
பிளாஷ்பேக் : தலைப்பை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்
அந்தக் காலத்தில் திகில், திரில்லர் படங்களை தந்து கொண்டிருந்த வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கி நடித்த படம் "கைதி". இந்த படத்தில் அவருடன் எஸ்.ஏ.நடராஜன், ரேவதி, மீனாட்சி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அமெரிக்க படமான "டார்க் பேஜஸ்" என்ற படத்தின் கதையை தழுவி இது எடுக்கப்பட்டது. செய்யாதா குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் நாயகன், சிறையில் இருந்து தப்பி உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பதுதான் கதை.
இந்த படத்தை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த நிறுவனம் எந்த படத்தை தயாரித்தாலும் படத்தின் டைட்டிலுக்கு முன்னால் "ஜூபிடர் பிலிம்சின்.." என்ற வாக்கியத்தை சேர்த்துக் கொள்ளும், இந்த படத்தையும் "ஜூபிடர் பிலிம்சின் கைதி" என்றே விளம்பரம் செய்தது.
ஆனால் இந்த படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு "ரத்தம்". இதனால் படத்தின் துவக்க நாளன்று "ஜூபிடர் பிலிம்சின் ரத்தம் விரைவில் வருகிறது". என்ற வாக்கியத்துடன் பத்திரிகைகளில் போஸ்டர்களில், சுவர்களில் விளம்பரம் செய்யப்பட்டது.
இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். "என்னது ஜூபிடர் பிலிம்ஸின் ரத்தமா? ஏன் என்னாச்சு அந்த நிறுவனத்திற்கு?" என்றே புரிந்து கொண்டனர். இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு படத்தின் தலைப்பை மாற்றுமாறு கடிதங்கள் குவிந்தன.
"ஜூபிடர் பிலிம்சின் ரத்தம் விரைவில் வருகிறது" என்பதை மக்கள் வேறு மாதிரியாக புரிந்து கொண்டார்கள் என்பதை அறிந்த தயாரிப்பு நிறுவனம் உடனடியாக படத்தின் தலைப்பை "கைதி" என்று மாற்றியது. அடுத்த சில நாட்களில் மறு விளம்பரம் செய்தது. படமும் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!