ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இதற்கு முன், தந்தையாக, தாத்தாவாக நடித்து, குணசித்திர நடிப்பில் வெளுத்து வாங்கிய சாருஹாசன், முதன்முறையாக, தாதா 87 என்ற படத்தில், கொடூர தாதாவாக நடித்து, அனைவரையும் மிரட்ட தயாராகி வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு:
படத்தின் தலைப்பே, மிரட்டலாக இருக்கே?
உங்களுக்கே அப்படி இருக்கும்போது, நடித்த எனக்கு எப்படி இருக்கும். புதுமுக இயக்குனர், விஜய் ஸ்ரீ, என்னிடம் கதை சொல்ல வரும்போதே, ரொம்ப கெட்டிக்கார இயக்குனராக தெரிந்தார். நன்றாக படம் எடுப்பார் என நம்பித் தான், இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.
படத்தில் என்ன சிறப்பு?
வயோதிக வாழ்க்கை நடத்தும் தாதாவை பற்றிய கதை. தாதா என்றால், எதிரிகளை அடித்து துவைக்கும் தாதா அல்ல; மூளையை பயன்படுத்தி, தோற்கடிக்கும் தாதா.
படத்தில் உங்களுக்கு காதல் காட்சி எல்லாம் இருக்காமே?
உங்களுக்கும் அது தெரிஞ்சுடுச்சா. ஆமா, இதில் எனக்கு ஜோடியாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் பாட்டியை பரிந்துரைத்தேன். அந்த அம்மாவை எனக்கு ஏற்கனவே தெரியும். இந்த படத்தில், 87 வயது ஆணும், 80 வயது பெண்ணும் டூயட் பாடியிருக்கோம். எனக்கு, 17 வயதாக இருந்த போது, நேருவின் மகள், இந்திரா தான், உலகத்திலேயே அழகான பெண்ணாக தெரிந்தார்.
சினிமாவில், யாரையாவது காதலித்து திருமணம் செய்ய நினைத்தது உண்டா?
நான், 50 வயதில் தான், சினிமாவுக்கு வந்தேன். 25 வயதில் வந்திருந்தால், குறைந்தது, 10 நடிகையரையாவது காதலித்து இருப்பேன். 50 வயதில் வந்தால், யார் காதலிப்பாங்க?
உங்கள் சகோதரர், சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்துட்டாரே?
ஆமாம். கமல், ஹீரோவான போது, படங்களில் நடிக்க, அவருக்கு ஏற்ற ஹீரோயினை நான் தான் தேர்வு செய்தேன். பல படங்களுக்கு, இப்படி செய்திருக்கிறேன். மாதவி போன்ற நடிகையரை தொடர்ந்து சிபாரிசு செய்தேன். அப்போதெல்லாம், எனக்கு எந்த கெட்ட பெயரும் வந்தது இல்லை.
87 வயதில், சினிமாவில் நடிப்பது எப்படி சாத்தியம்?
இரண்டு பைபாஸ் சர்ஜரி பண்ணிருக்கேன். தலைக்குள் ஒரு ஓட்டை போட்டு, மூளைக்குள் இருக்கும் ரத்தத்தை வெளியில் எடுக்கும் அறுவை சிகிச்சையும் எனக்கு நடந்துள்ளது. இப்போது வயதாகி விட்டது; இந்த வயதில் எனக்கு வாய்ப்பு வந்துள்ளது. என் பாட்டி, 98 வயது வரை இருந்தாங்க. அந்த மரபுவழி எனக்கும் வந்திருக்கும் போலிருக்கிறது.
நீங்கள் வக்கீலாக வேலை பார்த்தவர்; முக்கியமான வழக்கு ஏதாவது சொல்ல முடியுமா?
முத்துராமலிங்க தேவருக்கு, முதன்முதலில், ஜாமின் மனு போட்டது நான் தான். பரமக்குடியில் ரோட்டில் பார்த்தபோது, வண்டியை நிறுத்தி, அப்பாவை ஜாமின் மனு போட சொல்லுன்னு சொன்னார்.நான் வீட்டில் போய் அப்பாவிடம் இதை தெரிவித்தேன். அவரோ, நான் காங்கிரஸ்காரன், நான் எப்படி அவருக்கு ஜாமின் போட முடியும்? என்றார். வேறு வழியில்லாமல், நானே நேரடியாகச் சென்று, ஜாமின் மனு போட்டேன். அதற்கு பின், தமிழகம் முழுவதும் பிரபலமான வக்கீலாகி விட்டேன்.