது ஏன்.?
முதலில் அந்தபடம் இப்போது ஆரம்பிக்கப்படவில்லை, இரண்டாவது எனக்கு டைம் இல்லை, அவருடைய படத்தில் நடிக்காதது வருத்தம் தான். மணிசார் இயக்குநர் மட்டும் இல்லை, என் குடும்பத்து உறவினர், அவரது படத்தில் நடிக்க முடியாதது வருத்தம் தான்.
* இப்ப வரும் தமிழ்படங்களை பார்க்கிறீங்களா.?
அந்தளவுக்கு எனக்கு டைம் இல்லை, கிடைக்கும்போது பார்க்கிறேன். நான் எப்பவுமே தமிழ், மலையாளம் படங்கள் தான் பார்க்கிறேன், அந்தமொழிப்படங்கள் ரொம்ப பிடிக்கும், ஏன்னா படத்தில் நிறைய சப்ஜெக்ட் இருக்கும்.
* விஜய் கூட நடிக்க போறது பற்றி.?
விஜய் சாரோட நடிக்கிறது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சிம்புதேவனின் கதை அவ்வளவு அழகாக இருக்கிறது, நவம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
* அப்பா ஏதாவது உங்களுக்கு அட்வைஸ் பண்ணியிருக்காரா.?
நான் இண்டஸ்டரிக்கு வந்து 5 வருஷம் ஆகிவிட்டது. இதுவரை என்ன பண்ற, என்ன ரோலில் நடிக்கிற, என்ன படம் பண்ற என எதுவும் கேட்டதில்லை, என் டியூட்டி நடிக்கிறது, அதை நான் சரியாக செய்கிறேன். எனக்கு எது சரி, எது தப்பு என்று தெரியும்.
* உங்களோட கிளாமர் ஸ்டில்ஸ் பார்த்து விமர்சனம் வந்தது பற்றி.?
அப்படி ஒன்றும் விமர்சனம் வந்தது மாதிரி தெரியவில்லை. நீங்க என் உடம்பை தப்பா பார்த்திங்கனா, அது உங்க தவறு, என் தவறு கிடையாது. எனக்கு என் உடம்பு கோயில் மாதிரி, நான் எப்போதும் அதை தப்பாக பார்க்க மாட்டேன். மத்தவங்க தப்பா பார்த்து, விமர்சனம் செய்தா அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.
* டி-டே படம் மாதிரி கிளாமர் ரோலில் நடிக்க அவசியம் என்ன.?
அந்தப் படம் 10பேர் வந்து பார்த்து அந்த கேரக்டரை என்ஜாய் பண்ணியிருக்காங்க, அந்த கேரக்டர் அதுமாதிரி. பாட்டுல இவ்வளவு கிளாமர் இருக்கணும், படக்காட்சிகளில் இவ்வளவு கிளாமர் இருக்கணும் என்று யார் ரூல்ஸ் போட்டது.? எனக்கு அது பிடிக்கவில்லை, கதைக்கு என்ன தேவையோ அதை நான் செய்கிறேன், அந்த கேரக்டராகவே நான் மாறுகிறேன். என்னால் ஜனனி மாதிரி ரோலும் பண்ண முடியும், டி-டே மாதிரி ரோலும் பண்ண முடியும். நான் ஒரு மாடர்ன் பொண்ணு, ஸ்ருதின்னா யாருன்னு எல்லோருக்கும் தெரியுது, அது எனக்கு பெருமையாக இருக்கு, சொல்லப்போனால் கர்வமாக கூட இருக்கு.
* உங்க பேச்சில் ஒரு பெண் ஆதிக்கம் தெரியுதே.?
எல்லா ஆண்களுடனும், சண்டை போட்டு கத்தி பேசி தான் பெண் ஆதிக்கத்தை காட்ட வேண்டும் என்று நான் சொல்ல வரல. சூழ்நிலைகள் தான் நம்மை அப்படி பேச வைக்கிறது. நான் இப்படி இருக்கிறேன் என்றால் அதற்கு என் அம்மா தான் காரணம், என் அம்மா சுதந்திரமாக வாழக்கூடியவங்க, ரொம்ப மன தைரியமானவங்க, வாழ்க்கையில எதுக்கும் பயப்பட்டது கிடையாது, அவங்களை மாதிரியே நானும் இருக்கேன்.
* அனிருத் படங்களில் பாடியிருக்கிங்க, அவர் இசையில் நடிச்சிருக்கிங்க, அவரைப்பற்றி?
அனிருத் மிகச்சிறந்த இசையமைப்பாளர், நம்ம காலக்கட்டத்தில் அனிருத் கலக்குகிறார், நானும் ஒரு இசையமைப்பாளர் தான், ஆனால் அவர் ஒர்க் பார்த்து அசந்து போறேன். அவர் படங்களில் கண்டிப்பாக ஹிட் பாட்டு இருக்கும், இன்னும் அவர் பல உயரங்களை தொடுவார் என்று நம்புகிறேன்.
* தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி இப்போது எப்படி இருக்கு.?
ரொம்ப நல்லா இருக்கு, வித்தியாசமான கதைக்களங்கள், வித்தியாசமான படம், பெரிய ஸ்டார்களை வைத்தும் படம் இயக்குகிறார்கள், புதிதாக வரும் நட்சத்திரங்களும் நல்லா நடிக்கிறாங்க, இதையெல்லாம் பார்ப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
* தெலுங்கு சினிமாவில் உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க போல.?
எனக்கு பிடிக்காதவங்க என்று யாரும் கிடையாது, எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க, யாரிடமும் நேருக்கு நேரா பேசிடுவேன், அதனால் எந்த பிரச்னையாக இருந்தாலும் அப்பவே முடிந்துவிடும். ப்ரியாமணி, தமன்னா, காஜல் என்று பலரும் என்னுடன் பல வருடங்களாக நண்பர்களாக இருக்காங்க.
* வேறு ஹீரோயின் படமாக இருந்தாலும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது பற்றி.?
இந்தியில பல படங்களில் இதுமாதிரி ஆடுறாங்க. ப்ரியங்கா சோப்ரா, தீபிகா, கத்ரீனா உள்ளிட்ட பலர் ஒரு பாட்டுக்கு ஆடியிருக்காங்க. தெலுங்கில் முதன்முறையாக நான் ஆடினேன், தமன்னா என் படத்தில் நீங்க ஆடணும் என்று சொன்னாங்க, அவருக்காக ஒப்புக்கொண்டு அந்தப்படத்தில் ஆடினேன், நல்ல பேர் கிடைத்தது. இது எல்லா பாட்டுக்கும், பொருந்தும் என்று சொல்ல முடியாது, ஏன்னா எல்லோரும் அவரவர் வேலையில் பிஸியாக இருக்காங்க.
* எந்த தொல்லையும் இல்லாம, சுதந்திரமா வாழலாம் என்றால் எந்த இடத்தை சொல்வீங்க.?
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் தான். பெண்கள் பாதுகாப்பு, உரிமை, சுதந்திரம் என எல்லாவற்றையும் அங்கு தான் கற்றுக்கொண்டேன், ரொம்ப பிடித்த இடம்.
* சமூக விழிப்புணர்வில் உங்க பங்கு என்ன.?
அப்பா கூப்பிட்டால், நானும் க்ளீன் இந்தியா திட்டத்தில் சேர ஆசை இருக்கு. ஏற்கனவே எச்ஐவி., விழிப்புணர்வு, குழந்தைகள் கல்வி, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் உதவி செய்கிறேன், வேறு எதேனும் உதவி தேவைப்படும் பட்சத்தில் கண்டிப்பாக நான் செய்வேன்.
* உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள நினைக்கும் விஷயம்.?
கோபம். முன்பு நிறைய கோபப்படுவேன், இப்போது அதை குறைத்து கொண்டேன், இன்னும் கொஞ்சம் குறைக்கலாம் என்று நினைக்கிறேன்.
* அம்மாவை பற்றி சொல்லுங்க.?
அம்மா மும்பையில இருக்காங்க, இப்ப அவுங்க பண்ற டிவி நிகழ்ச்சி, பெரிய ஹிட்டாகியுள்ளது, நிறைய பாராட்டுகள் அவங்களுக்கு கிடைக்குது. சில படங்களில் நடிக்கிறாங்க, அவுங்க வாழ்க்கை சந்தோஷமாக போய் கொண்டு இருக்கிறது.
* நிறைய நாட்கள் நீங்க தனிமையில் தான் இருக்கீங்க, உங்க சோகம், சந்தோஷம் எல்லாவற்றையும் எப்படி பகிர்ந்து கொள்வீங்க.?
எனது சந்தோஷம், துக்கம் எல்லாவற்றையும் எழுத்தாக எழுதுகிறேன். பாட்டு எழுதுறேன், கவிதையா எழுதுறேன், ஷார்ட் ஸ்டோரி கூட எழுதி வைத்திருக்கிறேன்.
* உங்களது திருமணம் லவ் மேரேஜ்ஜா அல்லது அரேஞ்ச்டு மேரேஜ்ஜா.?
கண்டிப்பாக லவ் மேரேஜ் தான், எனக்கு யார் அரேஞ்ச் மேரேஜ் பண்ணப்போறாங்க.
* உங்களுக்கு வரப்போற கணவர் எப்படி இருக்கணும்.? குடிப்பழக்கம், சிகரெட் இதெல்லாம் தவிர்த்து எப்படி நல்லவர் ஒருவரை தேர்வு செய்வீங்க.?
நல்ல மனசு, நல்ல புத்தி இது இருந்தாலே போதும், மேலே நீங்கள் சொன்ன இந்த பழக்கத்தை நான் சொன்னா அவர் கண்ட்ரோல் பண்ணிடுவாங்களா.? இந்த பழக்கம் ஏதும் இல்லாம, யாரையாவது கொலை பண்ணியிருந்தால் என்ன பண்றது.?
* சரி விடுங்க, இதுவரைக்கும், உங்களை யாராவது விரட்டி விரட்டி காதலிச்சிருக்காங்களா.? இல்லை குறைந்தபட்சம் லவ்வாவது சொல்லியிருக்காங்களா.?
என்னை பார்த்தாலே பயப்படுறாங்க, ஆண்கள் மாதிரியே என்னை பார்க்குறாங்க, எது சொன்னாலும் நேருக்கு நேர் சொல்லிடுறேனு பயப்படுறாங்க. ஆனால் நான் வெயிட் பண்றேன் ஒரு மகாபுருஷர் எனக்காக வருவார் என்று...
* இந்த வருஷம் தீபாவளி உங்களுக்கு எப்படி.?
பூஜை படம் எனக்கு ஆட்டோபாம் மாதிரி, ஒரு சந்தோஷ தீபாவளியா இருக்கு, ரொம்ப எதிர்பார்க்கிறேன்.
* பட்டாசு வெடித்த அனுபவம் இருக்கா.?
என் தங்கச்சிக்கு 10 ஆயிரம் வாலா சரவெடி ரொம்ப பிடிக்கும், எனக்கு சங்கு சக்கரம், கம்பி மத்தாப்பூ, இந்த மாதிரி சின்ன சின்ன வெடிகள் தான் பிடிக்கும், சின்ன வயசு அனுபவம் இப்பவும் மனசில இருக்கு.
* பிடித்த ஸ்வீட்ஸ்.?
ஜிலேபி, பால்கோவா சும்மா வெளுத்து கட்டுவேன், ரொம்ப ரொம்ப பிடிச்ச ஸ்வீட்ஸ்.
* புதுஅணிகலன், ஆடை ஆபரணம் பற்றி சொல்லுங்க, என்ன டிரஸ் வாங்கியிருக்கீங்க.?
அம்மா புடவை ஏதாவது வாங்கி வச்சிருப்பாங்க, நான் இதுவரைக்கும் ஒரு தங்க நகை கூட போட்டதில்லை, ஏதாவது மிஸ் பண்ணிட்டால் ஒரு சங்கடம் இருக்கும், அந்த பதட்டத்திற்காகவே நான் தங்க நகை எதுவும் போட மாட்டேன். பரிசுப்பொருள் வந்தால் கூட அதை அம்மாகிட்ட கொடுத்து பத்திரமாக வச்சிருக்க சொல்வேன்.
* நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார்.?
நிறைய பேர் இருக்காங்க, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மடோனா.
* ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது.?
ரொம்ப மிஸ் பண்றேன், இதோ திரும்பி வர்றேன். எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
இவ்வாறு, ஸ்ருதிஹாசன் படபடவென பட்டாசு வெடித்தது போல பேசினார்.