சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் பல படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றிய தீபன், இயக்குநராக அறிமுகமாகும் படம் "மழைக்காலம்".
"மழைக்காலம்" என்றாலே மனசுக்குள் சாரலடிப்பதை உணர முடியும். அதைப்போலத்தான் இந்த கதையும். அன்றில் பறவை போல அழகான நட்பும், காதலும் கொண்ட காதலன் காதலி. இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தது போல் பொருத்தம். ஒருவரை தவிர்த்து இன்னொருவர் உயிர்வாழ்தல் சாத்தியமில்லை என்கிற அளவுக்கு அவர்களுக்குள் இறுக்கம். இருந்தாலும், அவர்களுக்குள் ஒரு வருத்தம். அந்த வருத்தம் என்ன...? அது எவ்வாறு களைகிறது என்பது தான் படத்தின் கதை.
படத்தின் நாயகனாக புதுமுகம் ஸ்ரீராம் அறிமுகமாகிறார். இவர் கூத்துபட்டறையில் பயிற்சி பெற்றவர். இவருக்கு ஜோடியாக "காதல்", "பேராண்மை" போன்ற படங்களில் நடித்த சரண்யா நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் தீபன். ஏ.ஆர்.ஸ்கிரீன்ஸ் சார்பில் ஏசுதாசன் தயாரிக்கிறார். ஜான்சன் இசையமைக்கிறார். அகிலன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்த "மழைக்காலம்".