
உண்மையை படமாக்குவது சவால்: தி கோட் லைப் இயக்குனர் பிளெஸ்ஸி
இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜோர்டானில் நடந்தபோதுதான் கொரோனா தொற்று ஏற்பட்டு பிருத்விராஜ் உள்ளிட்ட 60 பேர் ஜோர்டான் நாட்டில் மாட்டி பின்னர் தனி விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவல் "ஆடுஜீவிதம்". வெளிநாட்டில் வேலை தேடி இடம்பெயர்ந்த இளைஞன் நஜீப்பின் வாழ்க்கையின் உண்மைக் கதையைதான் இந்த நாவல் விளக்குகிறது. இந்த கதையே படமாகி உள்ளது. படத்திற்கு முதலில் "ஆடுஜீவிதம்" என்றே பெயர் வைத்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளிவர இருப்பதால் "தி கோட் லைப்" என்று டைட்டில் வைத்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் பிளெஸ்ஸி கூறும்போது “உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் நிச்சயம் ஏதேனும் ஒரு புள்ளியில் இந்தப் படத்தின் கதையைத் தங்களோடு இணைத்துப் பார்ப்பார்கள். அப்படியான கதையை உண்மைத் தன்மை மாறாமல் சினிமாவாக்க வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தில் நான் சந்தித்த மிகப்பெரிய சவால். இந்த நாவல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.
ஒருவருக்கு நம்ப முடியாத ஒன்று நடந்ததை ஒவ்வொரு கணத்திலும் காட்டி பார்வையாளர்களை ஈர்க்க விரும்புகிறேன். புனைவு கதைகளை விட உண்மை ஒருபோதும் விசித்திரமாக இருந்ததில்லை. கதை சொல்லும் உண்மைத் தன்மையின் பிரம்மாண்டம் திரையரங்குகளில் பார்வையாளர்கள் படம் பார்க்கும் போது தெரிய வரும். இந்த மாபெரும் படைப்பை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!