
திரிஷ்யம் 3 படப்பிடிப்பு விரைவில் துவக்கம்: மோகன்லால் கொடுத்த அப்டேட்
மலையாள திரையுலகில் முதன்முறையாக 50 கோடி என்கிற வசூல் இலக்கை தொட்ட படம் "திரிஷ்யம்". இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்த சில வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானாலும் முதல் பாகத்தைப் போலவே மிகுந்த வரவேற்பை பெற்றது. திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து சமீபத்தில் ஜீத்து ஜோசப் கூறுகையில், ""மூன்றாம் பாகத்தை எப்படி முடிப்பது என்பதை மட்டும் ஏற்கனவே முடிவு செய்து விட்டேன். அது மோகன்லாலுக்கும் பிடித்து விட்டது. அதே சமயம் இடையில் உள்ள விஷயங்களை நிரப்புவதில் தான் மிகப்பெரிய சிரமம் இருக்கிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பின்னணி பாடகி சித்ராவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயத்தில் இருந்து இந்த படத்தின் ஆரம்பத்திற்கான ஒரு ஐடியா எனக்கு கிடைத்து விட்டது. இனி மற்ற இடங்களை நிரப்ப வேண்டும்,"" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது மோகன்லால் கூறியதாவது: திரிஷ்யம் படம் இந்திய அளவில் பிரபலமானது. குஜராத்திற்கு நான் சென்றிருந்தபோது, திரிஷ்யம் படத்தில் நடித்தவர் என்றே பலரும் பேசினர். அந்தளவிற்கு திரிஷ்யம் படம் பேசப்பட்டது. "திரிஷ்யம் 2" பார்த்த பிறகு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மலையாள படங்களை பார்க்க துவங்கினர். எனவே, மலையாள சினிமாவை பான் இந்தியா அளவிற்கு கொண்டு சென்றதில் திரிஷ்யம் முக்கிய பங்காற்றியது. "திரிஷ்யம் 3" படத்தின் பணிகளை விரைவில் துவக்க திட்டமிட்டுள்ளோம்"" என்றார். இதனால் திரிஷ்யம் 3 படத்தின் படப்பிடிப்பு 2025ல் துவங்குவது உறுதியாகியுள்ளது.
மோகன்லால் நடித்து, முதன்முறையாக இயக்கியுள்ள "பரோஸ்" திரைப்படம் நாளை (டிச.,25) ரிலீசாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!