
பிளாஷ்பேக் : அன்னக்கிளியை வெற்றிக் கிளியாக்கிய அந்த 3 டிக்கெட்
இந்த படத்தின் கதாசிரியர் ஆர்.செல்வராஜ், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திற்கு ராசய்யாவை அறிமுகப்படுத்தியதும், அவர் மேஜையில் தட்டியே "அன்னக்கிளி உன்னை தேடுதே" என்று இசை அமைக்க மருத்துவச்சி, செவிலித்தாய் என்று பெயர் வைக்கப்பட்ட படம் "அன்னக்கிளி" ஆனதும், முதல் நாள் ரிக்கார்டிங்போது மின்சாரம் தடை பட்டதும் உலகம் அறிந்த ஒன்று. ஆனால் மூன்றே மூன்று டிக்கெட்தான் அன்னக்கிளியை வெள்ளி விழா நாயகியாக்கியது என்பது பலரும் அறியாத ஒன்று.
படம் வெளியானதும் பெரிய வரவேற்பில்லை. பல ஏரியாக்கள விற்கவில்லை. தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலமும், கதாசிரியர் ஆர்.செல்வராஜூம் தியேட்டர் விசிட் அடித்தார்கள். பாதி தியேட்டர்கூட நிரம்பவில்லை. ஒரே ஒரு தியேட்டர் மட்டும் நிரம்பியிருந்தது. அந்த தியேட்டர் மேனேஜரை அழைத்து "ஹவுஸ்புல்" போர்ட் மாட்டச் சொன்னார்கள். இன்னும் 3 டிக்கெட் பாக்கியிருக்கிறது. அதுவும் விற்றால்தான் ஹவுஸ்புல் போர்ட் போடுவோம் என்று கூறிவிட்டார்.
கதாசிரியர் செல்வராஜ் தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று 30 ரூபாய் எடுத்து வந்து அந்த 3 டிக்கெட்டையும் வாங்கினார். "ஹவுஸ்புல்" போர்ட் மாட்டப்பட்டது. அந்த போர்டை தியேட்டரோடு புகைப்படம் எடுத்து மறுநாள் பத்திரிகையில் விளம்பரம் செய்தார்கள். அதன்பிறகு படமும் பிக்கப் ஆகி அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் போர்ட் மாட்டப்பட்டது. இளையராஜாவின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பரவியது. அன்னக்கிளி வெள்ளி விழா நாயகியானாள். இன்று அவளது பொன்விழா ஆண்டு நிறைவு பெறுகிறது. இசையமைப்பாளர் இளையராஜாவிற்கும் இது பொன்விழா ஆண்டு.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!