
மக்களின் கண்ணீருடன் விடைபெற்றார் கருப்பு நிலா : 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடல் நல்லடக்கம்
அரசு மரியாதை
வழிநெடுகிலும் தொண்டர்களும், ரசிகர்களும் வெள்ளம்போல் அவருக்கு மரியாதை செலுத்தினர். கோயம்பேடில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை செய்தனர். சந்தனபேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், புதுச்சேரி முதல்வர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இறுதி சடங்கில் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையிலும், அலுவலகம் முன்பு கூடியிருந்த கூட்டத்தினர் கண்ணீர் மல்க விஜயகாந்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.
விஜயகாந்த் கனவை வெற்றி பெற செய்வோம் : பிரேமலதா
விஜயகாந்த்தின் கனவை நிச்சயமாக வெற்றி பெற செய்வோம் என தே.மு.தி.க., பொது செயலாளர் பிரேமலதா கூறினார். மேலும் அவர் கூறுகையில், இறுதிச்சடங்கிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்த தமிழக அரசுக்கு நன்றி.
இது வரையில் தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத இடத்தை கொடுத்துள்ளீர்கள். 2 நாட்களில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற அன்பை வெளிப்படுத்தும் கூட்டத்தை தமிழகம் முதன் முறையாக சந்திக்கிறது. இதற்கு காரணம் கேப்டன் செய்த தர்மம் தான் காரணம் என அவர் தெரிவித்து உள்ளார்.
போலீசாருக்கு ராயல் சல்யூட்
விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்திய அனைவருக்கும் நன்றி. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த போலீசாருக்கு ராயல் சல்யூட் என்றார்.
வானத்தை போல மனம் படைத்த விஜயகாந்த் தேடி வந்தவர்களின் பசியை போக்கி, ஏழை மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்த இந்த சொக்க தங்கத்திற்கு நிச்சயம் சொர்க்கத்தில் இடம் இருக்கும். அப்படியே மக்கள் மனதிலும் நிலைத்து நிற்பார்.
போய் வாருங்கள் கேப்டன்...! - இந்த உலகம் உள்ள வரை உங்கள் பெயர் நிலைத்து நிற்கும்!






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!