
சினிமா விழாக்களில், இனி பார்த்திபன் விரிவாகப் பேச மாட்டாரா?
பொதுவாக சினிமா விழாக்களில் பார்த்திபன் கலந்து கொண்டு பேசினால் அவருடைய சுவாரசியமான பேச்சைக் கேட்கப் பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். ஆனால், நேற்றைய "பொன்னியின் செல்வன்" நிகழ்வில் பார்த்திபன் மிகச் சுருக்கமாக சில நிமிடங்கள் மட்டுமே பேசி நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றது பலருக்கும் ஏமாற்றத்தைத் தந்தது. அது பற்றி அவரிடம் சிலர் கேட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக நேற்றைய நிகழ்வில் அவர் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “வேற சட்டையில் நேற்று வழக்கமாக விரிவாகப் பேசும் சட்டையை மாற்றி, சுருக்கமாக பேச-விருந்தினரில் பலர் வருந்தினர். சுவாரஸ்யமாக பேச விளைய, அது சில நேரம் நல் நட்பை இழக்க நேரிடுகிறது. தானுன்டு தன் வேலையுண்டு என்றிருக்க நினைக்கிறது. இன்று மதுரையில், என்றோ எழுதிய கவிதை நினைவில்,” என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
"பொன்னியின் செல்வன்" பட வெளியீட்டிற்கு முன்தினம் நடைபெற்ற விழாவில் பார்த்திபன் கலந்து கொண்டு பேசுகையில், “நானே வருவேன்"ன்னு அடம் பிடிச்சிதான் இன்னைக்கு இங்க வந்தேன்,” என தனது பேச்சை ஆரம்பித்தார். "பொன்னியின் செல்வன்" படத்துடன் போட்டி போட்டு தனுஷ் நடித்த "நானே வருவேன்" படம் வெளிவந்ததைப் பற்றித்தான் பார்த்திபன் அப்படி சுவாரசியமாகப் பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் அந்தப் பேச்சு அவருக்கு சில நட்பை இழக்க வைத்திருக்கிறது என்பது இன்றைய அவரது பதிவைப் பார்த்தாலே புரியும். "தானுன்டு, தன் வேலையுண்டு" என்று குறிப்பிட்டிருப்பது "நானே வருவேன்" படத்தின் தயாரிப்பாளரான "தாணு"வாகக் கூட இருக்கலாம்.
பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த "இரவின் நிழல்" படத்தைப் பார்த்து வியந்து அதை தமிழகம் முழுவதும் வெளியிட்டவர் தாணு. அவர் தயாரித்த "நானே வருவேன்" படம் பற்றி பார்த்திபன் பேசியதால் அந்த நல் நட்பைத்தான் அவர் இழந்துவிட்டாரோ என யோசிக்க வைக்கிறது. அப்படியென்றால் சினிமா விழாக்களில் இனி பார்த்திபனின் சுவாரசியப் பேச்சு ஒலிக்காதா ?.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!