
சர்வம் மாயா வெற்றியால் தூசு தட்டப்படும் நிவின்பாலியின் பேபி கேர்ள்
மலையாள திரை உலகில் இளம் நடிகர் நிவின்பாலி நடிப்பில் சமீபத்தில் "சர்வம் மாயா" என்கிற திரைப்படம் வெளியானது. ஹாரர் கலந்த செண்டிமெண்ட், காமெடி உள்ளடக்கிய படமாக வெளியான இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று நூறு கோடி வசூல் இலக்கையும் தொட்டது. கடந்த சில வருடங்களாகவே சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை ருசிக்காத நிவின்பாலிக்கு இந்த படம் மிகப்பெரிய ஆசுவாசத்தை தந்துள்ளது. இதற்கு முன்னதாக நிவின்பாலி பட வியாபாரங்கள் டல் அடித்ததால் ஏற்கனவே ரிலீஸுக்கு தயாராக இருந்த "பேபி கேர்ள்" திரைப்படம் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
தற்போது சர்வம் மாயா படத்தின் வெற்றியால் சூட்டோடு சூடாக "பேபி கேர்ள்" படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளை துவங்கியுள்ளனர். படம் விரைவில் வெளியாக இருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை அருண் வர்மா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிவின்பாலி ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் உதவியாளராக இன்னும் சொல்லப்போனால் ஆண் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனேகமாக பிப்ரவரி இறுதிக்குள்ளாக இந்த படத்தின் ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!