
நான் நடிக்க வேண்டிய கதையில் என் மகன் நடிக்கிறார் : விஜய் சேதுபதி
விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது: என்னுடைய மகனைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியவில்லை. அனல் அரசுவிற்கு மிகப் பெரிய நன்றி. 2019ல் எனக்கு அனல் அரசு கதையை சொன்னார், ஆனால் அப்போது அதனை பண்ண முடியவில்லை. பிறகு சூர்யா இந்த கதையில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார், எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது.
என் பையனின் முடிவுகளை அவரே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சூர்யாவை கதை கேட்கச் சொன்னேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை. என்னுடைய சினிமா அனுபவங்களை எப்போதும் என் குடும்பத்தில் பகிர்ந்து கொள்வேன். அவருடைய விஷயங்களை அவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் படத்தின் பூஜை மற்றும் மற்ற விஷயங்கள் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை. சூர்யாவிடம் அவ்வப்போது மகிழ்ச்சியாக உள்ளதா? என்று கேட்பேன். அவரும் உள்ளது என்பார்.. அவ்வளவுதான்.
அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும் நன்றி. அனல் அரசு மூலமாக அவர் சினிமாவில் அறிமுகமாவது ஒரு பாக்கியம் என்று நினைக்கிறேன். இங்கே வந்து சூர்யா அவர்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். படம் நன்றாக வந்துள்ளது. என்னை விட என் மனைவிக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணம் இது. என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!