ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்த இரண்டு வருடங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், மலையாள நடிகர் பிருத்விராஜ் புதிய படங்களில் நடிக்க இருப்பதாக அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டே தான் இருந்தது. மனிதர் எப்படி இத்தனை படங்களுக்கும் சிக்கலின்றி கால்ஷீட் ஒதுக்குகிறார் என்கிற ஆச்சரியமும் ஏற்படவே செய்தது.. ஆனால் பெரிதாக எந்த சர்ச்சையும் பிருத்விராஜ் மீது ஏற்படவில்லை. இப்போது முதன்முறையாக ஒரு பெண் இயக்குனரான ரோஷினி தினகர் என்பவர் பிருத்விராஜ் மீது கால்ஷீட் குளறுபடி குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
பிருத்விராஜ்-பார்வதியை வைத்து 'மை ஸ்டோரி' என்கிற படத்தை இயக்குவதுடன் தானே தயாரிக்கவும் செய்கிறார் ரோஷினி தினகர். இந்தப்படத்தின் ஷூட்டிங் முதல் கட்டமாக போர்ச்சுக்கல் நாட்டில் கடந்த நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடந்து முடிந்தவுடன், பிருத்விராஜ் தனது மற்ற படங்களில் நடிக்க சென்றுவிட்டார். அதன்பின் குறிப்பட்ட தேதிகளில் அடுத்தகட்ட ஷூட்டிங்கை தொடரமுடியாமல் கடந்த எட்டு மாதங்களாக தவித்த ரோஷினி தினகர், பிருத்விராஜை நேரிலும் போனிலும் கூட தொடர்புகொள்ள முடியாத நிலைக்கு ஆளானார்.
இந்நிலையில் பிருத்விராஜுக்கு தரவேண்டிய சம்பள தொகை ஒரு கோடியை பைனான்சியரிடமிருந்து ஜூன் மாதம் கடனாக பெற்ற ரோஷினி, பிருத்விராஜிடம் அதை கொடுப்பதற்கு முன்பாக அவர் எப்போது கால்ஷீட் கொடுக்க விரும்புகிறார் என தெரிந்துகொள்ள விரும்பினார்.
இதிலேயே இரண்டு மாதங்கள் ஓடிவிட, ஒருவழியாக ஆகஸ்ட்-15 முதல் ஷூட்டிங்கை மீண்டும் துவங்கலாம் என பிருத்விராஜ் சொன்னதால் அந்த ஒரு கோடி ரூபாயை பிருத்விராஜிடம் கொடுத்தாராம் ரோஷினி தினகர். ஆனால் அதன்பின்னரும் ஷூட்டிங் துவங்குவதற்கு பிருத்விராஜிடம் இருந்து கிரீன் சிக்னல் வரவில்லையாம்.
இந்தநிலையில் இதே பிருத்விராஜ் - பார்வதி கூட்டணியை வைத்து 'பெங்களூர் டேஸ்' புகழ் அஞ்சலி மேனன் தனது புதிய படத்தை வரும் அக்-18 முதல் ஊட்டியில் துவங்குகிறார். தற்போது ரணம் என்கிற படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பல் கலந்துகொண்டு நடித்துவரும் பிருத்விராஜ் அக்-23ஆம் தேதி கேரளா திரும்புகிறார். வந்த சூட்டோடு அப்படியே அஞ்சலி மேனன் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறாராம்.
இதுகுறித்து கேரள தயாரிப்பாளர், இயக்குனர் சங்கம் மற்றும் தென்னிந்திய பிலிம் சேம்பர் ஆகியவற்றில் முறையிட்டுள்ள ரோஷினி தினகர், இந்தப்படத்திற்காக தான் 13 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், இன்னும் 37 நாட்கள் ஷூட்டிங் பாக்கி உள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் மலையாள தயாரிப்பாளர் சங்கமோ, அஞ்சலி மேனன் தனது படப்பிடிப்பை துவங்க அனைத்தும் தயாராக ஏற்பாடு செய்துள்ள நிலையில் அவரது படப்பிடிப்பை எப்படி நிறுத்தச்சொல்ல முடியும், வேண்டுமானால் அஞ்சலி மேனன் படம் முடிந்ததும் உங்களது படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துக் கொள்ளுங்கள் என சொன்னதாக தெரிகிறது.
இதனால் ஆவேசமான ரோஷினி தினகர், பாதி படப்பிடிப்பு நடந்து முடிந்து இன்னும் 37 நாட்கள் ஷூட்டிங் மட்டுமே பாக்கியுள்ள தனது படத்தை, இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்காத அஞ்சலி மேனன் படத்திற்காக ஏன் தள்ளிவைக்க வேண்டும்.. என்னால் முடியாது.. நிச்சயம் இதற்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை விடமாட்டேன் என கோபத்துடன் கூறியுள்ளாராம். 'மை ஸ்டோரி' ஷூட்டிங் ஸ்பாட்டில் ரோஷினி தினகருடன் ஏற்பட்ட ஈகோ மோதல் காரணமாகவே பிருத்விராஜ் இப்படி செய்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், அஞ்சலி மேனன் படத்தை நவம்பருக்குள் முடித்து கொடுத்துவிட்டு, அடுத்ததாக பிளஸ்சி டைரக்சனில் ஆடுஜீவிதம் படத்தில் நடிக்க அரபு நாடுகளுக்கு கிளம்ப தயாராக இருக்கிறாராம் பிருத்விராஜ்.
நிச்சயம் பிருத்விராஜூக்கு இது இடியாப்ப சிக்கல் தான் என்பதில் சந்தேகமேயில்லை.