கோர்ட்டில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு அதில் வரும் துட்டில் உல்லாச வாழ்க்கை வாழும் ஹீரோ! அவனுக்கு அந்த வாழ்க்கையையும் காட்டி அண்ணனாகவும் பாசம் பரிவு கேட்டுகிறார் ஒரு போலீஸ்காரர். இவர்களது வாழ்க்கையில் வில்லனாக வருகிறான், இவர்கள் மூலம் ஜாமீனில் வெளியே வரும் ஒரு குற்றவாளி.அது யார்? எப்படி..?ஏன்? எதற்கு...? என்பது தான் தொட்டுப்பார் படத்தின் மொத்தக் கதையும்.இதனூடே ஒரு அழகிய காதலையும், அந்த காதலுக்கு அடைக்கலம் தரும் ஒரு அன்பான குடும்பத்தையும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னையையும், அதை ஹீரோ எப்படி தீர்த்து வைத்து தீர்வு ஏற்படுத்துகிறார் என்பதையும் கலந்து கட்டி, கலக்கலாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் நந்து.
ஹீரோவாக புதுமுகம் விதார்த் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் நடித்திருக்கிறார். பக்கத்து வீட்டு பையன் மாதிரியான இவரது முகபாவம் பெரிய ப்ளஸ் பாயிண்ட். குடிகாரனாக ஊரில் ஊதாரியாக திரியும் போதம் சரி, போலீஸ்காரர் பி.எம்.சி.ஹனிப்பாவின் நட்பு கிடைத்து குற்றவாளிகளுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு வாழும் போதும் சரி, நகரத்திற்கு வந்து மதுக்கடையில் வேலைபார்த்து குடிகாரர்களின் அவலநிலை பார்த்து குடியை நிறுத்தி படிப்படியாக லட்சியத்தை நோக்கி பயணிக்கும் போதும் சரி பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் விதார்த்.பேஷ்..பேஷ்...
விதார்த் மாதிரியே மறைந்த வி.எம்.சி.ஹனிபா(இறப்பதற்கு முன் நடித்த படம் போலும்...)வும், அழகம்பெருமாள், அனுஹாசன் உள்ளிட்டவர்களும் இயல்பான நடிப்பால் நம்மை கட்டி போட்டு விடுகின்றனர்.மயில்சாமி, ஜெகன்,விதார்த் கூட்டணியின் மதுக்கடை காமெடிகளும் கலக்கல் ரகம். புதுமுக நாயகி லக்ஷனாவை விட ஒத்த ரீ-மிக்ஸ் பாடலுக்கு வரும் ரகசியா படம் முடிந்தும் மனதில் நிற்கிறார். அதற்காக லக்ஷனா நன்றாக நடிக்கவில்லை என்று அர்த்தமில்லை. ரகசியா நடனத்தில் அத்தனை நெளிவு சுளிவுகளை காண்பித்து கவிழ்த்தி விட்டார் என்பது தான் நிஜம்! இவர்கள் எல்லோரையும் விட வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் ஹீரோ ரமணா நச்! அதுவும் க்ளைமாக்ஸில் அத்தனை அயோக்கிய தனங்களும் செய்யும் ரமணா, ஓர் அரவாணி எனும் உண்மை தெரிய வருவது டிபரண்ட் டச்!
அனுஹாசன் பிரபல டாக்டர் என்பதை நம்ப முடியும் அளவிற்கு கூட அவரது கணவராக வரும் அழகம்பெருமாள் பிரபல வக்கீல் என்பதை நம்பமுடியவில்லை. அதுவும் தன் மனைவியை கெடுத்து விட்டதாக வில்லன் கோர்ட்டில் கூறுவதால் பிரபல வக்கீல், குடிகாரனாக மாறுவது ஹைலைட் காமெடி! இதுமாதிரி ஒரு மில லாஜிக் மீறல்கள் தவிர தொட்டுப்பார் மனதை தொடும் படம் தான்! சசிக்குமாரின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் தொட்டுப்பார் படத்தின் பெரும் பலம்.மொத்தத்தில் இயக்குநர் நந்துவின் இயக்கத்தில் தொட்டுப்பார்லாஜிக் மீறிய மேஜிக்! தொட்டுப்பார் ரசிகர்களின் மனதை தொடும்பார்!