
அமரன் படத்தை பாராட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின்
உலகம் இப்படம் வெளியாகி உள்ள நிலையில் நேற்று(அக்., 30) மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கு இந்த படத்தின் சிறப்பு காட்சியை திரையிட்டு காண்பித்துள்ளனர். இதில் அவருடன் இணைந்து ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தை பார்த்த மு.க. ஸ்டாலின் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் படம் பார்த்த பின் அலைப்பேசியில் நடிகர் கமலை தொடர்பு கொண்டு படம் குறித்து தனது பாராட்டை தெரிவித்தார் முதல்வர்.
எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‛‛நண்பர் கலைஞானி கமல்ஹாசனின் அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல் - திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜன் - திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய்பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும், நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் பெரிய சல்யூட்"".
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் பார்க்க வேண்டும்
சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்களுடன் அமரன் படத்தை பார்த்தார் சிவகார்த்திகேயன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. படத்தில் நிறைய இடங்களில் கைதட்டல்கள் வந்தது; மக்கள் "அமரன்" படத்தை பாராட்டி வருவது மகிழ்ச்சி. படத்தை நிச்சயம் குழந்தைகள் பார்க்க வேண்டும். நிஜ சூப்பர் ஹீரோவின் கதை தான் "அமரன்""" என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!